வியாழன், 31 ஜனவரி, 2013

100 ஆண்டு தமிழ் சினிமா - பாகம்-2







அபூர்வப் புகைப் படங்களையும் காட்சிகளையும் கொண்டு ஆவணப் படமாக உருவாகிக் கொண் டிருக்கின்ற 100 ஆண்டு தமிழ்த் திரையின் வரலாறு இங்கே எழுத்துருவாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.


100 ஆண்டு தமிழ் சினிமா 


இளையராஜா 

1976 ஆம் ஆண்டில் 'அன்னக்கிளி' திரைப் படத்தில் இசையமைப்பாளராகிய ராசையா என்ற இளையராஜா மண் மணக்கும் கிராமத்து இசையை அறிமுகப்படுத்தி திரைப்பட ரசிகர்களை தன வயப்படுத்தினார். பின்னாட் களில் நவீன மற்றும் சாஸ்திரிய இசையிலும் வியத்தகு வித்தைகள் புரிந்து 'மாஸ்ட்ரோ'வாக இன்றளவிலும் அதே சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கிறார்.

சங்கர் -கணேஷ்,வி.குமார்,கங்கை அமரன்,சந்திரபோஸ் ஆகிய இசையமைப்பாளர்களின் பங்களிப்பும் சீர்காழி கோவிந்த ராஜன்,ஜேசுதாஸ்,மலேசியா வாசுதேவன்,டி.கே.கலா போன்ற பாடகர்களின் செல்வாக்கும் குறிப்பிடத் தக்கதாக இருந்தது.


கே.பாலச்சந்தரைத் தொடர்ந்து 1977ல் '16 வயதினிலே' படம் மூலமாக தமிழ்த் திரையுலகத்துக்கு வந்த தெற்கத்தி மண்ணின் கலைஞன் பாரதிராஜா தென் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வியல் கலாசாரத்தை வண்ணத் திரைப் படமாக்கிப் படைத்து பெரும் புரட்சியைத் தோற்றுவித்தார்.

16 வயதினிலேயின் கதையமைப்பும் அதில் கமல் ஏற்று நடித்த வித்தியாசமான கதாபாத்திரமும் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது.

பாரதிராஜாவும் சிவாஜியும் இணைந்து உருவான 'முதல் மரியாதை' உலகத் திரைப்பட வரிசையில் இடம் பெற்றது. பாரதியின் சீடன் பாக்கியராஜ் புத்திசாலித்தனமான திரைக் கதையாலும் சாதுர்யமான வசனங்களாலும் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றார்.



மகேந்திரன் 

1978 ஆம் ஆண்டில் வெளிவந்த 'முள்ளும் மலரும்' திரைப்படம் மகேந்திரன் என்ற மகத்தான படைப்பாளியை உலகுக்குத் தந்தது.மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்', 'நண்டு'போன்ற படங்கள் மனித உணர்வுகளை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி பார்வையாளருக்கு புதிய திரை அனுபவங்களைத் தந்தன.

1979 ஆம் ஆண்டில் 'அழியாத கோலங்கள்' படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்துக்கு அறிமுகமான பாலு மகேந்திரா 'மூடுபனி',மூன்றாம் பிறை','வீடு', சந்தியா ராகம்' போன்ற திரைக் காவியங்களால் சினிமாவின் முப்பரிமாணங்களை வெளிப் படுத்தி அழியாப் புகழ் பெற்றார்.


.'தூரத்து இடிமுழக்கம்' திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்த கருப்பு நிற இளைஞர் ஒருவர் சினிமாவின் நிறக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்து வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்தார்.மக்கள் ஆதரவோடு அரசியலில் ஈடுபட்டு தற்போது தமிழ்நாடு சட்டசபை எதிக்கட்சித் தலைவராக இருக்கின்ற விஜயகாந்த்தான் அவர்.


'இது ஒரு பொன்மாலைப் பொழுது' என்னும் கவித்துவமான வரிகளோடு 1980ஆம் ஆண்டில் ஒரு கரிசல் காட்டிலிருந்து தமிழ்த் திரைக்கு வருகை தந்த வைரமுத்து ஏறத்தாழ 5800 பாடல்களை எழுதி இந்தியாவிலேயே முதல்வராக ஆறு தேசிய விருதுகளைப் பெற்று 'கவிப்பேரரசு'வாகத் திகழ்கிறார்.'


1981 ஆம் ஆண்டில் வெளியான பாரதிராஜாவின் ;அலைகள் ஓய்வதில்லை' ஆழமான காதல் உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியது.அந்தப் படத்தில் அறிமுகமான கார்த்திக் பின் வந்த காலத்தில் உணர்வு பூர்வமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து நவரச நாயகனானார்.


ஸ்டுடியோ வட்டாரத்துக்குள் சுற்றிக்கொண்டிருந்த தமிழ் சினிமா பாரதிராஜாவின் வரவிற்குப் பிறகு கிராமங்களை நோக்கிப் பயணப்பட்டது.பொள்ளாச்சியும் திருநெல்வேலியும் தேனியும் வெளிப்புறப் படப்பிடிப்புக் களங்களாகின.


இந்தக் காலக்கட்டத்தில் விஜயகுமார், சத்யராஜ், மோகன், பிரபு,முரளி, அர்ஜுன், சரத்குமார்,நிழல்கள் ரவி போன்ற கதா நாயகர்களும் சுஜாதா, ரேவதி, சரிதா, குஷ்பு, அம்பிகா, ராதா, கவுதமி சில்க் ஸ்மிதா போன்ற கதாநாயகிகளும் எஸ்.வி.சேகர், சுருளிராஜன் ஆகிய நகைச்சுவை நடிகர்களும் புகழ் பெற்றுத் திகழ்ந்தார்கள்.


1982 ல் ஹரிஹரன் இயக்கிய 'ஏழாவது மனிதன் ' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான ரகுவரன் தனது தனித்துவமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்து பல மொழிப் படங்களில் நடித்து அண்மையில் இயற்கை எய்தினார்.


1983 ஆம் ஆண்டில் சாலையில் தான் கண்ட ஒரு பள்ளி மாணவியை தன படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார் பாரதிராஜா.அவரது தேர்வு வீண் போகவில்லை.ஆஷா என்ற அந்தப் பெண் ரேவதியாக 'மண்வாசனை'யில் அறிமுகமாகி சிறந்த நடிப்பால் தமிழ்த் திரையுலகில் தனியிடத்தைப் பிடித்தார்.சினிமாவில் முதிர்ந்த அனுபவத்தோடு தற்போது இயக்குனராகவும் பரிணமித்திருக்கிறார். 

மணிரத்னம் ,எஸ்.ஏ .சந்திரசேகர், மணிவண்ணன்,  ஆர்.சுந்தர ராஜன்,ஆர்.கே.செல்வமணி,விக்ரமன்,டி .ராஜேந்தர்,மனோபாலா, பாசில்,எஸ்.பி.முத்துராமன்,பி.வாசு, விசு, ஆர்.வி.உதயகுமார், கே.எஸ்.ரவிகுமார்,ஷங்கர் ஆகிய திறமையாளர்கள் 80 மற்றும் 90 ஆம் வருடங்களில் தமிழ்த் திரையுலகில் கோலோச்சி சிறந்த படங்களை இயக்கினார்கள்.


1985 ல் வெளியான 'கன்னிராசி' வெற்றிபெற்று பாண்டிய ராஜன்'என்ற திறமைசாலியைத் தமிழ்த் திரைக்குத் தந்தது. பாண்டியராஜன் கதாநாயகனாகவும் வெற்றி பெற்று சிறந்த இயக்குனர்-நடிகராகத் திகழ்ந்தார்.


1986 ஆம் ஆண்டில் 'ஊமைவிழிகள்' படத்தின் மூலமாக நிகழ்ந்த அரவிந்தராஜ், ஆபாவாணன் போன்ற திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பிரவேசம் தொழிநுட்ப ரீதியாக ரசிகர்களிடையே பிரமிப்பையும் வரவேற்பையும் ஏற்படுத்தியது. 


'மவுனராகம் ','நாயகன்','அக்னி நட்சத்திரம்' ,'அஞ்சலி' ,தளபதி', 'ரோஜா',போன்ற மணிரத்னத்தின் படங்களும் 'ஜென்டில்மேன்', 'காதலன்',''இந்தியன்',ஜீன்ஸ்','முதல்வன்' போன்ற ஷங்கரின் படங்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஆங்கிலப் படங் களுக்கு இணையான பிரம்மாண்டத்தைக் காட்சிப்படுத்தி பிரமிப்பை ஏற்படுத்தின.


1987 ல் வெளியான மணிரத்னத்தின் 'நாயகன்' கமலஹாசனுக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது.இந்தப் படத்தில் ஒரு சிறப்பான பாத்திரத்தை ஏற்றிருந்த பீரங்கி மூக்கு நாசர் அனைவராலும் கவனிக்கப்பட்டு சிறப்பான எதிகாலத்தைப் பெற்றார்.


தமிழ்நாடு,இலங்கை,மலேசியா,சிங்கப்பூர் ஆகிய இடங்களை மட்டுமே கொண்டிருந்த தமிழ் சினிமாவின் வர்த்தகத் தொடர்பு இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களால் இங்கி லாந்து,அமேரிக்கா, கனடா நார்வே என உலக அளவில் விரிவடைந்தது.

'மவுனராகம்' படத்தின் மூலமாக அறிமுகமான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் முப்பரிமான வித்தைகள் புரிந்தார்,அது மட்டுமல்லாமல் இன்றைய தமிழ்த் திரையின் வெற்றிகரமான ஒளிப்பதிவாளர்கள் பலரும் பயின்ற பல்கலைக் கழகமும் அவரே.


1989 ல் வெளியான 'புதியபாதை'யில் முற்றிலும் புதியதான கதைக்களத்தைப் படைத்து இயக்குனர்-நடிகர் ஆர்.பார்த்திபன் அனைவரையும் வியக்க வைத்தார்.


90 ஆம் ஆண்டுகளில் தமிழ்த் திரையுலகின் ரத்த நாளங்களில் இளரத்தம் புகுந்து புத்துணர்ச்சியும் அதன் மூலமாக புதிய சிந்தனைகளும் உருவானது என்று சொல்லலாம். 

விஜய்,அஜீத்,அரவிந்தசாமி, பிரபுதேவா,ராஜ்கிரண் ஆகிய கதாநாயகர்களும் சீதா,சிம்ரன்,மீனா,தேவயாணி,நக்மா ஆகிய கதாநாயகிகளும் ராஜீவ் மேனன்,கஸ்தூரிராஜா,சுந்தர்.சி.,செல்வா ஆகிய இயக்குனர்களும் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் திரை வானில் தோன்றினார்கள்.


1991 ல் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' யில் ஒரு பாடல் காட்சியில் நடித்து திரை வாழ்க்கையைத் தொடங்கிய வடிவேலு ஷங்கரின் 'காதலன்' படத்தின் மூலமாகத் திருப்பம் பெற்று தனது ஜனரஞ்சகக் காமெடி மூலமாகப் புகழ் பெற்று விரைவில் நாட்கணக்கில் ஊதியம் பெரும் சகாப்தத்தைத் துவக்கி வைத்தார்.


'புரியாத புதிர்' படத்தை இயக்கி தனது கலைப்பயணத்தை துவங்கிய கே.எஸ்.ரவிகுமார் இன்று மிக வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக உலா வருகிறார்


ஏ.ஆர்.ரகுமான் 

1992 ல் வெளிவந்த 'ரோஜா' திரைப்படத்தின் 'சின்ன சின்ன ஆசை' பாடல் உலகமெங்கும் ஒலித்தது.இங்கிலாந்து நாட்டின் டாப் 10 வரிசையில் இடம் பெற்றுச் சாதனை படைத்தது.அதன் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் 2009 ஆம் ஆண்டில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று சிகரம் தொட்டு எல்லாப்புகழையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார்


அதே ஆண்டில் வெளிவந்த 'தேவர் மகன்' மனித குலத்தின் பழிக்குப்பழி என்கிற கொடூரமான குணாதிசயத்தின் கொடுமையை விளக்கி மாபெரும் வெற்றி பெற்றது.


இயக்குனர் செல்வாவின் 'அமராவதி' அழகும் போராட்டக் குணமும் கொண்ட அஜித் குமாரை அறிமுகப்படுத்தியது. எஸ்.ஏ.சந்திரசேகரின் 'நாளைய தீர்ப்பு' அமைதியும் திறமையும் கொண்ட விஜயைத் தந்தது.


ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப் படங்களைத் தயாரித்து ஏராளமான திறமைசாலி இளைஞர்களை இயக்குனராக அறிமுகம் செய்தது

தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தமிழ்த் திரை யுலகில் நுழைந்து வெற்றி பெற்றார்கள்.அதன் விளைவாக தமிழ் சினிமாவின் கதைக்களத்திலும் பேச்சு மொழியிலும் மதுரை பகுதிகளின் தாக்கம் விரிவுபட்டது.


உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஒருவர் கதாநாயகனாகி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக வியாபார மதிப்பு பெற்ற நிகழ்வு 1990 களில் நிகழ்ந்தது.கங்கை அமரனின் 'கரகாட்டக்காரன்' படத்தின் மூலமாக ராமராஜன் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று அடுத்தடுத்து கிராமத்துக் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்று 1998 ஆம் ஆண்டில் இந்திய பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.


கரகாட்டக்காரன் 

கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழக் காமெடி நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணியும் செந்திலையும் அந்தக் காட்சியை எழுதிய வீரப்பனையும் தமிழ் சினிமா உள்ளவரைக்கும் நினைவு படுத்திக் கொண்டிருக்கும்.


பாலாஜியின் சுஜாதா புரொடக்சன்ஸ் ,கவிதாலயா, ஆர்.எம். வீரப்பனின் சத்யா மூவீஸ்,சிவாஜி புரொடக்சன்ஸ், ராஜ்கமல் இன்டர்நேசனல் ஆகிய படத்தயாரிப்பு நிறுவனங்கள் தரமான படங்களைத் தயாரித்து வெளியிட்டு தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் பெரும் பங்கேற்றன.


1996 ஆம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 'ஔவை சண்முகி' படத்தில் கமல் படம் முழுவதும் முழு நீள பெண் வேடம் ஏற்று நடித்து மேலும் ஒரு சாதனையைப் படைத்தார்.


1997 ல் ஹென்றி தயாரித்த 'பாரதி கண்ணம்மா' படத்தின் இயக்குனராக அறிமுகமான சேரன் கமர்ஷியல் அடையாளம் தவிர்த்து 'பொக்கிஷம்',தவமாய்த் தவமிருந்து',ஆட்டோகிராப்' போன்ற மிகச் சிறந்த படங்களைத் தந்து பல தேசிய விருது களையும் வென்று நாளடைவில் கதாநாயகனாகவும் பரிணமித்துள்ளார்.


வசந்த்தின் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டில் உருவான ;நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமானார் நடிகர் சிவகுமாரின் புதல்வரான சூர்யா.நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்ததால் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து திறமையான இளைஞராகக் களத்தில் நிற்கிறார் சூர்யா.


சரண், எஸ்.ஜே.சூர்யா,வி.சேகர்,சுரேஷ் கிருஷ்ணா ,விகரமன், ஏ.வெங்கடேஷ் ஆகிய இயக்குனர்கள் அறிமுகமாகி வெற்றி பெற்றார்கள். 


அண்மைக் காலத்தில் உலகப் படைப்பாளிகளின் கவனத்தைத் தமிழ் சினிமாவை நோக்கித் திருப்பிய ஒரு இளைஞர் தன முதல் படைப்பைத் திரையிடுவதற்கு மிகப்பெரும் போராட்டங்களைச் சந்தித்தார்.இறுதியில் திறமை வென்றது.1999 ஆம் ஆண்டில் 'சேது'படம் பாலா என்ற புதுமை இயக்குனரை தமிழ் சினிமா வுக்குத் தந்தது.இதுவரையில் தமிழ் சினிமா அறியாத கதா பாத்திரங்களை வைத்து பாலா உருவாக்கும் படங்கள் உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெறுகின்றன.


சேதுவின் வாயிலாக அறியப்பட்ட சீயான் என்னும் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தரத்துக்கு மெருகேற்றி வருகிறார்.

'வாலி'யில் சிறு வேடத்தில் அறிமுகமாகி 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தின் கதாநாயகியானார் ஜோதிகா உணர்வு களை தத்ரூபமாக வெளிப்படுத்தும் கண்கள் ஜோதிகாவின் சிறப்பு.அவரது குழந்தை முகம் ரசிகர்களால் பெரிதும் நேசிக்கப் பட்டது.புகழின் உச்சத்தில் இருந்தபோதே ஜோதிகா தான் நேசித்த சூர்யாவை மணந்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார்.


எஸ்.ஏ.ராஜ்குமார்,தேவா போன்ற இசையமைப்பாளர்கள் இந்தக்காலக்கட்டத்தில் புகழோடு விளங்கினார்கள்.


கே.பாலசந்தரால் 'டூயட்' படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரகாஷ்ராஜ் தனித்துவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களின் செல்லமானார்.சம்பாதித்த பொருளை தமிழ் சினிமாவிலேயே முதலீடு செய்து 'மொழி', 'அபியும் நானும்' போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.


விளம்பரப் படங்களில் நடித்து வந்த ஆர்.மாதவன் 2000 ஆவது ஆண்டில் மணிரத்னம் அவர்களால் 'அலை பாயுதே' என்ற படத்தில் அறிமுகப் படுத்தப்பட்டு தொடர்ந்து வந்த கவுதம் வாசுதேவ் மேனனின் 'மின்னலே' படத்தின் மூலம் காதல் நாயனாக இடம் பிடித்தார்.


இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மென்மையான காதலை நளினமாக வெளிப்படுத்துகின்ற படங்களை இயக்கி தனக்கென தனியான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார்.


2001 ஆம் ஆண்டில் அஜித்தின் 'தீனா' வை இயக்கி அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ் 'ரமணா' மற்றும் 'கஜினி'ஆகிய மிகவும் பேசப்பட்ட படங்களை இயக்கி ஹாட்ரிக் சாதனை படைத்து குறிப்பிடத் தகுந்த இயக்குனரானார்.


இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் புதல்வரும் இஞ்சினியரிங் பட்டதாரியுமான செல்வராகவன் அவரது சகோதரரான தனுஷ் அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் கதையை எழுதி அடுத்து ;காதல் கொண்டேன்; வெற்றிப் படத்தின் மூலமாக இயக்குனரானார்.இந்தப்படம் சகோதரர்கள் இருவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை அமைத்துக் கொடுத்தது.

இயக்குனர் டி .ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக இருந்து 2002 ஆம் ஆண்டில் வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தின் வாயிலாக கதாநாயகனானார்.பிறகு வந்த 'மன்மதன்', வல்லவன்' ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராகவும் பரிணமித்தார்.

இளையராஜாவின் புதல்வரான யுவன் சங்கர் ராஜா 1996 ஆம் ஆண்டில் தனது 16 ஆவது வயதில் 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் பெற்று 2002ல் வெளியான ;துள்ளுவதோ இளமை'படத்தில் புதுப்புது இசைக் கோர்வைகளைக் கையாண்டு புகழ் பெற்று இளமை ததும்பும் பாடல்களைத் தருகிறார்.


'பிதாமகன்','அந்நியன்', 'காக்க காக்க'. 'அன்பே சிவம்', சிவாஜி' .தசாவதாரம்' போன்ற படங்கள் 21 ஆம் நூற்றாண்டுத் துவக்க ஆண்டுகளின் குறிப்பிடத் தக்க தமிழ்ப் படங்களாகும்.

'தசாவதாரம்' படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களை ஏற்று நடித்து நடிகர் திலகம் சிவாஜியின் உலக சாதனையை விஞ்சினார்.


இலங்கைப் போர் 

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகம் போராட்டக் களத்தில் இறங்கியது.இயக்குனர்கள் சீமான்,அமீர் ஆகியோர் சிறை சென்றார்கள்.தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்கும் நோக்கத்தோடு சீமான் 'நாம் தமிழர்' இயக்கத்தைத் தொடங்கினார்.

ஷங்கர் இயக்கிய 'இந்திரன்' சுமார் 162 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு தமிழ் சினிமாவின் மெகா பட்ஜெட் படமாகியது. இதில் ரஜனி இயந்திர மனிதனாக நடித்தார். ஹாலிவுட் படங் களுக்கு இணையாக இந்தப்படத்தின் தொழிநுட்பம் அமைந்திருந் தது.

தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் புதிய தயாரிப்பாளர்கள் குறைந்த முதலீட்டுப் படத் தயாரிப்பில் ஈடுபட்டார்கள்.புதிய நாயகர்களும் நாயகிகளும் அறிமுகம் ஆனார்கள்.அதிக அளவில் படங்கள் வெளியாகின.

பரத், ஆர்யா, ஜெயம் ரவி, விஷால்,கரன், பிரித்விராஜ், பசுபதி, சந்தானம் ஆகியவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் வெற்றிகரமான நடிகர்களாகத் திகழ்ந்தார்கள்.

பிரியன், விஜய் மில்டன், கே.வி.ஆனந்த், ரத்னவேல், ஆர்தர்.பி. வில்சன் ஆகிய ஒளிப்பதிவாளர்களும் நா.முத்துக்குமார், கபிலன், பா.விஜய், சினேகன்,பழனி பாரதி ஆகிய பாடலாசிரியர்களும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
.
பாலாவிடம் சினிமாவைக் கற்றுக்கொண்ட அமீர் 'பருத்தி வீரன்' என்ற படத்தை இயக்கி வெளியிட்டபோது தமிழ் சினிமா உலகத் தரத்துக்கு உயர்ந்தது.தமிழ்த் திரை தனக்கென வகுத்திருந்த பல நியதிகள் பருத்திவீரனில் அடித்து நொறுக்கப்பட்டன. கதாநாயகனாக மிகச் சிறப்பாக நடித்து அறிமுகமான சூர்யாவின் தம்பி கார்த்தி இந்த ஒரே படத்தின் மூலம் நட்சத்திரத் தகுதி பெற்றார்.

அமீரின் உதவியாளரான சசிகுமார் 'சுப்ரமணியபுரம்' என்ற மற்றுமொரு புரட்சிக் கதையைக் கொண்ட படத்தை எழுதி இயக்கி ,தயாரித்து வெற்றி பெற்று தமிழ் சினிமாக் கலாசாரத்தின் மாற்றத்தை மேலும் உறுதிப்படுத்தினார்,

பாண்டிராஜின் 'பசங்க', சமுத்திரக்கனியின் 'நாடோடிகள்', சுசீந்திரனின்'அழகர்சாமியின் குதிரை',சசியின் 'பூ',பிரபு சால மோனின் 'மைனா' ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான வளர்ச்சியை உலகுக்கு எடுத்துக்காட்டின.

துவக்க காலத்தில் பெரும்பாலான படப்பிடிப்புத் தளங்கள் இங்கே அமைந்திருந்ததால் சென்னை நகரின் ஒரு பகுதியான கோடம் பாக்கம் தமிழ் சினிமாவின் தலைமையகமாகக் கருதப்பட்டது. அதன் விளைவாக தமிழ் சினிமா 'கோலிவுட்' என்று பெயர் பெற்றது.

நடிகர் சூர்யா 'அகரம்' என்கின்ற அறக்கட்டளையைத் தொடங் கினார்,அதன் மூலமாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாக் கலைஞர்களின் புதுமையான உத்திகளும் தொழில்நுட்பத் திறமையும் மற்ற மொழிகள் சார்ந்த திரை உலகத்தினரை வியக்க வைத்தது.இந்த புதிய விஷயங்களை அவர்கள் தங்களின் படங்களில் பயன்படுத்தினார்கள்.

தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் ஒளிப்பதிவாளர்களும் நடன மற்றும் சண்டைப் பயிற்சியாளர்களும் மற்ற மொழிக் கலைஞர் களின் அழைப்பின் பேரில் நேரடியாகவும் பங்குபெற்று பிற மொழிப் படங்களிலும் தங்கள் சிறப்புக்களை வெளிப்படுத்தினார் கள் 

100ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்டு எல்லாத் துறை களிலும் தமிழ்த் திரையுலகம் ஏற்றம் பெற்று விளங்கும் காலம் இது. வருங்காலமும் இதேபோல வளமும் நலமும் பெற்றுத் திகழ வேண்டும் என்பது உலகத் தமிழ் மக்களின் விருப்பம்.




திங்கள், 28 ஜனவரி, 2013

100 ஆண்டு தமிழ் சினிமா.-பாகம்-1


அபூர்வப் புகைப் படங்களையும் காட்சிகளையும் கொண்டு ஆவணப் படமாக உருவாகிக் கொண் டிருக்கின்ற 100 ஆண்டு தமிழ்த் திரையின் வரலாறு இங்கே எழுத்துருவாகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.


100 ஆண்டு தமிழ் சினிமா 

                                                                                                           
தினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் 1897 ஆம் ஆண்டில் சென்னையில் குடியிருந்த ஆங்கிலேயர்களுக்காக கதையம்சம் எதுவுமில்லாத சாதாரண நிகழ்வுகளைக் கொண்ட சத்தமில்லாத துண்டுப் படங்கள் விக்டோரியா ஹாலில் திரையிடப்பட்டன. அண்ணா சாலையில் தற்போது அமைந்துள்ள அஞ்சல் அலுவலக வளாகத்தில் இருந்த ஒரு கட்டிடத்தில் ' எலெக்ட்ரிக் தியேட்டர்' என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அங்கேயும் இம்மாதிரிப் படங்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன.

மவுனப் படங்கள் 

திருச்சியில் வசித்த ' சாமிக்கண்ணு வின்சென்ட்' என்பவர் ' [Du Pont ]  டூபாண்ட் 'என்ற பிரஞ்சுக்காரரிடம் இருந்து திரையீட்டுக் கருவி யையும் துண்டுப் படங்களையும் விலைக்கு வாங்கி ஊர் ஊராகச் சென்று கொட்டகை அமைத்து படங்களைத் திரையிட்டார்.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் 1909 ஆம் ஆண்டில் சென்னைக்கு வருகை தந்தபோது இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்ட படத்தோடு ஓசையையும் தரக்கூடிய ' குரோன் மெகபோன் ' என்ற கருவியை ரகுபதி வெங்கையா என்பவர் விலைக்கு வாங்கி ஒரு தற்காலிக சினிமாக் கொட்டகையைத் தொடங்கினார்.1912 ஆம் ஆண்டில் அது ;கெயிட்டி' என்ற பெயரில் சென்னையின் முதல் நிரந்தர திரை அரங்கமாக மாற்றப்பட்டது.

1916 ஆம் ஆண்டில் நடராஜ முதலியார் என்ற மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள் விற்பவருக்கு ஏற்பட்ட திரைப்பட ஆர்வத்தால் லண்டனுக்குச் சென்று ' ஸ்டீவர்ட் ஸ்மித் ' என்ற ஒளிப் பதிவாளரிடம் பயிற்சி பெற்று வந்து புரசைவாக்கம் மில்லர் சாலையில் இந்தியா பிலிம் கம்பனி லிமிடட் ' என்ற நிறுவனத்தைத் தொடங்கி ' கீசக வதம்' என்ற மவுனப் படத்தை இயக்கித் தயாரித்தார்.1917 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம்தான் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்பட மாகும்.

1918 ஆம் ஆண்டில் இந்தியாவில் திரைப்படத் தணிக்கை முறை அமலாகப்பட்டதை அடுத்து சென்னையில் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது.

ரகுபதி வெங்கையாவின் மகனான ரகுபதி பிரகாஷ் ஹாலிவுட் மற்றும் ஜெர்மனியில் திரைப்படப் பயிற்சி பெற்று வந்து ' மீனாட்சி கல்யாணம்' என்ற திரைப்படத்தை தன தந்தையுடன் இணைந்து தயாரித்தார்.இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் திரையில் தலையில்லாமல் தோன்றியது இந்தப்படத்தின் ஒரு விரும்பத்தகாத சிறப்பு.ரகுபதி பயன் படுத்திய 35 m.m Williamson  வில்லியம்சன் கேமராவின் லென்ஸ் தொழில்நுட்பத்தில் இருந்த கோளாறுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம் என்பது பின்னால் தெரியவந்தது.

பின்னாட்களில் வெற்றிகரமான இயக்குனராகத் திகழ்ந்த ரகுபதி பிரகாஷ் இங்கேயே கிடைத்த பொருட்களைக் கொண்டு தனது வீட்டில் ஒரு தொழிற்க்கூடத்தை அமைத்து கையாலேயே படச் சுருள்களைப் பதப்படுத்தினார்.

அந்தக் காலக்கட்டத்தில் கதாநாயகனாகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்த இன்னொருவர் கி.நாராயணன்.' கருட கர்வ பாகம்[1920],'பீஷ்ம பிரதிக்னா '[1922],'கஜேந்திர மோட்சம்']1930]ஆகிய படங்கள் மவுனப் படவுலகில் முக்கியமானவையாகும்.

.ஒய் .வி.ராவ் என்ற இயக்குனர் 1930 ஆம் ஆண்டில் ' பாண்டவ நிர்வாணா', சாரங்கதாரா' ஆகிய படங்களை வெளியிட்டார்.1931 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'லைலா' என்ற படம் ஏராளமான அரை நிர்வாணக் காட்சிகளையும் உதட்டோடு உதடு இணைந்த நேரடியான முத்தக் காட்சிகளையும் கொண்டிருந்தது என்றால் நம்ப முடிகிறதா ? அந்தக் காலக் கட்டத்தில் பாலுணர்வுக் காட்சிகளை விட அரசியல் சார்ந்த காட்சிகளே தணிக்கையாளர்களால் பிரச்னைக்குரியதாகக் கருதப்பட்டன.

கதாநாயகனாகவும் இயக்குனராகவும் திகழ்ந்த 'ராஜா சாண்டோ' என்று அழைக்கப்பட்ட புதுக்கோட்டை P.K.நாகலிங்கம் மற்றும் அஸ்ஸோஸியேட் பிலிம் கம்பெனியை உருவாக்கிய தயாரிப்பாளர் பத்மநாபன் ஆகியோர் மவுனப் படக் காலத்துப் பிரபலங்கள் ஆவார்கள்.


டி .பி.ராஜலட்சுமி  

இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய ' ராஜேஸ்வரி' என்ற மவுனப்படத்தின் கதாநாயகியான டி .பி. ராஜலட்சுமி பிற்காலத் தில் பேசும்படக் கதாநாயகியாகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் 1950ஆம் ஆண்டுவரை தமிழ்த திரையில் கோலோச்சி வந்தார்.இந்தியாவின் முதல் பெண் இயக்குனராக மட்டுமல்லாமல் அனேகமாக உலகின் முதல் பெண் இயக்கு னராகவும் திகழ்ந்தவர் இவர்

ஸ்டண்ட் ராஜூ மற்றும் பாட்லிங் மணி ஆகியோர் மவுனப் படக் காலத்துப் பிரபல கதாநாயகர்கள் ஆவார்கள்.

கதைக் களத்தோடு வெளியான மவுனப் படங்களுக்கு உயிரோட்டம் கொடுக்கும் விதமாக படம் ஓடிக்கொண்டிருக்கும் போது ஆர்மோனியம் மற்றும் தபேலா ஆகிய இசைக் கருவி களைக் கொண்டு நேரடியாக பின்னணி இசை கொடுக்கப் பட்டது.திரை ஓரமாக ஒருவர் நின்றுகொண்டு கதை ஓட்டத் தையும் கதாபாத்திரங்கள் பேசுகின்ற வசனங்களையும் உணர்ச்சி பூர்வமாக விவரித்து பார்வையாளர்களை படத்தோடு ஒன்றச் செய்தார்.

சிறிய நகரப் பகுதிகளில் மேள  தாள இசையோடு மாட்டு வண்டிகளில் ஊர்வலம் வந்து படங்களுக்காக விளம்பரம் செய்யப்பட்டது.1940 ஆம் ஆண்டுக் காலம் வரையிலும் இந்த விளம்பர முறை நடைமுறையில் இருந்தது.

 பேசும் படங்கள் 


1931ஆம் ஆண்டில் பேசும் படங்கள் வெளிவரத் துவங்கி மக்களிடையே பெரும் தாக்கத்தை உண்டாக்கின. திரையில் பேசி ஆடிப் பாடும் மனிதர்களைக் கண்டு மாயாஜாலமோ என மக்கள் மயங்கினார்கள்.

தமிழின் முதல் பேசும்படமாக பாம்பேயில் உருவான ' காளிதாஸ் ' என்ற படத்தில் கதாபாத்திரங்கள் தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும் பேசினார்கள்.1932 ஆம் ஆண்டில் வெளிவந்த ' காளவாரிஷி ' என்ற படம்தான் முழுவதுமாகத் தமிழில் உருவான படமாகும்.இந்தப் படத்தின் மூலமாக ஜி.ராமநாதன் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றார்.

1933 ஆம் ஆண்டில் ' சீதா கல்யாணம் ' என்ற படம் வெளியானது. அதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்த ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் பிற்காலத்தில் கதாநாயகனாக, இயக்குனராக, இசைக்கலைஞனாக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக பன்முகத் திறன் பெற்று விளங்கினான்.அவர் வீணை மேதை எஸ்.பாலச்சந்தர்.

அதே படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தவர் பிற் காலத்தில் ஏராளமான புகழ் பெற்ற பாடல்களைத் தந்தார். பாரம்பரிய இசைக்கலைஞ்னாகப் பரிணமித்தார். அவர் இசை மேதை பாபநாசம் சிவன்.

அதே ஆண்டில் வெளிவந்த ' வள்ளிதிருமணம் 'வசூல் சாதனை படைத்த முதல் தமிழ்த திரைப்படம் என்றால் அடுத்த ஆண்டு 1934 ல் வெளியான ' பாமா விஜயம் 'அதையும் விஞ்சி வசூல் சாதனை படைத்தது.

இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரான ஆர்.பிரகாஷ் 'திரவ்பதி வஸ்திராபகரணம் ' என்ற படத்தில் ஒரே ப்ரேமில் ஐந்து கிருஷ்ணர்களைப் பதிவு செய்து தொழில்நுட்பம் குறைந்த அந்தக் காலத்தில் பெரும் புரட்சியை உண்டாக்கினார்.

தமிழ்நாட்டில் பேசும் படத்தினை உருவாக்குவதற்கான எந்த வசதியும் அப்போது இல்லாதிருந்ததை உணர்ந்து தயாரிப்பாளர் கி. நாராயணன் 1934 ஆம் ஆண்டில் 'ஸ்ரீனிவாசா சினிடோன் 'என்ற படப்பிடிப்புத் தளத்தையும் ; சவுண்ட் சிட்டி ' என்ற ஒலிப்பதிவுக் கூடத்தையும் உருவாக்கினார்.

நாராயணின் மனைவியான மீனாட்சி கணவரின் ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி தென்னிந்தியத் திரைப்படத் துறையின் முதல் பெண் தொழில்நுட்ப வல்லுனராகப்  பெயர் பெற்றார்.

 சூப்பர் ஸ்டார் 

1934ஆண்டு கிருஷ்ணசாமி சுப்ரமணியம் என்ற  சட்ட வல்லுநர் இயக்கிய ' பவளக்கொடி ' என்ற படம் வெளியானது.பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்று தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஆன எம்.கே.தியாகராஜா பாகவதர் அதில் கதாநாயகனாக நடித்திருந்தார்.தயாரிப்பாளர் கிருஷ்ணசாமியின் ' கிருஷ்ணசாமி அஸோஸியேட்' நிறுவனம் இன்றும் ஆவணப் படத் தயாரிப்பில் முன்னணியில் நிற்கிறது. 

தனது கம்பீரக் குரல்வளத்தால் மேடை நாடகங்களில் புகழ் பெற்றிருந்த கே.பி.சுந்தராம்பாள் 1935 ஆம் ஆண்டில் வெளியான ' நந்தனார் ' படத்தில் ஆண் வேடத்தில் நடித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.அதை விடவும் சிறப்பான இன்னொரு தாக்கமும் அந்தப் படத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டது.நந்தனார் படத் துக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்று கே.பி.சுந்தராம்பாள் பெரிய சாதனை படைத்தார். 

1935 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த மற்றுமொரு வெற்றிப் படமான ' மேனகா 'மேடை நாடகமாக நடத்தப்பட்ட போது அதில் நடித்திருந்த டி .கே.சண்முகம் மற்றும் டி .கே. முத்துசாமி சகோதரர்கள் இந்தப் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமாகி பின்னாட்களில் பெரும் புகழ் பெற்றார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன் 

தமிழ்த் திரைப்பட ரசிகர்களை தனது நடிப்பாலும் சீர்திருத்தக் கருத்துக்களாலும் சிறைப்படுத்திய ' கலைவாணர் ' என்று புகழப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணனும் இந்தப் படத்தில்தான் அறிமுகப் படுத்தப் பட்டார். தொடர்ந்து வந்த பல படங்களில் இணைந்து நடித்த என்.எஸ். கிருஷ்ணனும் டி .ஏ .மதுர மும் வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் தனது காட்சிகளைத் தானே எழுதி இயக்கிப் படமாக்கிக் கொடுத்ததும் நிகழ்ந்தது.

1936 ஆம் ஆண்டில் வெளியான குடிப்பழக்கத்தின் கேடுகளை விவரிக்கும் ' சதி லீலாவதி ' திரைப்படம் தமிழ்த் திரை உலகத்துக்கு மிகப்பெரும் மேதைகள் பலரை அறிமுகம் செய்தது.கதாசிரியரான எஸ்.எஸ்.வாசன்,கதாநாயகரான எம்.கே ராதா,டி .எஸ். பாலையா,எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் இந்தப் படத்தில் அறிமுகமாகி பிற்காலத்தில் தமிழ்த் திரையுலகின் சிகரம் தொட்டார்கள்.

அமெரிக்க நாட்டிலிருந்து வந்த எல்லிஸ்.ஆர்.டங்கன் இந்தப் படத்தை இயக்கி அதன்பின் அடுத்தடுத்து பல தரமான வெற்றிப் படங்களைத் தந்தார்.

எம்.கே.தியாகராஜ பாகவதரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற ' சிந்தாமணி '1937 ஆம் ஆண்டில் வெளியாகி ஒரு வருடத்துக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது.இந்தப் படத்தின் வருவாயைக் கொண்டு படத்தின் தயாரிப்பாளர்கள் மதுரை நகரில் சிந்தாமணி திரையரங்கத்தைக் கட்டினார்கள்.

ஆரம்ப காலச் சிறந்த தமிழ்ப் பத்திரிகைகளில் ஒன்றான ' மணிக்கொடி தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய நிறைகுறைகளை எழுதி வந்தது.நாளடைவில் அதில் பணி  புரிந்த இளங்கோவன்,பி.எஸ்.ராமையா போன்றவர்கள் திரைத் துறையில் இணைந்து சிறந்த கதை ,வசன எழுத்தாளர்களாகத் திகழ்ந்தார்கள்.1937 ல் வந்த தியாகராஜ பாகவதர் நடித்த 'அம்பிகாவதி ' திரைப்படத்துக்கு இளங்கோவன் எழுதிய இலக்கிய நயத்தோடு கூடிய வசனங்கள் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டன. 

பாகவதர் நடித்த இன்னொரு படமான ' ஹரிதாஸ் ' சென்னை பிராட்வே அரங்கத்தில் மூன்று தீபாவளிப் பண்டிகைகளைக் கண்டு நூற்றுப்பத்து வாரங்கள் தொடர்ந்து ஓடிச் சாதனை படைத்தது.

இதயத்தை வருடுகின்ற இனிய குரலால் உலகப் புகழ் பெற்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி தமிழ்த் திரைக்கு அறிமுகமானது 1938 ஆம் ஆண்டு. கே.சுப்ரமணியம் தயாரித்து இயக்கிய ' சேவாசதனம் 'படத்தில் அறிமுகமான அவர் பின்னாளில் பாரம்பரிய இசையில்[Classical ] மிகப்பெரிய பரிமாணத்தோடு விளங்கினார்.

;ஸ்ரீவள்ளி ' படத்தில் பாடி நடித்துப் பெயர் பெற்றார் டி .ஆர். மகாலிங்கம் .'செந்தமிழ் தேன்மொழியாள் 'என்ற அவர் பாடிய பாடல் இன்றளவும் இளமையோடு இசைக்கக் கேட்கலாம்.' 

மேலைநாட்டுக் கல்வியும் நாகரிகமும் கற்றிருந்த திருச்செங் கோட்டைச் சேர்ந்த டி .ஆர். சுந்தரம் 1937 ஆம் ஆண்டில் சேலம் நகரில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி வெளி நாட்டுத் தொழிநுட்பக் கலைஞர்களை வரவழைத்து புதுமையான தொழில்நுட்பங்களுடன் கூடிய சொந்த படப்பிடிப்புக் கூடத்தில் பல படங்களைத் தயாரித்தார்.ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 150 படங்களை இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

 முதல் இரு வேடத் தமிழ்ப் படம் 

1940 ஆம் ஆண்டில் முதன்முதலாக வேற்று மொழி நாவல் ஒன்று தமிழ்த் திரைப்படமாக் கப்பட்டது.புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் அலெக்சாண்டர் டூமாஸின் 'The man In the Iron mask' என்ற நாவல் உத்தமபுத்திரன் என்ற தலைப்பில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தால் படமாக்கப்பட்டு வெளியானது.இந்தப்படம் ஒரு நாயகன் இரட்டை வேடத்தில் நடித்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படமாகும்.இந்தப் படம் பி.யு .சின்னப்பா என்ற மற்றுமொரு மாபெரும் கலைஞனை அடையாளம் காட்டியது.'ஆரியமாலா', 'கண்ணகி', 'மனோன்மணி', 'ஜெகதலபிரதாபன்' போன்ற படங்கள் மூலமாக ரசிகர்கள் பி.யு.சின்னப்பாவை தியாகராஜ பாகவதருக்கு அடுத்த நிலையில் வைத்து அழகு பார்த்தார்கள்.

1940 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.வாசன் சென்னையில் ஜெமினி ஸ்டுடியோவைத் துவங்கினார்.அதே ஆண்டில் காரைக்குடியைச் சேர்ந்த ஏ .வி.மெய்யப்பச் செட்டியார் தேவகோட்டை அருகே தற்காலிகமாக ஒரு படப்பிடிப்புக் கூடத்தை நிறுவினார்.பின்னால் அது சென்னையில் ஏ .வி.எம்.ஸ்டுடியோவாக உருவானது.'நாம் இருவர்' என்கின்ற சிறப்பு வாய்ந்த தமிழ்ப்படம் ஏ .வி.எம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளியானது.தமிழ்த் திரையுலகின் மிகப் பழமை வாய்ந்த நிறுவனமான அது இன்றும் அதன் உரிமையாளர்களைப் போல மாறாத இளமையோடு துடிப்பாகச் செயல்பட்டு வருகிறது.

ஜெமினி ஸ்டுடியோவின் பிரமாண்டத் தயாரிப்பாக 1948 ஆம் ஆண்டில் வெளியான ' சந்திரலேகா ' பல மொழிகளில் உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்று இந்தியத் திரைப்படங்களின் ஒரு அடையாளமாக விளங்குகிறது.இந்தப் படத்தில் நடித்த எம்.கே.ராதா, ரஞ்சன் ,
 டி .ஆர். ராஜகுமாரி ஆகியோர் பின்னாட்களில் பெரும் புகழ் பெற்றார்கள்.

'நீல மலைத் திருடன் ' படத்தில் 'சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா' என்ற பாடலோடு ரஞ்சன் குதிரையில் வரும் காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சத்தில் நீங்காது பதிந்து விட்ட ஒன்று.

நாடக நடிகையான கோபிசாந்தா ' மாலையிட்ட மங்கை' படத்தில் மனோரமாவாக அறிமுகம் ஆனார்.ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட அவர் அன்போடு 'ஆச்சி' என்று அழைக்கப் பட்டார்.1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனையைப் பதிவு செய்துள்ள அவர் பாடிய ' வா வாத்யாரே வூட்டாண்ட' என்ற பாடலைக் கேட்டதுமே நம் முகத்தில் புன்னகை பூக்கும்.

இந்தக் காலக் கட்டத்தில் எம்.கே.ராதா தமிழ்த் திரையுலகில் சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தார்.

இயக்குனர் சுந்தர்லால் நட்கர்னியின் சிபாரிசின் பேரில் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு 1946 ஆம் ஆண்டில் டி .எம்.சவுந்தரராஜனுக்கு பாடகராக வாய்ப்பளித்தார் .1950 ல் வெளியான 'கிருஷ்ண விஜயம் ' திரைப்படத்தில் சவுந்திரராஜன் பாடிய 'ராதே என்னை விட்டுப் போகாதேடி' என்ற தியாகராஜா பாகவதர் பாணியிலான பாடல் மிகப்பெரும் ஹிட் ஆக அதன்பின் சவுந்தரராஜனின் கலைப்பயணம் நிறுத்தமேயில் லாது தொடர்ந்தது.அவரது வெண்கலக் குரல் உச்ச நடிகர்களான எம்.ஜி.ஆர்.மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோரது இமாலய வெற்றிக்கு மிகப்பெரும் பக்க பலமாக இருந்தது என்று சொல்லலாம்.

அதே நேரத்தில் பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ .எம்.ராஜா ஆகியோரும் மெல்லிசைப் பாடல்களின் மூலமாக ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுத் திகழ்ந்தனர்.

அரசியல் ஆதிக்கம் 

1940 களின் இறுதி வருடங்கள் தமிழ்த் திரையுலகின் மறு மலர்ச்சிக் காலம் என்று சொல்லலாம்.ஏனெனில் வருங்காலத் தில் தமிழ்நாட்டின் அரசியலில் செலுத்தப் பட விருக்கின்ற தமிழ்த் திரையுலகின் அபரி மிதமான ஆதிக்கத்திற்கு இந்தக் காலத்தில் தான் வித்திடப்பட்டது.

பிற்காலத்தில்  ' அண்ணா' என்று அழைக்கப்பட்ட சி.என்.அண்ணா துரை 1949 ஆம் ஆண்டு வெளியான 'வேலைக்காரி' படத்துக்கு கதை,வசனம் எழுதினார் .அடுத்து அண்ணாவின் சீடரான எம்.கருணாநிதி 'ராஜகுமாரி', 'பராசக்தி' மலைக்கள்ளன்', 'புதுமைப் பித்தன்'உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு எழுத்துப்பணி புரிந்தார்.  

'சதி லீலாவதி'யில் ஒரு சிறு பாத்திரத்தில் நடித்திருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் 1947 ல் வெளியான 'ராஜகுமாரி'யில் கதா நாயகனாக நடித்தார்.அடுத்து 1954ல் வெளியான 'மலைக்கள்ளன்' படத்தின் மூலமாக நட்சத்திர அங்கீகாரம் பெற்ற எம்.ஜி.ஆர் தனக்கென்று தனிப்பட்ட பாணியையும் கொள்கைகளையும் கடைப்பிடித்து தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து அதன் மூலமாக மக்களிடம் செல்வாக்குப் பெற்று 1977ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் அமைச்சரானார்.ஒரு அதிசய மனிதராக இன்றளவும் தமிழ் மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பெற்று வாழ்கிறார்.

'கலங்காதிரு மனமே','கண்ணனின் காதலி' ஆகிய படங்களின் மூலமாக 1949ஆம் ஆண்டில் பாடலாசிரியராக அறிமுகமான முத்தையா என்ற கண்ணதாசன் பல்லாயிரக்கணக்கான பாடல் களைப் படைத்து 'கவியரசு'வாகி அனைத்துத் தரப்பினரின் அன்பைப் பெற்று அடுத்து வந்த 30 ஆண்டுகளுக்கு தமிழ்த் திரை யுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். 

'பராசக்தி'யில் [1952] ஞானசேகரனாக அறிமுகம் பெற்ற மேடைக் கலைஞர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தனது சீர்மிகு நடிப்பாலும் திருத்தமான தமிழ் உச்சரிப்பாலும் சிறப்புப் பெற்று 1950 முதல் 60 வரையிலான காலத்தில் எஸ்.எஸ்.ஆர் என்ற சிறப்புப் பெயருடன் தமிழ்த் திரையின் மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.


சிவாஜி கணேசன் 

அதே பராசக்தியில் கதாநாயகன் குணசேகரனாக வாழ்ந்த வி.சி.கணேசன் சிவாஜி கணேசனாகப் பட்டம் சூட்டப் பெற்று ஒரே படத்தில் ஒன்பது வேடங்களை ஏற்று நடித்து நடிப்புக்கு இலக்கணம் வகுத்து உலகத்தின் கவனத்தையே தன்பால் திருப்பி நடிகர் திலகமாகி அடுத்து வந்த அனைத்து நடிகர்களிடமும் தனது தாக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

'மிஸ் மாலினி' படத்தின் மூலமாக திரையுலகில் நுழைந்த இன்னுமொரு கணேசன் ஜெமினி கணேசனாகி தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்ததால் காதல் மன்னன் என்ற பட்டத் தோடு புகழ் பெற்றுத் திகழ்ந்தார்.

1950 ஆம் ஆண்டில் 'அவன் அமரன்' படத்தின் இசையமைப்பாள ராக அறிமுகமானார் கே.வி.மகாதேவன்.ஏறத்தாழ 600 படங் களுக்கு இசையமைத்துள்ள அவருடைய பாடல்களில் ' நலந்தானா','மன்னவன் வந்தானடி' போன்றவை என்றும் நம் நினைவில் நிற்பவை.

1952 ஆம் ஆண்டில் வெளியான 'பெற்றதாய்' படத்தில் ஏ .எம். ராஜாவோடு 'ஏதுக்கு அழைத்தாய்' என்ற டூயட் பாடலைப் பாடி அறிமுகமான பி.சுசீலா கேட்போரின் இதயங்களை வருடும் எண்ணற்ற பாடல்களைப் பாடி இசைக்குயில் என்ற பட்டத்தோடு ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்று தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார். 

சிவாஜியின் இரண்டாவது படமான 'பணம்' திரைப்படத்தின் இசையமைப்பாளர்களாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற இரு இளைஞர்கள் அறிமுகமாகி காலப்போக்கில் பலநூறு நெஞ்சில் நிறைந்த திரைப்பாடல்களைத் தந்தார்கள்.அதன்பின் விஸ்வ நாதன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனாக தனித்து இசைப்பணியைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான நினைத்தாலே இனிக்கும் பாடல்களைத் தந்தார்.

1954 ஆம் ஆண்டில் வெளியான கெட்ட சகவாசத்தால் சீரழிந்து போகின்ற ஒரு இளைஞனின் வாழ்க்கையை விவரிக்கின்ற ' ரத்தக்கண்ணீர்' திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்று தமிழ்த்திரையின் மிக சுவாரஸ்யமான குணச்சித்திர நடிகராக விளங்கினார்.

ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிகொஸ் என்ற இயற்பெயர் கொண்ட சந்திரபாபு இந்தக் கட்டத்தில் அறிமுகமாகி பின்னாட்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் பாடகராகவும் இயக்குனராகவும் தமிழ்த் திரையுலகில் ஒரு தனியிடத்தைப் பிடித்தார்.அவரது பாடல்கள் இன்றும் கேட்போரை மயங்கச் செய்கின்றன.

1955 ல் ;மகேஸ்வரி' என்ற படம் வெளியாகி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற மக்கள் கவிஞனை தமிழ்த் திரை யுலகுக்கு கொடையாகக் கொடுத்தது.

கோயம்புத்தூரில் அமைந்திருந்த பட்சிராஜா ஸ்டுடியோ 1950 முதல் 1960 வரையில் மிகப் பரபரப்பான படப்பிடிப்புக் கூடமாக இருந்தது.நாளைடைவில் சென்னையிலேயே ஸ்டுடியோக்கள் அமைந்து விட்டதால் பட்சிராஜா ஸ்டுடியோவின் தேவை குறைந்து போனது. 

1956 ஆம் ஆண்டில் சினிமா ஜாம்பவான் எல்.வி.பிரசாத் அவர்களால் துவங்கப்பட்ட பிரசாத் ஸ்டுடியோ இன்றளவும் ஒரு முழுமையான திரைப்படத் தயாரிப்புக் கூடமாகத் திகழ்ந்து வருகிறது.


முதல் வண்ணப் படம் 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து 1956ல் வெளியான 'அலிபாபா வும் நாற்பது திருடர்களும் 'படம்தான் தமிழ்த் திரை யுலகின் முதல் வண்ணத் திரைப் படமாகும்.

கூட்டிசை பாடி வந்த லூர்து மேரி ராஜேஸ்வரி என்ற எல்.ஆர். ஈஸ்வரி 1958 ஆம் ஆண்டில் கே.வி.மகாதேவனால் 'பெரிய இடத்துச் சம்பந்தம்' என்ற படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டுப் புகழ் பெற்றார்.'வாராயோ தோழி வாராயோ'என்ற அவரது பாடல் தமிழ்நாட்டுத் திருமண நிகழ்ச்சிகளில் இன்றும் ஒலிக்கத் தவறுவதில்லை.

ஜெயசங்கர்,முத்துராமன்,ரவிச்சந்திரன்,சிவகுமார்,பி.எஸ்.வீரப்பா,எம்.என்.நம்பியார்,அசோகன், மேஜர் சுந்தரராஜன், ஆர்.எஸ். மனோகர், எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்காராவ், வி.கே. ராம சாமி,கே.ஏ .தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பின்னாளில் பத்திரிகையாளரான சோ ஆகிய நடிகர்களும் கண்ணாம்பாள், சாவித்திரி, பி.பானுமதி, அஞ்சலி தேவி, ஈ.வி. சரோஜா,சரோஜாதேவி,பத்மினி,சவுகார் ஜானகி, விஜயகுமாரி, கே.ஆர்.விஜயா,காஞ்சனா, ஜமுனா,சாரதா, வாணிஸ்ரீ,புஷ்பலதா,டி .பி.முத்துலட்சுமி,சச்சு ஆகிய நடிகை களும் 1960ஆம் ஆண்டு களின் இறுதி வரையிலும் தமிழ்த் திரையுலகில் பெரும் புகழோடு திகழ்ந்தார்கள். 

1961ஆம் ஆண்டில் தமிழ்த்  திரையுலகம் வாலி என்ற மகா கவிஞனை வரமாய்ப் பெற்றது.ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி தலைமுறை வித்தியாசங்களைத் தவிடு பொடியாக்கி தன எழுத்தில் இன்றும் இளமையோடு வாழ்கிறார்.அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் புனைந்த சாதனைச் சரித்திரமும் இவர் வசமே உள்ளது.

1962 ஆம் ஆண்டில் வெளியான மறக்க முடியாத திரைக்காவிய மான ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தின் மூலமாக அறியப்பட்ட நாகேஷ் 'சர்வர் சுந்தரம்; மூலம் கதாநாயக அந்தஸ்துக்கு உயர்ந்து தொடர்ந்து நகைச்சுவை வேடங்களில் நடித்து இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்டார். .'காதலிக்க நேரமில்லை' செல்லப்பாவையும் ,'திருவிளையாடல் தருமியையும்,'எதிர்நீச்சல்' மாதுவையும் ,'தில்லானா மோகனாம் பாள்' வைத்தியையும் தமிழ் உலகம் எந்நாளும் மறக்காது.

ஏ .சி.திருலோகச்சந்தர்,ஏ .பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ் ணன்,சி.வி.ராஜேந்திரன்,ஸ்ரீதர், பி.மாதவன், பி.நீலகண்டன், ஏ .பீம் சிங் ,கிருஷ்ணன் பஞ்சு ஆகியவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்த் திரையின் மிகச் சிறந்த இயக்குனர்களாக விளங்கினார் கள்.

ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை'யில் [1965] அறிமுகமான ஜெய லலிதா தொடர்ந்து வெற்றிப்படக் கதாநாயகியாகத் திகழ்ந்து பின்னாளில் எம்.ஜி.ஆரால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்குப்பின் கட்சித் தலைமையேற்று தமிழ்நாட்டின் முதல்வரானார்.

1969 ல் வெளியான 'சிவந்தமண் 'திரைப்படம் முதன்முதலாக வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பெருமையைப் பெற்றது.

இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் உருவான 'சிங்கார வேலனே தேவா'என்ற பாடல் எஸ்.ஜானகியை தமிழ் மக்கள் மனதில் அரியணை போட்டு அமர்த்தி வைத்தது.

'குங்குமப் பூவே,கொஞ்சு புறாவே' என்ற பாடல் சந்திபாபுவை புகழின் உச்சத்துக்குக் கொண்டு சேர்த்தது.

'சாந்தி நிலையம்' படத்தில் இயற்கை என்னும் இளைய கன்னி' என்று பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் அடுத்து எம்.ஜி.ஆரின் 'அடிமைப்பெண்'ணில் பாடிய 'ஆயிரம் நிலவே வா'
பாடலின் வாயிலாகப் பிரசித்தி பெற்று தன இளமை துள்ளும் குரலால் இன்றும் ரசிக்க வைக்கிறார். 

புதுமைப்பித்தன்,நாடோடி மன்னன்,ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண்,ரிக்க்ஷாக்காரன்,உலகம் சுற்றும் வாலிபன், வீர பாண்டிய கட்டபொம்மன்,கப்பலோட்டிய தமிழன்,வசந்த மாளிகை,தங்கப்பதக்கம்,கல்யாணப்பரிசு,கொஞ்சும் சலங்கை, களத்தூர் கண்ணம்மா ஆகிய படங்கள் 60 ஆம் ஆண்டுகளின் குறிப்பிடத்தக்க தமிழ்ப்படங்களாகும்.

சிவாஜி கணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' கெய்ரோ திரைப்பட விழாவில் பரிசு பெற்று தமிழ்த் திரையுலகத்துக்கு அடையாளம் பெற்றுத் தந்தது.


முதல் 70 m.m படம் 


ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் உருவான ' ராஜ ராஜ சோழன்' தமிழ்த் திரையுலகின் முதல் 70 m.m  அகல சினிமாஸ்கோப் படமாகும்.

60 களின் பிற்பகுதியில் சாண்டோ சின்னப்பாத் தேவரின் 'தேவர் பிலிம்ஸ்'நிறுவனம் எம்.ஜி.ஆரின் நடிப்பில் பல பெரிய வெற்றிப் படங்களைத் தயாரித்து வழங்கியது.

பஞ்சு அருணாசலம்,மருதகாசி போன்றவர்கள் சிறந்த வசன கர்த்தாக்களாக வலம் வந்தார்கள்.

அறுபதுகளின் பிற்பகுதியில் மிகுந்த முற்போக்கு எண்ணம் கொண்ட ஒரு இயக்குனர் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தமிழ்ப்படங்களின் போக்கையே மாற்றினார்.அவர் கே.பாலச்சந்தர்.பிரச்னைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக மக்களின் முன் படைத்த அவரை தமிழ்த் திரையுலகம் பெரும் சாதனையாளராகக் கொண்டாடி வருகிறது.

தற்காலத்தில் தமிழ்த் திரையின் வைரங்களாகச் ஜொலித்து வருகின்ற ரஜனிகாந்த், கமலஹாசன்,பிரகாஷ்ராஜ்,விவேக் போன்றவர்கள் இந்தக் கலைஞனால் கண்டெடுக்கப்பட்டு பட்டை தீட்டப்பட்டவர்கள்தான்.

ரஜனி,கமல் 

பாலச்சந்தரின் இயக்கத்தில் ரஜனிகாந்த், கமலஹாசன்,ஸ்ரீதேவி ஆகியோரின் நடிப்பில் வெளியான ;மூன்று முடிச்சு' தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய அலையைத் தோற்றுவித்தது.

ரஜனி தனித்துவமான ஸ்டைல் நடிப்பால் மக்களைக் கவர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனார்.

கமல் பரீட்சார்த்தமான மற்றும்  வித்தியாசமான தோற்றங்களி லும் கதாபாத்திரங்களிலும் நடித்து சாதனை மேல் சாதனை படைத்து உலக நாயகனானார்.

ஸ்ரீதேவியை  ஹிந்தித் திரையுலகம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது.அங்கேயும்  வெற்றி பெற்று அவர் அகில இந்திய நட்சத்திரமானார்.



                                                                    [   ......... பாகம் -2 ல் தொடர்கிறது. ]







வெள்ளி, 25 ஜனவரி, 2013

பார்த்தோம்,பகிர்ந்து கொள்கிறோம் , -'வானம் பார்த்த பூமி'











தென்மேற்கு, வடகிழக்குப்

 பருவமழைகள் பாதை மாறிட

 பால் திரண்ட  நெல்மணிகள்

கழனியிலே காய்ந்து கருக

நீர் வறண்ட பொய்கையிலே

சேற்று மீன் பிடிக்கிறார்கள்

எம்மக்கள்.

தம் முறை வருமளவும்

கரையினிலே வாடிக் காத்திருக்கின்றன


கொக்குகள்.








ஞாயிறு, 13 ஜனவரி, 2013

தமிழகம் தரணிக்குத் தந்த இரு மாபெரும் பரிசுகள்.


 " தோணி மற்றும் கட்டுமரம் -தமிழுலகம் உலகுக்குத் தந்த இரு மாபெரும் பரிசுகள்"- நாம் உருவாக்கிய இந்த ஆவணப் படத்தின் தமிழ் உரைநடையை இங்கே தந்திருக்கிறோம்.





விடிகாலை நேரத்தில் கடற்கரையைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சிதான்.மெதுவாக வெளுத்துவரும் வானத்தின் பின்னணியில் கண்முன்னே விரியும் காட்சிகள் ஒரு உயிருள்ள ஓவியம் போல மனதில் ஆழப் பதிந்து விடுகின்றன.

இந்திய நாட்டின் கடற்கரை 4050 மீனவக் கிராமங்களைக் கொண்டு ஏறத்தாழ 8118 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறந்து விரிந்திருக்கிறது.

2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி 
ஒன்றரைக்கோடி இந்திய மீனவர்கள் ஏறத்தாழ இரண்டு லட்சத்து எட்டாயிரம் பாரம்பரிய மீன்பிடிப் படகுகளையும் ஐம்பத்தையாயிரம் இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளை யும் ஆயிரத்து இருநூற்று ஐம்பது மின் விசைப் படகுகளை யும் நூறு ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

பழங்காலத்தில் அருகிலிருக்கின்ற தீவுகளுக்குச் சென்று வருவதற்காக மனிதன் சிறு படகுகளைப் பயன்படுத்தினான். அதில் நெடுந்தொலைவு பயணம் செய்யும் எண்ணம் அப்போது அவனிடம் இருக்கவில்லை.

மரத்தைக் குடைந்து உருவாக்கப்பட்ட அந்த சிறு படகு ஒருவர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் தான் இருந்தது.அந்தப் படகுகளை அவர்கள் ஆழமற்ற நீர்நிலை களில் மீன்பிடிக்கவும் பயன்படுத்தினார்கள்.இன்றும் இந்தப் படகுகள் அதன் ஆரம்ப காலத் தோற்றத்திலேயே ஆஸ்திரேலிய மற்றும் பாலினேசியப் பழங்குடிகளால் பயன்படுத்தப்படுகின்றன.

காலப் போக்கில் காற்றின் ஆற்றலை அறிந்து கொண்ட மனிதன் காற்றின் போக்கிற்க்கேற்றவாறு நெடுந்தொலைவு பயணம் செய்யும் வகையில் பாய்மரத்தை உருவாக்கினான். 

' தோணி ' என்று தென்னிந்திய மக்களால் அழைக்கப் படுகின்ற ஒருவகைப் படகு இந்தியத் துணைக்கண்டம், கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை,அரேபியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது.'





மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலான ' தொல்காப்பிய'த்தில் இந்த வகையான படகுகளைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன இன்னொரு பண்டைய தமிழ் இலக்கிய நூலான ' சேந்தன் திவாகரம் ' தோணியை நீண்ட கடல் பயணம் மேற்கொள்கின்ற மரக்கலமாக வகைப் படுத்துவதிலிருந்து தோணியின் பழம்பெருமையை உணர்ந்து கொள்ள முடிகிறது. .

மேலும் சேந்தன் திவாகரம் கடல்பயணம் செய்கின்ற மரக்கலங்களை வங்கம், பாதை,தோணி ,யானம், தங்கு, மதலை,திமில், பாறு ,சதா மற்றும் போதன்தொல்லை என்று வகைப்படுத்துகிறது. 

தோணியின் மற்ற பெயர்களாக பகடு,பஹ்ரி ,அம்பி,ஓடம், திமிலை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன

இது தவிர மலையாள மொழியில் வல்லம்,வத்தல்,வஞ்சி என்று படகுகளைக் குறிக்கின்ற சொற்களெல்லாம் பண்டைய தமிழ்ச் சொற்களேயாகும்

சரித்திர காலத்துக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வரும் இன்னொரு வகையான படகு தமிழ் மொழியில் 
' பரிசல் ' என்று அழைக்கப்படுகிறது.

பண்டைய தமிழ் இலக்கிய நூலான ' அகநாநூறின் ' சில செய்யுள்கள் தமிழர்களின் தோணிகள் அளவில் பெரியதாக வும் அதிக அளவில் பயணிகளையும் பொருட்களையும் ஏற்றிச் செல்லத் தக்கதாகவும் இருந்ததாகச் சொல்கிறது.

பாரம்பரியமாக வேம்பு, நாவல்,இலுப்பை ஆகிய மரங்கள் நீரில் மூழ்கியிருக்கின்ற தோணியின் அடிப்பாகங்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.தேக்கு மற்றும் வெண் தேக்கு மரங்கள் பக்கவாட்டு மற்றும் மேற்பகுதிகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன

சாதரணமாக சிறிய தோணி ஒன்றைக் கட்டுவதற்கு ஒரு மாத காலமும் பெரிய தோணியைக் கட்டிமுடிக்க ஒரு ஆண்டு காலமும் ஆகிறது.தற்காலத்தில் சிறிய தோணியைச் 
செய்து முடிக்க ஐம்பதாயிரம் ரூபாயும் பெரிய தோணியைக் கட்ட பத்து லட்சம் ரூபாயும் செலவாகிறது.

'தோ ' [ Dhow ] என்று அழைக்கப்படுகின்ற அரேபிய நாட்டுப் பாரம்பரியக் கப்பல் தோற்றத்திலும் உச்சரிப்பிலும் தமிழ்நாட்டுத் தோணியை ஒத்திருக்கிறது.சாதரணமாக தோணி ஒரு பாய்மரத்தைக் கொண்டது என்றாலும் பல பாய்மரங்கள் கொண்ட தோணிகளும் பயன்பாட்டில் இருந்து வந்தன.'

இந்த வகையிலான தோணிகள் பழங்காலத்தில் இந்தியா,பாகிஸ்தான்,அரேபியா மற்றும் ஆப்பிரிக்கக் கிழக்குக் கடற்கரைகளில் புழங்கி வந்தன.சிறிய அளவிலான தோணிகள் பன்னிரண்டு பணியாளர்களையும் பெரிய தோணிகள் முப்பது பணியாளர்களையும் கொண்டிருந்தன. இவை நீண்ட அடிப்பாகத்தையும் 300 முதல் 500 டன் எடையையும் கொண்டிருந்தன.

ஒரு உடைந்த வெண்கல மணியொன்று 1836ஆம் ஆண்டில் ' வில்லியம் கொலேன்சோ' [William Colenso ] என்ற பாதிரியாரால் நியூசிலாந்து நாட்டின் வடபகுதியில் ' வாங்கரெய் ' [Whangarei ] என்ற  இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.அது மாவோரி பூர்வ குடிகளால் உருளைக்கிழங்கு வேக வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.





அந்த மணியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை தமிழ் எழுத்துக்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டன. 'முகையதீன் பக்சின் கப்பலின் மணி' என்று அவை மொழி பெயர்க்கப்பட்டன.அந்த மணி ஐநூறு ஆண்டுகள் பழமையானது.அந்த மணிக்கு வில்லியம் கொலென்சொ ' தமிழ் மணி' என்று பெயரிட்டார்.

சீன நாட்டின் காண்டன் ' [ Conton ] பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சில தமிழ்மொழிக் கல்வெட்டுக் குறிப்புகள் தமிழ் மக்கள் உலகம் முழுவதும் நீண்ட பயணம் செய்திருப்பதை உணர்த்துகின்றன.

சமீப காலத்தில் இந்திய  நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது வ.உ .சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடியிலிருந்து கொழும்புவிற்கு வியாபாரக் கப்பல் சேவையைத் துவங்கி 'கப்பலோட்டிய தமிழன்' என்று பெயர் பெற்றார்

தற்காலத்தில் தோணிகள் கண்ணாடி இழைப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.சக்தி வாய்ந்த இயந்திரமும் செலுத்துச் சக்கரமும் இணைக்கப்படுகிறது. 

மிழ் மக்கள் உலகுக்கு அளித்த மற்றுமொரு மதிப்பிட முடியாத பரிசு 'கட்டுமரம்'.இரண்டு அல்லது மூன்று மரத் துண்டுகளை இணைத்து கயிறால் கட்டப்பட்டதுதான் கட்டுமரம்.இது ஒரு மனிதனை மட்டுமே சுமக்கக் கூடிய அளவுக்கு சிறியது.அதில் இருப்பவரின் கால்கள் கூட பெரும்பாலும் நீரில்தான் இருக்கும்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 'பரவர்கள்' என்ற மீனவ மக்களே பண்டைக்காலத்தில் கட்டுமரங்களைப்  பயன்படுத்தியிருக்கின்றனர்.ஆரம்ப காலங்களில் கட்டுமரங் களைச் செலுத்த துடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. நாளடை வில் நீண்ட தூரம் பயணம் செய்யும் நோக்கத்தோடு பாய்மரங்களும் இணைக்கப்பட்டன.





இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்ற 'கட்டமரான்' [Cattamaran ]என்ற ஆங்கிலச் சொல் இணைத்துக் கட்டப்பட்ட மரம் என்று பொருள் தருகின்ற கட்டுமரம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்தே வந்தது.தமிழ்நாட்டுக் கட்டுமரங்கள் தம் பழைய அமைப்பிலிருந்து கொஞ்சமும் மாறாமலேயே இருக்கின்றன.

மீனவர்கள் கட்டுமரத்தின் துணையோடு தனி மனிதனாகக் கரையோரக் கடலுக்குள் சென்று மீன் பிடித்துத் திரும்பு கிறார்கள். இணைத்துக் கட்டப்பட்ட அந்த மரத்துண்டுகளை நம்பி பல குடும்பங்கள் கரையில் காத்திருக்கின்றன.

கட்டுமரங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அடிப்பாகங்களைக் கொண்டவை.தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள பல்வேறு வகையான கட்டுமரங்கள் பாலினேசியப் பூர்வகுடி மக்களின் கட்டுமர அமைப்பினை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் கட்டுமரம் என்ற தமிழ்ப் பெயராலேயே அழைக்கப் படுகின்றன.

பதினைந்தாம் நூற்றாண்டுக் காலத்தில் தமிழ்ச் சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கடற்படையைக் கொண்டிருந் தார்கள்.அவர்களுடைய பெரும்பான்மையான கப்பல்கள் கட்டுமர செயல்பாட்டின் அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டிருந்தன.சோழர்களின் சில கப்பல்களின் சிறப்புகளைக் காண்போம்.

'தரணி' -ஆழ்கடல் போர்களில் இந்த வகைக் கப்பல்கள் பயன் படுத்தப்பட்டன

'லோலா '- காவல் பணிகளுக்கும் சிறு அளவிலான தாக்குதல் களுக்கும் இவை பயன்பட்டன.

'வஜ்ரா '- இவை இலகு ரக ஆயுதங்களைத் தாங்கி விரைவான தாக்குதல்களில் ஈடுபட்டன.

'திரிசடை ' -இது மூன்று பாய் மரங்களைக் கொண்டிருந்தது. வேகம் குறைவு என்றாலும் இந்தக் கப்பல் கனரக ஆயுதங் களைத் தாங்கி பல்முனைத் தாக்குதல்களில் பயன்படுத்தப் பட்டது.

ராஜ  ராஜ சோழன் தனது கப்பல்களைக் கட்டும் பணியில் அரேபிய மற்றும்  சீன நாட்டுப் பொறியாளர்களை அமர்த்தியிருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தீப்பந்து களை வீசக்கூடிய சீன நாட்டுப் பொறியமைப்பை சோழக் கப்பல்கள் பெற்றிருந்தன.இந்த மாதிரியான சிறப்புகளால் சோழர்கள் இலங்கை, மலேயா, இந்தோனேசியா , கம்போடியா ஆகிய நாடுகளின் மீது கடல்வழி படையெடுப்புகளை நடத்தி கி.பி 984க்கும் 1042க்கும் இடைப்பட்ட காலங்களில் அந்நாடுகளை ஆட்சி செய்தார்கள்.

சிறப்பான கடற்படையைக் கொண்டிருந்த ராஜேந்திர சோழன் கி.பி 1007 ஆம் ஆண்டில் ஸ்ரீவிஜயப் பேரரசு மீது படையெடுத் தான்.எதிரியின் கடற்படையை அழித்தது மட்டுமல்லாமல் ' கெடா ' பகுதியைக் கைப்பற்றி மலேயா தீபகற்பத்தில் சோழ ஆட்சியையும் நிறுவினான்.

பூம்புகார் நகரிலிருந்து பத்தொன்பது கல் தொலைவில் கடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட கப்பலின் சிதைவுகள் கி.பி 200- 848க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சோழர்களின் கப்பலைச் சேர்ந்தவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இந்தச் சிதைவுகளை மாதிரியாகக் கொண்டு அந்தக் கப்பலின் அடிப்பாகத்தைச் செய்து அதை திருநெல்வேலி கடல்சார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்துள்ளார்கள். 

சோழர் காலத்தைச் சேர்ந்த கப்பலின் உருவங்களைக் கொண்ட கற்சிற்பங்கள் கம்போடிய நாட்டு ' அங்கோர்வாட் ' 
Anghorvat ] கோவிலிலும் இந்தோனேசிய 'போரோபுதுர்' [Poropudur ]
கோவிலிலும் இருக்கின்றன.இவை சோழர்களின் கப்பல் கட்டும் திறனை பறைசாற்றுகின்றன.

இந்தோனேசியாவிலுள்ள பாலித்தீவு இன்றளவிலும் அழியாது வேரூன்றிய தமிழ்க் கலாசாரத்தைக் கொண்டிருக் கிறது.எண்பத்தேழு கல் நீளமும் ஐம்பத்தாறு கல் அகலமும் மட்டுமே கொண்ட இத்தீவில் நான்காம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுக்குள்ளாக தமிழர்களால் கட்டப்பட்ட இரண்டாயிரம் கோவில்கள் உள்ளன.




' யோக்யகர்த்தா ' [ Yogyakarta ] நகரில் அமைந்துள்ள ; பிரம்பனான் கோவில் ' Perumpanan ] அங்கே ஆட்சி புரிந்த தமிழ் மன்னர்களின் கட்டிடக் கலைத்திறனுக்கு ஒரு அழிக்க முடியாத ஆதாரமாகத் திகழ்கிறது.

பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மரக்கலங்கள் எழுநூறு பேர் வரையில் ஏற்றிச் செல்லத் தக்கதாக இருந்தன.தமிழ் மக்கள் கப்பல் கட்டும் கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததையும் அவர்கள் சிறந்த மாலுமிகளாக இருந்ததையும் இது எடுத்தியம்புகிறது.

சோழர் காலத்து வணிகர்களான  'திசை ஆயிரத்து ஐநிருவர்' இந்த வகைக் கப்பல்களில் தம் பொருட்களை ஏற்றிச் சென்று உலகம் முழுவதும் வணிகம் செய்து வந்தனர்.இன்னுமொரு பழங்கால வணிக அமைப்பினர் ' மணிக்கிராமம் செட்டி'களா வார்கள்.எட்டுத் திசைகளும் பயணம் மேற்கொண்டு வணிகம் செய்த இவர்களைப் பற்றி ஏராளமான பதிவுகளும் குறிப்பு களும் உள்ளன.

சாகசப் பயன்கள் புரிந்த 'வலங்கை' மற்றும் இடங்கை'என்று அழைக்கப்பட்ட வணிகர்கள் குதிரைகள், யானைகள், ரத்தினக் கற்கள் ,வாசனைத் திரவியங்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் வணிகம் செய்ததையும் அறிகிறோம்.

தமிழ் வணிகர்களின் பெருங்கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் பெர்சிய வளைகுடா மட்டுமின்றி செங்கடல் பகுதிகளிலும் மத்திய தரைக் கடல் மற்றும் எஜியான் கடல்களிலும் வலம் வந்தன.தமிழ் வணிகர்கள் முதலில் பஹ்ரைன் நாட்டில் தங்கி அதன்பிறகு அங்கிருந்து 'மெசபடோமியா' என்றழைக்கப்பட்ட தற்போதைய ஈராக் நாட்டின் பல பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்ததாக சரித்திர ஆசிரியர்கள் விளக்குகின்றனர்.

டைக்ரிஸ்,யூப்ரடீஸ் நதிகளுக்கிடையே அமைக்கப்பட்ட சோழர்களின் குடியிருப்புகள் சோழதேசம் என்று அழைக்கப்பட்டன.காலப்போக்கில் சோழதேசம் என்ற சொல் உச்சரிப்பு மருவி 'சல்தே' [Chaldea ] என்றானது. 

இறந்து பதம் செய்யப்பட்ட எகிப்தியர்களின் உடல்களில் [Mummy] இருந்த துணிகளில் இருந்த இந்தியச் சாயமும் [Indian ink]
 'பிர்ஸ் நிம்ருட் ' [Pirs Nimrut ] என்ற இடத்தில் இருந்த 'நெபுகட் நெஸ்ஸா Nepukatnezza ] மன்னனின் மாளிகையிலும் 'உர்'  [Ur ] என்ற இடத்தில் இருந்த நிலாக்கடவுள் கோவிலிலும் கண்டெடுக் கப்பட்ட தேக்கு மரத்துண்டுகளும் தென்னிந்தியா விலிருந்தே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இவை களெல்லாம் மேற்கு நாடுகளுடனான தமிழர் வணிகத் தொடர்புகளை விளக்குகின்றன.

பண்டைய பிராஹ்மி தமிழ் எழுத்துகள் பொறித்த சில உடைந்த பானைத் துண்டுகள் 'க்வாசிர் அல் க்வாடிம்'  '[Quseir-al-Qadim மற்றும் 'பெரினிகே ' Bereneke ] ஆகிய எகிப்திய செங்கடல் துறைமுகங்களில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.இந்த எழுத்துக்கள் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்த எழுத்துக்கள் 'உறிப்பானை' என்ற தமிழ்ச் சொல்லைக் குறிக்கின்றன.

துவக்க நூற்றாண்டுகளில் செங்கடல் வழியாக தமிழ் நாட்டுக்கும் ரோம் நகருக்கும் இடையே இருந்த வியாபாரத் தொடர்புகளுக்கு இந்தக் கண்டுபிடிப்புகள் அழுத்தமான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

செங்கடல் பகுதிகளில் தமிழ் மொழியின் வளமைக்கு மற்றுமொரு சான்றும் உள்ளது.'ஆக்ஸிரிங்கஸ் பேப்பிராய் ' [Oxyrhynkas papyri '] என்ற பண்டைய கிரேக்க மொழி நாடக வடிவத்தின் கதாபாத்திரங்கள் ஒரு தென்னிந்திய மொழியில் அநேகமாகத் தமிழ் மொழியில் பேசியதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.அந்த உரையாடல்களில் ஏறத்தாழ 1800 கடல் சார்ந்த தமிழ் மொழி வார்த்தைகள் இருந்ததாக தமிழ் மொழி வல்லுனர்கள் கூறுகின்றார்கள்.

இது தவிர தென் அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற 'மாயன்; பூர்வகுடி மக்களின் முன்னோடிகள் உண்மையில் பண்டைக்காலத்து தமிழ்க் கடலோடிகளே என்ற கருத்தும் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடையே நிலவுகிறது.மாயன் மக்களின் கருத்த நிறமும்,அவர்களுடைய கற்சிற்பங்களில் காணப்படும் தலைப்பாகை அணிந்த மாவுத்தர்களுடன் கூடிய இந்திய யானை உருவங்களும் ,தமிழ்நாட்டின் தாய விளையாட்டை ஒத்திருக்கும் அவர்களின் சித்திரங்களும், தமிழர்களின் கட்டிடக்கலையை ஒத்த அவர்களின் கல் கட்டுமானங்களும் இந்தக் கருத்துக்கு உறுதியான சான்று தருகின்றன

' மார்க்கோ போலோ ' என்ற ஐரோப்பியக் கடலோடி 1292 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்தியக் கப்பல்களைப் பற்றிச் சொல்கிறார்.

'மரத்தால் அவை கட்டப்பட்டிருந்தன.ஒவ்வொரு பாகமும் நல்ல முறையில் பலகைகள் பொருத்தப்பட்டு இரும்பு ஆணிகளால் இணைக்கப்பட்டிருந்தன.காய்ந்த சுண்ணாம்பும் தாவர இழைகளும் கலந்த கலவையில் எதோ ஒரு மரத் திலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் சேர்க்கப்பட்டு உறுதியாக் கப்பட்ட பூச்சு கப்பலின் அடிப்பாகத்தில் பூசப்பட்டிருந்தது.'


பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் கப்பல்கள் அடுக்குகளாகக் கட்டப்பட்டன.கப்பலின் ஒரு பகுதி சேதமடைந்தால் கூட பாதிப்பு எதுவுமின்றி தொடர்ந்து பயணம் செய்யும் வகையில் அது இருந்தது.

அந்தச் சமயத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை ஐரோப்பியர் கள் அறிந்திருக்கவில்லை.இதுவே மிக முன்னேறிய தற்காலத் தொழில் நுட்பத்துக்கு முன்னோடியாக அமைந்தது. தமிழர் கட்டுமரங்களின் இத்தகைய சிறப்புகளை ஐரோப்பியர் கள் அறிந்து கொண்டனர்.பிறகு அது ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பரவியது

1877 ஆம் ஆண்டில் ' நத்தானியேல் ஹெர்ஷொப் ' [Nathaniel Hershoffe] என்ற அமெரிக்கர் தனது சொந்த கட்டுமர மாதிரியை உருவாக்கினார்.

காலம் செல்லச் செல்ல கட்டுமரத்திலிருந்து நீர் விளையாட்டுப் படகுகளும் உல்லாசக் கப்பல்களும்,சரக்குக் கப்பல்களும், நவீன போர்க் கப்பல்களும் உருவாகின





மனிதனின் நாடு பிடிக்கும் ஆர்வமும் பொருள் சேர்க்கும் ஆசையும் மேலும் மேலும் தேவைகளை அதிகரித்து அதன் மூலமாக படகுகளின் உருவமும் தொழில் நுட்பமும் விரைவாக மாறிக்கொண்டே சென்றது.அதிவேகமாக நிகழ்ந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அணுசக்தி நீர்மூழ்கிகள் முதல் பிரமாண்ட சொகுசுக் கப்பல்கள் வரை உருவாக்க முடிந்தாலும் இது எல்லாவற்றுக்கும் தோணி மற்றும் கட்டுமரத் தொழில்நுட்பங்களே அடிப்படையாக அமைந்தன என்ற உண்மையை மறுக்க முடியாது.

தோணி மற்றும் கட்டுமரத்தின் கண்டுபிடிப்பு மனித நாகரிகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாது உலகப் பொருளாதார முன்னேற்றத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது.மனித சமுதாயத்தின் இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியதில் நாம் கொண்டுள்ள பங்குக்காக தமிழர்களாகிய நாமும் பெருமை கொள்ளலாம்.



ஆவணப்படத்தைக் காண இங்கே செல்லவும் .
http://www.youtube.com/watch?v=K57PemYq8i8&feature=share&list=UUVY0Wt_fI7rHGHrdyk8qqKQ