இரண்டாம் உலகப்போரில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படை யிலான படம் இது. கதை முழுவதும் துடிப்பான இளம் போர்வீரனான கேப்டன் எர்னஸ்ட் கார்டனின் பார்வையில் சொல்லப் படுகிறது.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் கை ஓங்கியிருந்த நேரம். சிங்கப்பூரில் சிறைப்பிடிக்கப் பட்ட இங்கிலாந்து வீரர்கள் தாய்லாந்து கொண்டு செல்லப்பட்டு காஞ்சனபுரி கேம்ப்பில் அடைக்கப்படுகிறார்கள். அங்கே இரண்டாம் நிலைப் பொறுப்பில் இருக்கின்ற மேஜர் ஹிடோ அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்கிறான்.இங்கிலாந்து வீரர்கள் தப்பிச்செல்ல மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்து அவர்களை மேலும் கடும் தண்டனைக்குள்ளாக்குகின்றன.அங்கே மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகின்ற டகாஷி என்ற இளைஞன் அவர்களிடம் காட்டுகின்ற அன்பு மட்டுமே அவர்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கிறது.வெற்றி மமதையில் தங்களின் பலத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுவிட்ட ஜப்பானியர்கள் மிகக் கடினமான ஒரு ரயில் பாதையை ஆங்கிலப் போர்க்கைதிகளைக் கொண்டே நிர்மாணித்துவிடத் திட்டமிடுகிறார்கள்.பட்டினியையும் நோயையும் மரணத்தையும் எதிர்கொண்டு ஆங்கில வீரர்கள் அதையும் செய்து முடிக்கிறார்கள்.
கொடூரமான மரணங்களைப் பார்த்து மனம் கொந்தளித்துப் போன ஆங்கிலப் படைகளின் கமாண்டர் தங்களைச் சித்திரவதை செய்த ஹிடோவைப் பிடித்து அவனுடைய தலையைக் கொய்ய முயல கேப்டன் எர்னஸ்ட் அதைத் தடுத்து மனிதாபிமானத்தின் மகத்துவத்தை கமாண்டருக்கு எடுத்துரைக் கிறான்.தன தவறை உணர்ந்து கமாண்டர் ஹிடோவை ஒரு போர்வீரனுக்கு உரிய கவுரவத்துடன் நடத்த முடிவு எடுப்பதற்குள் ஹிடோ உடைவாளால் தன்னைத் தானே குத்திக்கொண்டு இறந்து போகிறான். மனித நேயத்தையே மறக்கச் செய்கின்ற போர்களின் கொடுமையை உணர்ந்து நிலை குலைந்து போன அந்த கமாண்டர் எதிரியான ஹிடோவைக் கட்டித்தழுவிக் கொண்டு கதறி அழுகின்றான் .
55 ஆண்டுகளுக்குப் பின்பு எர்னஸ்ட் கார்டனும் டகாஷியும் தாய்லாந்தின் மரண ரயில்பாதையின் கல்லறையில் நண்பர்களாகச் சந்திக்கிறார்கள். படத்தின் இறுதியில் காஞ்சனபுரி முகாமில் உயிர் பிழைத்து நாடு திரும்பிய அதே இங்கிலாந்து வீரர்கள் முதியவர்களாக அணிவகுத்து வருவது மனதை நெகிழச் செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக