திங்கள், 24 டிசம்பர், 2012

எனது சில கைபேசி புகைப்படங்கள்





















கும்கி VS கொம்பன்




தமிழ்நாட்டில் ஜெயலலிதா அவர்கள் ஆட்சி அமைந்து விட்டாலே கோவில் யானைகளுக்காக ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் ஒன்று நடைபெறுவது வழக்கமாகி விட்டது. அப்படி ஒரு முகாமை நேரிடையாக நெருக்கமாக மிக விசாலமாக காணும் ஒரு வாய்ப்பு இந்த ஆண்டு கிடைத்தது.

முகாமினை ஆவணப் படமாகத தயாரிப்பதற்காக நாங்கள் அங்கே  சென்றிருந்தோம். அது ஏனென்று தெரியவில்லை வழக்கமாக முதுமலை
தெப்பக்காட்டில் நடக்கின்ற முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையத்துக்கு மாற்றப்பட்டிருந்தது.

மேட்டுப்பாளையத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தேக்கம்பட்டி கிராமத்தின் அருகில் காட்டுக்குள் பவானி ஆற்றின் கரையில் அமைந்திருந்தது முகாம்.அதுதான் சில பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்து விட்டது.பிரச்னை என்னவென்று கடைசியில் சொல்கிறேன். முதலில் யானைகளைப் பற்றிப் பேசிவிடுவோம்.

குளியல், நல்ல சாப்பாடு, நடைப்பயிற்சி, மருத்துவப் பரிசோதனைகள் என்று யானைகள் படு உற்சாகமாக இருந்தன.மனிதர்களைப் போலவே யானைகளும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவையாக இருக்கின்றன. சாந்தம் , கோபம் , கொடூரம் , போக்கிரி , காமெடி ..இப்படி.

பல யானைகள் பொதுவாக ஒரு வினோதமான சேட்டையைச் செய்கின்றன. வேற்று மனிதர்கள் தன அருகே வந்தால் அவர்கள் மீது துதிக்கையால் எச்சிலை ஊதி அடிக்கின்றன.அல்லது சிறு கற்களை எடுத்து வீசுகின்றன. இந்தக் கல்லால் அடிக்கும் விஷயத்தில் முகாமிலுள்ள பாகன்களால் சிறப்பான பயிற்சி [ ? ] அளிக்கப்பட்டு படவேடு லட்சுமி யானை எக்ஸ்பர்ட்டாக இருக்கிறது.

ஆனால் யானைகளை விட யானைப் பாகன்களே இங்கே எழுதப் பட வேண்டிய விஷயமாக இருந்தார்கள். தும்பிக்கைகளை நீட்டி யானைகளை யாசகம் வாங்க வைத்த பாகர்களையே பார்த்திருந்த நாம் இங்கே அவர்களின் இன்னொரு பரிமாணத்தைப் பார்த்தோம்.அந்தப் பரிமாணம் பிரமாண்டமான அந்த விலங்குக்கும் அவர்களுக்கும் இடையில் நிலவிய அமானுஷ்யமான  பாசப் பிணைப்பு,

திருவானைக்கோவில் யானை அகிலாவின் பாகன் அர்ஜுன்.

ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாளின் பாகன் சிவ ஸ்ரீதரன்.

படவேடு லட்சுமி யானையின் பாகன் ரங்கன் .

இவர்கள் மூவரும் எங்களை அதிகம் கவனிக்க வைத்தார்கள்.அர்ஜுன் காபி குடித்தபோது அகிலா அதைக் கேட்டு வாங்கிக் குடித்தது. பாகன் ரங்கன் எங்கள் முன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அது பிடிக்காத லட்சுமி யானை பின்னாலிருந்து துதிக்கையை நீட்டி பிளிறியபடி தன்னிடம் வந்துவிடும்படி ரங்கனை இழுக்க முயற்சித்தது.

அர்ஜுன் ஒரு விஷயம் சொன்னார்.....' இந்த அரை டம்ளர் காபியைக் குடித்து இந்த அகிலாவின் வயிறு நிறைந்து விடப் போறதில்லை. அதுக்காக
வொன்னும் நான் இந்தக் காபியைக் கொடுக்கவில்லை.ஆனால் நான் குடிக்கிற காபியில பங்கு போட்டு அதுவும் குடிக்கும்போது எங்களுக்குள்ள இருக்கற அன்னியோன்னியம் இன்னும் அதிகமாவுது.அதான்.'

ஆஜானுபாகுவாக இருந்த ஆண்டாளோ தன உருவத்துக்குச் சற்றும் பொருந்தாமல் படு சாந்தமாக இருந்தது. ஆண்டாளுக்கும்  அதன் பாகன் சிவ ஸ்ரீதரனுக்கும் இடையே ஸ்ரீதரனே சொன்னது போல ஒரு தகப்பனுக்கும் மகளுக்குமான உறவு நிலவுவதை நாங்களே பார்த்தோம்.அதனால்தானோ என்னவோ ஸ்ரீதரனின் கையில் பெரும்பாலும் அங்குசம் இருக்கவில்லை.

மிகப் புத்திசாலியான ஆண்டாளைப் பற்றி சிவ  ஸ்ரீதரன் சொன்ன விஷயங்கள் மலைக்க வைத்தன.அவையெல்லாம் பிறகொரு தனிக் கட்டுரையாக எழுதப்பட வேண்டிய விஷயங்கள்

இப்போது முகாம் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

ஒரு தொலைதூர ராணுவ முகாமின் நடவடிக்கைகளைப் பார்க்கின்ற வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை என்றாலும் கேள்விப்பட்டிருக்கிறோம்.அப்படிக் கேள்விப்பட்ட அனைத்தையும் இந்த ' யானைகள் சிறப்பு நலவாழ்வு  முகாமி'ல் நாங்கள் கண்டோம்.

முகாம் எந்நேரமும் சுத்தம் செய்யப் பட்டுக் கொண்டே இருந்தது.திறந்த வெளி இருப்பிடங்களில் இருந்த யானைகள் சுத்தமான பிராண வாயுவை நுகர்ந்தன. யானைகளுக்கான உணவுகள்  புத்தம் புதியதாக தனிக் கூடாரத்துக்கு வந்து இறங்கிக் கொண்டேயிருந்தன. மரங்களில் பொருத்தப் பட்டிருந்த 12 க்கும் மேற்பட்ட  கேமராக்கள் யானைகளை எந்நேரமும் கண்காணித்தபடி இருந்தன.இரவுகளில் பிரகாசமான விளக்குகள் ஒளிர்ந்தன.

ஆற்றின் இக்கரையிலும் அக்கரையிலும் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கோபுரங்களைப் பற்றி விசாரித்தோம்.அது காட்டு யானைகளைக் கண்காணிப்பதற்காக என்று சொன்னார்கள்.அப்போது அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்துவதற்கான நேரம் ஒன்று பிறகு வந்தது. அதை கடைசியில் சொல்கிறேன்.

யானைப்பாகர்களுக்கு டிஷ் ஆண்டெனா டிவி இணைப்போடு கூடிய நல்ல கூடாரங்கள் இருந்தன.லேட்டஸ்ட் சின்டெக்ஸ் மொபைல் டாய்லட் இருந்தது.டென்னிஸ் கோர்ட் இருந்தது.யானைகளுக்கு மட்டும் இல்லாமல் பாகர்களுக்கும் மருத்துவ முகாம்கள் இருந்தன.பெரிய ஜெனரேட்டரும் கட்டுப்பாட்டு அமைப்புகளும் 24 மணி நேர மின்சாரத்தை வழங்கின.

பெரிய உணவுக்கூடம் இருந்தது.சாப்பாட்டு மேசைகளும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.குளிர்ந்த அல்லது சூடாக எப்படி வேண்டுமானாலும் குடிநீர் எடுத்துக்கொள்ளும் வகையில் தானியங்கி எந்திரம் இருந்தது.புதிய , நவீன சமையலறைச் சாதனங்கள் இருந்தன.சமையல் பணியாளர்கள் சுத்தமாக சுகாதாரமான முறையில் உடை அணிந்திருந்தார்கள்.குறிப்பிட்ட சரியான நேரங்களில் மூன்று வேளை உணவும்  தேநீரும்  வழங்கப்பட்டது.

முதலமைச்சருக்கு யானைகள் நல்வாழ்வு முகாம் நடத்துவதில் இருக்கின்ற ஆர்வத்தை அனுசரித்துத்தான் அதிகாரிகளும் அலுவலர்களும் இவ்வளவு கவனத்துடன் செயல்படுகிறார்கள் என்பது நாம் அறிந்ததுதான்.அதே நேரத்தில் தானே புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடு நேரங்களிலும் மற்ற மக்கள் நலம் சார்ந்த  அரசுச் செயல்பாடுகளிலும் இந்த அக்கறையும் கவனமும் ஏன் இருக்கக் கூடாது.அப்படி இருந்தால் எப்படி இருக்கும்..? மிக மிக நன்றாக இருக்கும் தானே .நாங்கள்தான் நேரிலேயே பார்த்தோமே..பார்த்துச் செய்யுங்கள் அரசு அலுவலர்களே..

பிரச்னை ஒன்றைப்பற்றிச் சொல்லி அதைக் கடைசியில் சொல்வதாகச் சொல்லியிருந்தேன் .நினைவிருக்கிறதா..? இப்போது கடைசிக்கு வந்துவிட்டோம் அதனால் சொல்லிவிடுகிறேன்.

இரண்டாம் நாள் காலையில் நாங்கள் முகாமைப் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே  காட்டு யானைகள் வந்துவிட்டன.வனத்துறை அலுவலர்கள் பரபரப்படைந்து பட்டாசு வெடித்து அந்த நாலு யானைகளையும் காட்டுக்குள் துரத்தினார்கள். முகாமுக்குள் அமைதி நிலவியபோது வெளியே ஒரே களேபரமாயிருந்தது.சாயந்திரத்தில் மறுபடியும்  யானைகள் திரும்பி வந்துவிட்டன.

ஏன் வராது..? காட்டு யானைகள் வழக்கமாக ஆற்றுக்கு வரும் வழியின் குறுக்காகத்தானே  புதிய முகாம் அமைக்கப்பட்டிருகிறது. அங்கே  வைக்கப்பட்டிருக்கிற முகாமின் வரைபடத்திலும் இது யானைகளின் பாதை என்றே  குறிப்பிடப் பட்டிருக்கிறது.

யானைகளின் பாதை என்பது தெரிந்தும் எப்படி அந்தப் பாதையை மறைத்து முகாம் அமைத்தார்கள்..? யாருடைய முடிவு இது..? வனத்துறையா..? அல்லது அறநிலையத்துறையா..? அல்லது இரண்டுமே சேர்ந்ததா..? இப்படியான
நாதாரித்தனத்தினால்தான் நல்ல காரியங்களும் நாளைடைவில் நலிவடைந்து போகின்றன.


முகாம் நடைபெறுகின்ற 48 நாட்களும் அந்த மண்ணின் மைந்தர்கள் தண்ணீருக்காக அலையத்தான் போகிறார்கள்.நாட்டு யானைகள் வெளியே போனால்தான் அந்தக் காட்டு யானைகளுக்கு நிம்மதி கிடைக்கும்.

படப்பிடிப்பை முடித்துவிட்டு நாங்கள் எச்சரிக்கையாக நாலாபக்கமும் மரங்களுக்கிடையே உற்றுப் பார்த்தபடி முகாமை விட்டு வெளியேறி மேட்டுப்பாளையம் வந்துவிட்டோம்.

முகாமிலிருந்து நாங்கள் வெளியே வந்த போது யானைகளுக்கு சாயந்திர நடைப்பயிற்சி நேரம்.எதிரில் வந்த குட்டியானை அகிலாவைப் பார்த்ததும் கையை நீட்டினோம்.அகிலா  துதிக்கையை நீட்டி எங்களின் கையைத் தொட்டு விட்டு நடையைத் தொடர்ந்தது.

சரி ...அடுத்த வருடம் முகாம் எங்கே நடைபெறப்போகிறது..? மேட்டுப்பாளையமா....முதுமலையா..?









வெள்ளி, 7 டிசம்பர், 2012

மீனாம்பாள் ஆத்தா -சிறுகதை




இன்று காலை மீனாம்பாள் ஆத்தா இறந்து விட்டதாக ஊரிலிருந்து போன் வந்தது.  முகேஷ்தான் போன் செய்தான். 

சில நாட்களுக்கு முன் கிராமத்துக்குப் போயிருந்தபோது ஆத்தா உடல்நிலை மோசமாக இருப்பதாகக்  கேள்விப்பட்டு போய்ப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.உடல் வற்றிப்போய் எலும்புக் கூடாகப் படுத்திருந்தது ஆத்தா. பேசுவதற்கு தெம்பில்லை.அந்த நிலையிலும் என் பிள்ளைகளைப் பற்றித்தான் ஆத்தா விசாரித்தது.

ஆனால் ஆத்தா எந்தப் பிள்ளையைப் பற்றி விசாரித்ததோ அந்தப் பிள்ளை வளர்ந்ததுக்கப்புறம் இதுவரையிலும் ஆத்தாவைப் பார்த்ததே இல்லை. என்னமோ தெரியலை. ஆத்தாவின் ஆசை கடைசி வரை நிறைவேறவே யில்லை. அந்தக் கொடுப்பினை என் பிள்ளைகளுக்கும் கிடைக்கவில்லை.

' எல்லாருமா வந்திருந்து ஆத்தாவை நல்லபடியா தூக்கிப் போட்டுறுங்கப்பா 'என்று அப்போது ஆத்தாவின் மகன் திருப்பதி என்கிட்ட சொன்னார்.

'எப்படியும் வந்து விடுவேன் ' என்று சொல்லிவிட்டு முகேஷிடம்  என்னுடைய போன் நம்பரைக் கொடுத்துட்டு வந்திருந்தேன்.ஆத்தாவோட உயிர் பிரிஞ்ச உடனேயே முகேஷ் போன் செய்து விட்டான்.

மீனாம்பாள் ஆத்தா நல்ல செவப்பா அழகா இருக்கும். ஆத்தானாலே எனக்கு முதலில் மீன்குழம்புதான் நினைவுக்கு வரும்.ஆத்தா செய்யும் மீன்குழம்புக்கு அப்படி ஒரு சுவை.எங்க தாத்தா முத்துவேல் அம்பலம் ஆத்தா மேல மயங்கிப் போய்க் கிடந்தார்னா  அதுக்கு ஆத்தாவோட அழகு மட்டும் காரணமில்லை. சமையலும் ஒரு காரணம்.

எங்க அம்மாவோட அப்பாதான் அந்தத் தாத்தா  தாத்தா நாட்டு அம்பலம். அந்தக் காலத்துல தாத்தா அனுமதி கொடுத்தாத்தான் போலீஸ் ஊருக்குள்ள வரும்.தாத்தா தெம்போட இருந்த வரையில அந்தப் பகுதியில கோர்ட்டு, கேஸுன்னு யாரும் போனதில்லை. எந்தப் பிரச்னை யானாலும் தாத்தாவே தீர்த்திடுவார் .

கொஞ்ச வருஷத்துக்கு முன்னால தாத்தாவோட ஊருக்கு முதன்முதலா போலீஸ் ஸ்டேஷன்  வந்திருந்த சமயம்.ஒருநாள் தாத்தா ஊர்ப்பக்கம் போயிருந்த போது பின்னாலிருந்து யாரோ கூப்பிடுற சத்தம் கேட்டுச்சு. என்னன்னு திரும்பிப் பார்த்தா ஒரு போலீஸ்காரர்

' ஒண்ணுமில்ல தம்பி. இந்தாப் போற பையன்தான் தூனா மூனா அய்யாவோட பேரன்னு ஒருத்தர் சொன்னாரு.அதான் அய்யாவோட  பேரனப் பார்த்துரு வோம்னு ஓடி வந்தேன் ' அப்படின்னாரு.

அந்த அளவுக்கு தாத்தா ஒரு லெஜண்டா இருந்தாரு  .இப்பவும் ' முத்துவேல் நகர் ' னு அவர் பேர்ல ஒரு ஊர் இருக்கு.

தாத்தா வீடு எப்பவும் ஜேஜேன்னு இருக்கும்.அப்ப அதான் ஏரியாவிலேயே பெரிய வீடுங்கறதால பங்களான்னுதான் சொல்லுவாங்க.தெனமும் பந்திதான். பக்கத்துல கடற்கரையிலயிருந்து யாராவது நண்டு மீனு கொண்டு வந்துருவாங்க.நண்டக் கழுவி மீன நறுக்கி ஆத்தா அவ்வளவு பேருக்கும் முகம் சுளிக்காம சமைச்சுப் போடும்.ஆத்தா வைக்கிற மீன் குழம்புக்காகவே ஒரு குரூப்பு தெனமும்  சீட்டுக் கச்சேரிக்கு தாத்தாவுக்கு கைசேர வந்திரும்.

நான் அப்ப ஹை ஸ்கூல் படிச்சுக்கிட்டுருந்தேன். சனிக்கிழமை மத்தியானமே எவனாவது தாத்தா ஊர்க்காரன் சொல்லிருவான்

.' உங்க தாத்தா உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாருடா ' ன்னு.

சாயந்திரம் பாம்பாறு தாண்டி தாத்தா ஊருக்குப் போனா ரெண்டு நாளைக்கு மீனாம்பாள்  ஆத்தா கைமணம்தான்.

தாத்தா ஊர்ல இன்னொரு விசேஷம் சொல்லியே ஆகணும்.அக்ரகாரத்துல ஒரு பையன் ஒரு சின்ன டப்பா புரொஜக்டர் மெசின வச்சி அதுல ஒரு அடிநீளப் பிலிம் ரோலைப் போட்டு படம் காட்டிக்கிட்டிருந்தான்.. படம் பார்க்க டிக்கட் பத்துகாசு இல்லேன்னா நாலு புளியம்பழம் . பிற்காலத்தில அரசாங்க வேலையைக் கூட மதிக்காம கோடம்பாக்கத்தை நோக்கி என்னைத் துரத்தின சினிமா ஆசைக்கு இங்கதான் விதை போடப்பட்டிருக்கணுங்கறது என்னோட ஒரு கணக்கு.

வைகாசி மாசம் தாத்தா ஊர்லயிருக்கற பெரிய சிவன் கோவில்ல  பதினஞ்சு நாள் திருவிழா நடக்கும்.சுத்துப்பட்டு முப்பத்தியிரண்டு கிராமமும் அங்கதான் இருக்கும்.பதினஞ்சு நாளும்  சொந்தக்காரப் பயலுக எல்லாம் தாத்தா வீட்டுல கேம்ப் போட்டுருவோம். அங்கேயிருந்து தான்  ஸ்கூலுக்குப் போவோம்.

ஸ்கூல்லயிருந்து வரும்போது பாம்பாத்துல திருவிழாவுக்கு வியாபாரத் துக்குப் போற மாம்பழ வண்டிங்கள இழுக்க முடியாம மாடுங்க திணறிக்கிட்டு நிக்கும்.வண்டிக்காரர் வண்டியைத் தள்ளிவிடச் சொல்லி எங்களைக் கூப்பிடுவார். வண்டியைத் தள்ளி விடுற மாதிரியே வண்டிக்குள்ள கையை விட்டு மாம்பழத்தை எடுத்து பைக்குள்ள போட்டுக்குவோம்.

தேரோட்டமும் தெப்பமும் முடிஞ்சதுக்கப்புறம்தான் அவுங்கவுங்க ஊருக்குப் போவோம்.பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் , கரகாட்டம் இதெல்லாம் ஆடுறவங்க எங்க தாத்தாவோட இன்னொரு வீட்டுலதான் தங்கியிருப்பாங்க. அவங்க எனக்கு குடுக்கற மரியாதையில எனக்கு கொஞ்சம் தலை கனத்துப்போயிருந்தது உண்மைதான்.

இந்தப் பதினஞ்சு நாளும் மீனாம்பாள் ஆத்தாவுக்கு சமைச்சுப் போட்டு மாளாது.ஆத்தா சமையல்ல மட்டும் இல்ல ..பேச்சுலயும் எக்ஸ்பர்ட்டுதான். பசும்பொன் படத்தில ராதிகா பேசுமே அதேமாதிரி ஆத்தாவும் சொலவடையும் எசப்பாட்டும்  நையாண்டியும் நக்கலுமா எடுத்துக்கட்டி பேசுச்சுன்னா  நாங்க எல்லாம் சுத்தி உக்காந்து கேட்டுக்கிட்டே இருப்போம்.

தாத்தா நல்லாத் தண்ணியடிப்பாரு.எங்க அப்பா கூட ஒருநாள் சொன்னாரு

' டேய் ..தாத்தா மஞ்சள் கலர்ல  எதுவும் குடிக்கச் சொல்லி தந்தார்னா  குடிச்சிராதே ' அப்படின்னு .

பக்கத்துல சிலோனுக்கு அடிக்கடி வியாபாரத்துக்குப் போற ராவுத்தருங்க வெளிநாட்டுச் சரக்கு கொண்டு வந்து கொடுப்பாங்க.ஆத்தாவ மீனும் கறியும் வறுக்கச் சொல்லி கூட்டாளி சேத்துக் குடிச்சுட்டு போதையில ஆத்தாவையே போட்டு அடிப்பாரு தாத்தா. அதுக்குக் கூட ஏதாவது சொலவடை சொல்லி ஆத்தா காமெடி பண்ணும்.

அப்படிப்பட்ட ஆத்தா இன்னிக்கு செத்துப்போச்சு. இப்போது நான் கிளம்ப வேண்டும்.ஆனால் எப்படி..?  ஊரிலிருந்து வந்து மூன்று நாள்தான் ஆகிறது. நாளையிலிருந்து மூணு நாள் ஒரு டாகுமெண்டரி படம் ஷூட்டிங் ப்ளான் பண்ணியிருக்கோம்..

ஊருக்கு போன் போட்டு என் தம்பியையும் அவன் பொண்டாட்டியையும் போகச் சொன்னேன்.எங்க நிலத்துக் குத்தகைதாரர்கிட்ட  பணம் வாங்கிக்கச்  சொன்னேன்.அப்புறமா என் வேலையை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். சாயந்திரமா மறுபடி போன் போட்டு விசாரிச்சேன்.ஆத்தா காரியம் எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு சொன்னாங்க.அப்புறமாத்தான் மனசுல லேசா உறுத்த ஆரம்பிச்சிச்சு...

' ஆத்தாவைத் தூக்கிப் போடப் போயிருக்கணுமோ....'

ஊட்டி வளர்த்த ஆத்தா.சொந்த ஆத்தாகூட அப்படி வளர்த்திருக்குமான்னு சொல்ல முடியாது. ஆமா..மீனாம்பாள் ஆத்தா எங்களோட சொந்த ஆத்தா இல்ல.எங்க தாத்தா சேத்து வச்சிக்கிட்டது. பதினெட்டு வயசில ரெட்டைச் சடையோட செக்கச்செவேல்னு சுறு சுறுன்னு திரிஞ்சுக்கிட்டிருந்த பொண்ணை  தாத்தா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டாராம்.தாத்தாவ எதுத்துக் கேக்க ஆளில்லை.அப்ப தாத்தாவுக்கு கல்யாணம் ஆகி பத்து வயசுல எங்க மாமாவும் ஏழு வயசுல எங்க அம்மாவும்  இருந்திருக்காங்க .எங்க உண்மையான ஆத்தா அத்தோட அப்படியே பண்ணை வீட்டுக்குள்ளயே முடங்கிட்டாங்களாம்.

தாலி கூடக் கட்டிக்காம கடைசி வரையில தன கூட  வாழ்ந்த மீனாம்பாள் ஆத்தாவுக்கு தாத்தா ஒரு புள்ளையைக் கூடக் கொடுக்கலை. தாத்தா செத்ததுக்கப்புறம் மீனாம்பாள் ஆத்தாவோட அக்கா மகன் திருப்பதி ஆத்தாவைக் கூட்டிக்கிட்டுப் போயி தன வீட்டுல வச்சுக்கிட்டாரு .இப்ப வரைக்கும் அவருதான் ஆத்தாவைப் பாத்துக்கிட்டாரு.திருப்பதியோட மகன்தான் போன்ல எனக்கு ஆத்தா செத்துப்போன தகவல் சொன்ன முகேஷு.

ஆனா எங்க அம்மாவும் நானும் என்னோட தம்பி தங்கச்சிகளும் ஆத்தா எங்க மேல அள்ளிக்கொட்டுன  பாசத்தை மறக்கலை.எந்த விஷேசமானாலும் எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து வச்சித்தான் அனுப்புவோம்.அப்பப்ப போயி பார்த்துக் கிட்டுருந்தோம்.செலவுக்கு எதோ கொஞ்சம் பணம் கொடுத்துக் கிட்டிருந்தோம்.

அந்த ஆத்தாதான் இப்ப செத்துப்போச்சசு. நான் போகலை. ஒருவேளை செத்துப்போனது சொந்த ஆத்தாவா இருந்திருந்தா  போயிருப்பேனோ... உண்மை மனசுக்குள் நெருப்பாய்ச் சுட்டது.


திங்கள், 3 டிசம்பர், 2012

இயற்கையோடு இணைந்த இந்திய வாழ்க்கை முறை




                                                                           ]

மனித இனம் இயற்கை அன்னையின் மடியிலேயே தோன்றியது. அதைப் புரிந்துகொண்டதால்தான் இந்திய சாஸ்திரங்கள் அனைத்தும் இயற்கையைப் போற்றுகின்றன.ஆறுகள் , மலைகள் , ஏரிகள் , பசுங்காடுகள் , நட்சத்திரங்கள் , கிரகங்கள் , விலங்குகள் என்று அனைத்திலும் அவை தெய்வாம்சத்தை உணர்த்தின. உலகில் உள்ள அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது என்று சொல்லி எல்லா உயிர்களுக்கும் சரிநிகர் சமானமான நிலையை அளிக்கின்றன.


இயற்கையின் மீது மனிதனுக்கு அவை எந்த ஒரு விஷேசமான ஆளுமையையும் அளிக்கவில்லை.மாறாக இயற்கையைப் போற்றவும் அதனோடு இயைந்து வாழவும் போதிக்கின்றன.
இறைவன் எங்கும் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான். அதேபோல எல்லாமும் இறைவனுக்குள் நிறைந்திருக்கிறது என்பது இந்தியக் கலாசாரத்தின் அடிப்படைக் கோட்பாடு.

ஐந்து பெரும் இயற்கைச் சக்திகளான நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகியவை பஞ்ச பூதங்களாக உருவகப் படுத்தப்பட்டு ஆராதிக்கப்பட்டு வருகின்றன.

அதர்வ வேதத்தின் ஒரு சுலோகம் "மாதா பூமி புத்ரோகம் ப்ரித்விய்ய " என்று சொல்கிறது.'இந்த பூமி எனது தாய்,நான் அவளின் மகன் 'என்பது அதன் பொருள்.

யானை விநாயகரின் அம்சமாகவும் மயில் முருகக் கடவுளின் வாகனமாகவும் வணங்கப்படுகிறது.கொடிய சிங்கம் கூட காளிதேவியின் வாகனமாகவும் சின்னஞ்சிறு சுண்டெலி கூட விநாயகரின் வாகனமாகவும்  அமைக்கப்பட்டது.

அனுமன் என்ற வானரம் ராமபிரானின் அடியவனாகத் திகழ்ந்து அநேக மக்களின் இஷ்ட தெய்வமாக இருக்கிறது.ஜடாயு என்ற பறவையும் ஜாம்பவான் என்ற கரடியும் கூட ராமருக்கு உற்ற துணையாக இருந்திருக்கின்றன.


தூய்மையின் சின்னமான மானசரோவர் ஏரியைப் புனிதக் கடலாக வணங்குகிறோம்.ஆழ்ந்த அமைதி குடிகொண்டுள்ள கைலாஷ் மலையை ஆண்டவனின் இருப்பிடமாகத் துதிக்கிறோம்.





மலைகளை எலும்புகளாகவும் பூமியை உடலாகவும் கடலை ரத்தமாகவும் ஆகாயத்தை வயிறாகவும் காற்றை சுவாச மாகவும் நெருப்பை சக்தியாகவும் கொண்டு விளங்குகிறான் இந்த அண்டத்தைக் காக்கும் பரம்பொருளான இறைவன் என்று மகாபாரதம் உரைக்கின்றது.


இயற்கையான ஆகர்ஷனத் தன்மை கொண்ட மலையை சிவனின் உடலாகக் கருதி திரு அண்ணாமலை என்று அழைத்து அதிர்வலைகள் அதிக அளவில் வெளிப்படுகின்ற பவுர்ணமி காலங்களில் அதை வலம் வந்து உடல்நலம் பெறுவது ஒரு மிகச் சிறந்த இயற்கை வழிபாடு. 


நமது மூதாதையர்கள் இயற்கையை இறைவனின் இன்னொரு அம்சமாகவே கருதியிருக்கின்றனர் .அன்னை பூமி என்று பூமியைத் தம் தாயாகவே ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கண்ணோட்டம் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.தங்களின் வாழ்க்கைக்கு எல்லா வகையிலும் ஆதாரமாக இருக்கின்ற இயற்கைக்கு அவர்கள் தெரிவிக்கும் நன்றிதான் அது.



சம்ஸ்கிருத மொழியில் ஆயுர்வேதா என்று சொல்லப்படுகின்ற உயிர் அறிவியலானது முழுவதுமாக இயற்கை சார்ந்த ஒரு ஆரோக்கிய மருத்துவ முறைதான்.தற்போது உலகம் முழுவதும் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற யோகா இந்தியாவின் ஒரு இணையற்ற இயற்கை சார்ந்த உடற்பயிற்சி முறையாகும். நமது உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் இருத்தி அதன் மூலமாக மூளையையும் நரம்புகளையும் தூண்டிவிட்டு உடலின் இயக்கத்தையும் சிந்தனையையும் செம்மைப்படுத்துவதே யோகப்பயிற்சியின் அடிப்படை..


வேத காலத்தில் மரங்களும் செடிகளும் அவைகளின் தன்மை களுக்கேற்ப பல தெய்வங்களின் அம்சமாக வகைப்படுத்தப் பட்டன.இந்த நடைமுறை இன்று வரையிலும் இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


மரங்கள் மற்றும் செடிகளுக்கிருக்கும் விஷேச மருத்துவ குணங்களைக் கண்டு கொண்ட மனிதன் அதைப் புனிதப் படைப்பாகப் போற்றி தனது வழிபாட்டு முறைகளோடு இணைத்துக் கொண்டான்.மரங்களைத் தெய்வமாகப் போற்றி வணங்கும் வழக்கம் சிந்துவெளி நாகரிக காலத்திலிருந்து துவங்கியதாகத் தெரிகிறது..


குறிப்பிட்ட சில வகையான மரங்கள் அதிகம் இருந்த இடத்தில் கோவில்கள் கட்டப்பட்டதால் அந்த மரங்கள் குறிப்பிட்ட தெய்வங்களுடன் தொடர்பு படுத்தப்பட்டன. நாளடைவில் அந்த மரங்கள் அந்தந்த கோவில்களின் ஸ்தல விருட்ஷமாக்கப்பட்டன.


இந்தியக் கிராமங்களில் கால்நடைகள் கன்று ஈன்றதும் தொப்புள் கொடியை வெட்டி எடுத்துச் சென்று ஆலமரக் கிளைகளில் கட்டித் தொங்கவிடுவது ஒரு தொன்றுதொட்ட பழக்கம்.


ஆலமரம் செழிப்பு மற்றும் வளத்தின் அடையாளமாகக் காணப்படுகிறது.ஆலமரம் ஒரு பால்மரம்.தனக்குள் பால் நிறைந்திருப்பது போல கன்று ஈன்ற தங்களின் கால்நடையின் மடியிலும் பாலை நிறையச் செய்ய வேண்டும் என்று மக்கள் ஆலமரத்திடம் வைக்கும் விண்ணப்பம் அது. ஒரு மரத்தின்  மீது மக்கள் வைக்கும் நம்பிக்கைதான் அது.


இதுபோல இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் இன்னொரு மரத்துக்கும் ஒரு புனிதமான இடத்தைக் கொடுத்துள்ளார்கள். அது அரசமரம்.குழந்தைப் பாக்கியம் வேண்டி அரச மரத்தைச் சுற்றிவருவது இந்தியப் பெண்களின் ஒருவிதமான வழிபாடு. இயற்கை வழிபாடு.


முற்காலத்தில் முனிவர்களும் துறவிகளும் அரசமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்திருக்கிறார்கள்.அதன் பலனாக ஞானம் பெற்றிருக்கிறார்கள் .மகாபுத்தர் போதி என்ற அரச மரத்தின் கீழேதான் முக்தி பெற்றார். விரிந்து படர்ந்த  அரசமரம் தனது பகுதிக்குள் செலுத்துகின்ற ஒருவகையானஆளுமைதான் இந்த விளைவுகளுக்கெல்லாம்  காரணமாக இருக்கிறது.


வேப்ப மரத்தின் மருத்துவ குணத்திற்காக கிராமங்களில் மட்டுமல்லாமல் நகரங்களில் கூட வீடுகளின் முன்புறத்தில் அவை வளர்க்கப்படுகின்றன. கிராம வைத்தியர்கள் வேப்ப இலைகளை தேள் கடிக்கும் வண்டுக்கடிக்கும் விஷம் இறக்கியாகப் பயன்படுத்துகின்றார்கள்.அம்மை நோய் பாதித்த வீடுகளில் அவை கிருமி நாசினியாக வீடுகளின் வாசல்களில் கட்டிவைக்கப் படுகின்றன.


அருகருகே வளர்ந்த வேப்பமரத்தையும் அரச மரத்தையும் காதலர்கலாகக் கருதி அவற்றுக்கு கோலாகலமாகத் திருமணம் செய்து வைத்துப் பாதுகாக்கும் வினோத நிகழ்ச்சிகள்  இன்றும் தென்னிந்தியக் கிராமங்களில் நடந்து வருகின்றன.இவையெல்லாம் மூடப் பழக்கங்கள் இல்லை. எல்லாச் செயலுக்கும் அர்த்தம் இருக்கிறது.அது அறிவியல் சார்ந்ததாக இருக்கும் அல்லது வாழ்வியல் சார்ந்ததாக இருக்கும்.


துளசிச் செடி இந்தியக் கலாசாரத்தில் ஒரு புனிதப் பொருளாகக்  கருதப்படுகிறது.வீடுகளின் முற்றத்தில் அழகான மாடம் அமைக்கப்பட்டு அதில் துளசிச் செடி வளர்க்கப் படுகிறது.ஒவ்வொரு நாளும் குடும்பத்தலைவி குளித்து தூய ஆடை உடுத்தி துளசி மாடத்தை வலம் வந்து துளசிச் செடியை வணங்குகிறாள்.


விஷேச காலங்களில் துளசி மாடத்தின் முன்னால் கோலம் வரையப்படுகிறது.அகல் விளக்கு ஏற்றப்படுகிறது வாழ் விடத்தில் துளசிக்குக் கொடுக்கப்படும் இந்த முக்கியத் துவத்துக்குக் காரணம் என்ன ?


துளசி காற்றைத் தூய்மைப்படுத்தும் குணம் கொண்டது. பூச்சிகளைத் தூர ஓட்டும் தன்மை கொண்டது.அது ஒரு கிருமி நாசினி.துளசிச் சாறு உடலுக்கு சக்தி கொடுக்கும்.இதயத்துக்கு பலம் வழங்கும்.ரத்தத்தைச் சுத்தமாக்கும்.தலைவலி, ஜலதோஷம், காய்ச்சல். வயிற்று உபாதை ஆகிய பிரச்னை களுக்கு துளசி ஒரு அருமருந்து.அது அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. 

இந்த அதிநவீன நாகரிக உலகில் எல்லோராலும் கடைப் பிடிக்கப் படுகின்ற வாஸ்து சாஸ்திரம் கூட இயற்கை சார்ந்த ஒரு அறிவியல் நடைமுறைதான்.பூமியில்இயற்கையிலேயே   அமைந்துள்ள புவி ஈர்ப்பு மையம் , காந்தப் புலம் , காற்றுத் திசை,  கதிர் வீச்சு மையம் ஆகியவற்றால் ஏற்படுகின்ற சாதக பாதகங்களுக்கு ஏற்ப நம் இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதுதான் வாஸ்து சாஸ்திரம்.


இந்தியக் கிராமங்களில் வடக்குத்திசையில் தலை வைத்துப் படுப்பதைத் தவிர்ப்பது இன்றும் கூட நடைமுறையில் இருந்து வருகிறது.வடக்குத் திசையில் இருக்கின்ற காந்தப்புலம் மூளையைப் பாதிப்பதைத் தவிர்ப்பதே இந்தச் செயலின் நோக்கம்.


பிரபஞ்சத்தில் ஒரு சிறு புள்ளியாக இருக்கின்ற இந்த பூமிக்கும் விண்ணில் உலா வருகின்ற மற்ற கிரகங்களுக்கும் இருக்கின்ற தொடர்பைக்கூட துல்லியமாக உணர்ந்து அதன் அடிப்படையில் ஜோதிடக் கலையையும் வான  சாஸ்திரத்தையும் உருவாக்கி மனித இனத்தின் அன்றாட வாழ்க்கையில் இடம் பெறச் செய்து இயற்கையோடு இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்திய மக்கள்.


அமாவாசையின் போது பூமியின் மீது நிலவின் ஆகர்ஷன சக்தி அதிகமாகிறது என்பதால் அந்த நேரத்தில் மனித உடலின் செரிமானச் செயல்பாடு தடைபடுகிறது என்பதை உணர்ந்து கொண்ட மனிதன் இயற்கையோடு இயைந்துகொண்டு அமாவாசை தினத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ள ஆரம்பித்தான்.

இந்தியக் கலாசாரத்தின் இயற்கை சார்ந்த இன்னொரு சிறப்பான பரிமாணம் காய்கறி உணவுமுறை.உலகின் வேறு எந்த மனித நாகரிகத்திலும் தோன்றாத இந்த நடைமுறை இந்தியக் கலாசாரத்தின் சிறப்பான இயற்கை சார்ந்த கண்ணோட்டத்தையே விளக்குகிறது.


" இயற்கையை மாற்ற முயலாதே, இயற்கையை சீரமைக்க முயலாதே, இயற்கையோடு போராட முயலாதே "என்று பகவத் கீதை மனிதனுக்கு அறிவுறுத்துகிறது.


அஹிம்சைக் கோட்பாடு இந்தியாவில்தான் தோன்றியது.இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மனிதனுக்காக மட்டும் படைக்கப்பட்டது அல்ல.உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் இந்த உலகம் உரித்தானது என்ற உண்மையை அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் தங்களின் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டிருக் கிறார்கள் இந்திய மக்கள்.


தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் மாரியம்மன் என்ற ஒரு கிராம தேவதைக் கோவில் அவசியம் இருக்கும். 


ஒவ்வொரு ஆண்டும் ஆனி எனும் தமிழ் மாதத்தில் அந்தக் கோவிலில் முளைப்பாரி திருவிழாவும் நடக்கும்.மாரி  என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மழை என்பது பொருள்.தங்களை வாழவைக்கும் மழைக்குக் கோவில் கட்டி அதை அம்மனாக வழிபடுகின்றனர் இந்த மக்கள்.


தென்னிந்திய வீடுகளின் வாசலில் தினமும் அதிகாலையில் மாட்டுச் சாணம் தெளித்து அழகழகான கோலங்கள் போடப்படுகின்றன.இதுவும் ஒரு மிகுந்த வியப்புக்குரிய இயற்கை சார்ந்த வாழ்க்கை முறைதான்.மாட்டுச் சாணம் ஒரு இயற்கையான கிருமி நாசினி.வீட்டு வாசலில் அதைத் தெளிப்பதால் கிருமிகள் வீட்டுக்குள் புகுவது தடுக்கப்படுகிறது.


அந்தக் கோலங்கள் சுத்தமான அரிசி மாவினால் போடப்படுகின்றன.அரிசி மாவு ஏறும்புகளுக்குப் பிடித்தமான உணவு.எறும்புகள் கோலங்களைத் தேடிவந்து சாப்பிட்டுப் போகின்றன.மழைக்காலச் சேமிப்புக்காக புற்றுகளுக்கு எடுத்தும் செல்கின்றன.


காக்கையை இறந்துபோன தங்களின் முன்னோராகவே உருவகப்படுத்தி விஷேச நாட்களில் அதற்கு உணவு படைத்து அது உண்ட பிறகே தாங்கள் உண்பது....கோவில் 
கும்பாபிஷேகங்களின்போது மேலே வானத்தில் கருடன் பறப்பதை நல்ல சகுனமாக ஏற்று கும்பத்திற்கு அபிஷேகம் செய்வது ..இது எல்லாம் கூட இயற்கை ஆராதனைதான்.



 சுபகாரியங்களை தேங்காய் உடைத்துத் துவக்கி வைப்பதும் வாசலில் வாழைமரம் கட்டுவதும் மாவிலைத் தோரண அலங்காரம் செய்வதும் இலைபோட்டு விருந்துண்ணுவதும் இயற்கைக்கு இம்மக்கள் அளிக்கும் மனமார்ந்த அங்கீகாரம்தான்.


.பசுவையும் பாம்பையும் கருடனையும் போற்றி வணங்கும் இந்த மக்கள் பள்ளியின் குரலுக்குக் கூட சகுனம் என்ற அங்கீகாரம் அளித்து மரியாதை தருகிறார்கள்.பலிகடாவிடம் கடைசி நிமிடத்தில் தலையில் நீரை ஊற்றி சம்மதம் வாங்கிக் கொண்டு தலையை வெட்டுகின்ற அளவுக்கு விலங்குகளின் மீது அபிமானம் கொண்டிருக்கிறது இந்தக் கலாசாரம்.


அறுவடை முடிந்ததும் தைத் திங்களின் முதல் நாளில் கால்நடைகளைக் குளிப்பாட்டி அலங்கரித்து தாங்களும் குளித்து புத்தாடை அணிந்து அதிகாலை சூரிய உதய நேரத்தில் புத்தரிசியில் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைத்து காளைகளுக்கும் கொடுத்து தாங்களும் உண்டுமகிழும் பொங்கல் திருநாள் ஒரு முழுமையான இயற்கை வழிபாடன்றி வேறென்ன..?



கூந்தன்குளம் .தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர்.நாடே பட்டாசு வெடித்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடும்போது இந்த ஊர்மக்கள் மட்டும் தீபாவளியைக் கொண்டாடுவதில்லை.காரணம் பறவைகள். உலகின் பல பகுதிகளிலிருந்து இனப்பெருக்கத்திற்காக இங்கு வரும் பறவைகளைப் பயப்படுத்தவேண்டாம் என்று பறவை களின் மேல் பாசம் கொண்ட இந்தக் கிராமத்து மக்கள் முடிவு செய்து நெடுங்காலமாக அதைக் கடைப்பிடித்தும் வருகிறார்கள். இதைப்போல தமிழ்நாட்டில் பல கிராமங்கள் இருக்கின்றன.இதை விடவும் ஒரு இயற்கை வழிபாடு வேறென்னவாக இருக்க முடியும்..?


 இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வறண்டு கிடக்கின்ற கொடுமையான தார் பாலைவனத்துக்கிடையே வாழ்கின்ற பிஷ்னோய் இன மக்கள் மரங்கள் வாழ்வதற்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்கிறார்கள்.தாங்கள் பட்டினி கிடந்து கால்நடைகளுக்கு உணவு அளிக்கிறார்கள்.தாயை இழந்த மான் குட்டிகளுக்கு பிஷ்னோய் தாய்மார்கள் தங்களின் மார்பகங்களில் பாலூட்டுகிறார்கள்.




தண்ணீர் இல்லாத அந்தப் பாலைவனத்தில் இவர்கள் தங்களின் வயல்களில் குளங்கள் வெட்டி இந்த விலங்குகளுக்காக அதில் நீர் 
சேமித்து வைக்கிறார்கள்.

அவர்களைப் பொருத்தவரையில் விலங்குகள்  தெய்வாம்சம் கொண்டவை.


பெரும்பாலான பிஷ்னோய் மக்கள் தச்சர்கள்.ஆனால் அவர்கள் மரத்தை வெட்டுவதில்லை.மாறாக மரங்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்து அவைகள் தானாக இறக்கும் வரை அவர்கள் காத்திருக்கிறார்கள்.மரங்களின் தேவையைக் குறைப்பதற்காக அவர்கள் இறந்தவர்களை எரிப்பதைத் தவிர்த்து புதைக்கிறார்கள்.




200 ஆண்டுகளுக்கு முன்னால் மரங்களை வெட்ட வந்த மன்னரின் படையை எதிர்த்த அமிர்தா தேவியும் இன்னும் 366 பிஷ்னோய் பெண்களும் மரங்களோடு சேர்த்து வெட்டப்பட்டு உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.கேஜார்லி தியாகம் என்று அது இன்றும் பிஷ்னோய் மக்களால் நினைவு கூறப்படுகிறது.


இந்தியர்கள் மறுபிறவி நம்பிக்கை உள்ளவர்கள்.இறப்புக்குப் பின்னும் தாங்கள் மறுபடியும் பிறப்பதாக உறுதியாக நம்புகிறார் கள். அப்படிப் பிறக்கும்போது மனிதனாக மட்டுமல்ல, விலங்காகவோ ..பறவையாகவோ ..அல்லது எந்த ஒரு உயிராகவோ தாங்கள் பிறக்கலாம் என்றதான் அவர்கள் நம்புகிறார்கள்.


படைக்கப்பட்டவை அனைத்தும் சமம் என்பது அவர்களின் கொள்கை.


தங்களை எப்போதும் அவர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்ததாக எண்ணிக்கொள்ளவில்லை.எந்த நிலையிலும் அவர்கள் இயற்கையை விட்டு விலகிப் போகவும் தயாராயில்லை.








' சென்னை அரசு அருங்காட்சியகம் ' படிக்க இங்கே சொடுக்கவும்