வியாழன், 30 ஆகஸ்ட், 2012

நல்லா கேட்டாருயா கேள்வி


சில நாட்களுக்கு முன்பு  சென்னைக்கு வர ரயிலைப் பிடிப்பதற்காக தேவகோட்டையில் இரவு 9.30 மணிக்கு பஸ் ஏறினேன். பஸ் ஸ்டார்ட் ஆனதும்  சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் அவசரமாக அதைக் கீழே போட்டு மிதித்து விட்டு பஸ்சுக்குள் ஏறினார் .அவருக்குத் தெரிந்தவர் போலும் ஒருவர்,

' ஒரு சிகரெட் போச்சே' என்று ஏதோ சொன்னார் போலிருக்கிறது.' 

'அதனால என்ன ? இன்னொன்னு வாங்கிக்கிட்டா போச்சு.என்ன காசா இல்ல ?' 

என்று சொல்லியபடியே உள்ளே வந்தவர் என் பக்கத்து இருக்கையில் அமர்ந்தார். லேசாக அவரிடமிருந்து பழ வாசனை வந்தது.

' ஆமா, உங்களுக்கு என்ன ? பேங்குக் காரங்ககிட்ட காசுக்கா பஞ்சம் ..' 

என்று பின் பக்கம் அந்த தெரிந்தவரிடமிருந்து அடுத்த தாக்குதல் வந்தது. அவ்வளவுதான்.  சிகரட்டை இழந்தவர் கொதித்தெழுந்து விட்டார்


.' ஏம்ப்பா..பேங்குல வேலை செஞ்சா ..? ஆயிரம் ரூபாயும் ஐநூறு ரூபாயும் கட்டுக்கட்டா இருக்குன்னு தெனம் ஒன்னத் தூக்கி பாக்கட்டுல போட்டுக்கிட்டு வந்துக்கிட்டு இருக்கமா..? நாங்க பணத்த பாக்கத்தான் முடியும்.தொடத்தான் முடியும். பத்துக்காசு ஆனாலும் கணக்கு டேலி ஆனாத்தான் பேங்க விட்டு வெளிய வர முடியும்.சம்பளக்காசு மட்டும்தாய்யா நாங்க வாங்குறோம். உழைச்சு  சம்பாதிச்ச காசத்தான் செலவு பண்றோம்.பேசக் கிளம்பிட்டாய்ங்க ...'  என்று வறுத்தெடுக்க பின்னாலிருந்து சத்தமே இல்லை.

எதிர்த் தாக்குதல் எதுவும் இல்லாததால் சலிப்படைந்துபோனவர் என்னிடம் பஞ்சாயத்து சொல்லத் துவங்கினார்.நான் தலையாட்டிக் கொண்டே வந்தேன்.

கொஞ்ச நேரத்தில் பழ வாசனைக்காரருக்கு இன்னொரு பிரச்னை வந்து மாட்டியது.

காரைக்குடிக்கு 12 ரூபாய் டிக்கெட்டுக்கு கண்டக்டர் இரண்டு ரூபாய் சில்லறையாகக் கேட்டுச் சத்தம் போட, சில்லறை கொடுத்து டிக்கட்டை வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டே பேங்க்காரர் ஆரம்பித்தார்.

' ஏய்யா ..? இந்தச் சில்லரையை எல்லாம்  எங்க கொண்டுபோயி வைக்கிறீங்க? .சில்லரையா சேக்குறீங்க ..காலையில வரும்போது வெறும் பையோட வர்றீங்க.பிரைவேட் பஸ்ஸுதான்னு இல்ல.கவர்ன்மன்ட் பஸ்ஸுக்காரனும் காலையில வெறும் பையோடதான் வர்றான்.வாங்குற சில்லரை எல்லாம் எங்கதான் போகுது..? அட நீங்க மட்டும் இல்ல, திருப்பதி உண்டியல்லையும் பழனி உண்டியல்லையும் விழுகுற அவ்வளவு சில்லரையும்  என்ன ஆகுது.?..உருக்குறாய்ங்களா..? பேங்குலயும் நாங்க சில்லறைய வாங்கறதில்ல. அப்ப எங்கதாய்யா போகுது இந்த சில்லறை..? ஏன்சார் ,நான் கேக்குறது சரிதானே ..? '

நான் சரிதான் என்பதுபோல தலையாட்டி வைத்தேன்.வண்டி தேவகோட்டை ரஸ்தாவை நெருங்கும்போது ஏதோ நினைவு வந்ததுபோல அவர் என்னிடம் ஒரு விஷயம் கேட்டார்.

' சார். நான் டிக்கட் வாங்கிட்டேனா..? '

' ம் ,,வாங்கிட்டீங்களே .வாங்கி சட்டைப்பையிலே வச்சுட்டீங்க  பாருங்க.'

' நல்லவேளை .காப்பாத்தினீங்க [? ] சார். டிக்கட்  வாங்காமப் போயி அசிங்கமாப் போயிரும்ல. பின்னால இந்தப்பய பேச்சுக் குடுத்துக்கிட்டே வந்தானா [ ? ] ...அதான் லேசா மயங்கிட்டேன்.'

எப்படி இருந்தாலும் அவர் கேட்ட கேள்விகள் எல்லாமே சரியானதுதான் என்றே எனக்குத் தோன்றியது.அடுத்து அவர் பேச ஆரம்பிப்பதற்க்குள் தேவகோட்டை ரஸ்தா வந்துவிட்டது. பஸ் நிற்க நான் இறங்கிவிட்டேன்..அடுத்து பேங்க்காரர் பக்கத்து இருக்கையில் யார் வந்து உட்கார்ந்தார்கள் என்று தெரியவில்லை.





' இளைய ராஜாவிடம் கதை சொன்னேன் '...படிக்க சொடுக்கவும் 
http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_1294.html



கே.பி.சுந்தராம்பாள் - அபூர்வ புகைப்படங்கள்






பழம்பெரும் இசைக்கலைஞர் கே.பி.சுந்தராம்பாள் பற்றிய ஆவணப்படத்துக்காக  நாங்கள் சேகரித்த இந்த அபூர்வ புகைப்படங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்  






புதன், 15 ஆகஸ்ட், 2012

உலகத் திரைப்பட அறிமுகம் - To End All Wars







இரண்டாம் உலகப்போரில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படை யிலான படம் இது. கதை முழுவதும் துடிப்பான இளம் போர்வீரனான கேப்டன் எர்னஸ்ட்  கார்டனின் பார்வையில் சொல்லப் படுகிறது.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் கை ஓங்கியிருந்த நேரம். சிங்கப்பூரில் சிறைப்பிடிக்கப் பட்ட இங்கிலாந்து வீரர்கள் தாய்லாந்து கொண்டு செல்லப்பட்டு காஞ்சனபுரி கேம்ப்பில் அடைக்கப்படுகிறார்கள். அங்கே இரண்டாம் நிலைப் பொறுப்பில் இருக்கின்ற மேஜர் ஹிடோ அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்கிறான்.இங்கிலாந்து வீரர்கள் தப்பிச்செல்ல மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்து அவர்களை மேலும் கடும் தண்டனைக்குள்ளாக்குகின்றன.அங்கே மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகின்ற டகாஷி என்ற இளைஞன் அவர்களிடம் காட்டுகின்ற அன்பு மட்டுமே அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.வெற்றி மமதையில் தங்களின் பலத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுவிட்ட ஜப்பானியர்கள் மிகக் கடினமான ஒரு ரயில் பாதையை ஆங்கிலப் போர்க்கைதிகளைக் கொண்டே நிர்மாணித்துவிடத் திட்டமிடுகிறார்கள்.பட்டினியையும் நோயையும் மரணத்தையும் எதிர்கொண்டு ஆங்கில வீரர்கள் அதையும் செய்து முடிக்கிறார்கள்.

எல்லா நம்பிக்கைகளையும் இழந்துவிட்ட நிலையில் ஒருநாள் விமானமொன்று வானத்திலிருந்து குண்டு மழை பொழிகிறது.அந்தத் தாக்குதலில் ஆங்கிலேயர்களும் உயிரிழக்கிறார்கள்.ஆனால் அடுத்தநாள் மற்றொரு விமானம் துண்டுப் பிரசுரங்களைப் போட்டு ஜப்பானிய அரசு சரணடைந்துவிட்ட செய்தியை அறிவிக்கிறது. தங்களுக்கும் தோல்வி உண்டு என்பதை மிகத் தாமதமாக உணர்ந்த ஜப்பானியர்கள் முகாமை விட்டு வெளியேறிவிட நேசநாடுகளின் படைகள் உள்ளே நுழைகின்றன.

கொடூரமான மரணங்களைப் பார்த்து மனம் கொந்தளித்துப் போன ஆங்கிலப் படைகளின் கமாண்டர் தங்களைச் சித்திரவதை செய்த ஹிடோவைப் பிடித்து அவனுடைய தலையைக் கொய்ய முயல கேப்டன் எர்னஸ்ட் அதைத் தடுத்து மனிதாபிமானத்தின் மகத்துவத்தை கமாண்டருக்கு எடுத்துரைக் கிறான்.தன தவறை உணர்ந்து கமாண்டர் ஹிடோவை ஒரு போர்வீரனுக்கு உரிய கவுரவத்துடன் நடத்த முடிவு எடுப்பதற்குள்  ஹிடோ உடைவாளால் தன்னைத் தானே குத்திக்கொண்டு இறந்து போகிறான். மனித நேயத்தையே  மறக்கச் செய்கின்ற போர்களின் கொடுமையை உணர்ந்து நிலை குலைந்து  போன அந்த கமாண்டர் எதிரியான ஹிடோவைக் கட்டித்தழுவிக் கொண்டு  கதறி அழுகின்றான் .

55 ஆண்டுகளுக்குப் பின்பு எர்னஸ்ட் கார்டனும் டகாஷியும் தாய்லாந்தின் மரண ரயில்பாதையின் கல்லறையில் நண்பர்களாகச் சந்திக்கிறார்கள். படத்தின் இறுதியில் காஞ்சனபுரி முகாமில் உயிர் பிழைத்து நாடு திரும்பிய அதே இங்கிலாந்து வீரர்கள் முதியவர்களாக அணிவகுத்து வருவது மனதை நெகிழச் செய்கிறது.