புதன், 24 அக்டோபர், 2012

ரயிலில் ஒரு பாடம்







சென்ற வாரம் ரயிலில் ஊருக்குப் போனேன்.தட்கலில் பயணச்சீட்டு வாங்கியிருந்தேன்.எக்மோரிலிருந்து 9.40க்கு ரயில் புறப்பட்டபோதுதான் நான் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் ஏறினேன்.இரண்டாம் வகுப்பு படுக்கைதான்.அந்த அளவுக்குத்தான் நமக்கு வசதி.

என்னுடைய கீழ்ப் படுக்கையில் தோள் பையை வைத்துவிட்டு உட்கார்ந்ததுதான் தாமதம்.ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லிம் பெரியவர் ' தம்பி ' என்று அழைத்தார்.பக்கத்திலேயே அவரது மனைவியும் இருந்தார்.

' இந்த அம்மாவுக்கு நடுப்படுக்கை கெடைச்சிருக்கு.இவுங்களால ஏறி இறங்க முடியாது.நீங்க அங்க படுத்துக்கிறீங்களா ..? ' என்றார்.நான் உடனேயே எழுந்து தோள்பையை எடுத்து நடுப்படுக்கையில் வைத்துவிட்டு அந்த அம்மாவைப் பார்த்து ' படுத்துக்குங்க ' என்றேன்.

அந்த அம்மா கீழ்ப்படுக்கையில் உட்கார்ந்ததும் கேட்டார்..' தம்பி..அவருக்கு அந்த மேல்படுக்கை .அவருக்கு முடியலை.நீங்க அதுல படுத்துக்கிறீங்களா..? '
அடுத்து பெரியவர் சொன்னார். ' வயசை விபரமா எழுதிக்கொடுத்தும் மேல்படுக்கை கொடுக்கிறாங்களே.என்ன அநியாயம் இது..? '

 நான் பையை எடுத்து எதிரே இருந்த மேல்படுக்கையில் வைத்துவிட்டு ஏற முயன்றபோது பெரியவர் கேட்டார். ' தம்பி, உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லையே..? '

இப்படி அவர் கேட்டபோது உண்மையாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் அவர் இப்படிக்கேட்டதுதான் வருத்தமாக இருந்தது. என்னுடைய கணினியில் இருந்து IRCTC க்கு ஆன்லைன் தொடர்பு வைத்திருப்பதால் வீட்டிலிருந்தபடியே பயணச்சீட்டு பதிவு செய்துகொள்வது எனது வழக்கம்.அதன்படி முந்தைய நாள் 10 மணிக்கே முதல் ஆளாக ஆன்லைனில் நுழைந்து கீழ்ப்படுக்கை வாங்கிவிட்டேன்.

.பாவம் பெரியவரின் மகனோ மருமகனோ கவுண்டரில் வரிசையில் நின்று சீட்டு வாங்கி யிருப்பார்களோ என்னவோ தெரியவில்லை.அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிய படுக்கை கிடைக்காமல் பறித்துக்கொண்டது நான்தானே.உரியவர்களுக்கு உரிய இடம் கிடைக்கவேண்டும் அல்லவா.? அந்தப் பெரியவர் கேட்டதுபோல இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது..?சரிதானே..?




' நல்லா கேட்டாருயா கேள்வி..' படிக்க சொடுக்கவும்
http://thenpothikai.blogspot.in/2012_08_01_archive.html


' கே.பி சுந்தராம்பாளின் அபூர்வ புகைப்படங்கள் ' பார்க்க சொடுக்கவும் 
http://thenpothikai.blogspot.in/2012/08/blog-post_6744.html


சனி, 6 அக்டோபர், 2012

' மீனவர் பிரச்னை-ஒரு கசப்பான உண்மை '




' தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு '

' தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் '

இவைகள் அனேகமாக நாம் தினமும் படிக்கின்ற செய்திகளாக ஆகிவிட்டன. செய்திகளைப் படித்தும் பார்த்தும் விட்டு நம் மக்கள் உணர்ச்சிவசப் படுகிறார்கள். டாஸ்மாக் மேஜை முதல் பேஸ்புக் வரை இந்த விஷயங்கள் அலசப்படுகின்றன. .

இந்த அநியாயங்களைத் தடுத்து நிறுத்தும்படி மீனவ  மக்கள் தினமும் கூக்குரலிடுகிறார்கள் அரசியல்வாதிகளும் ஆனமட்டும் முழங்கிப் பார்த்து விட்டார்கள்.ஆட்சியாளர்களோ ஆக்க பூர்வமாக எதையும் செய்வதாக இல்லை.மாநில அரசிடமிருந்து மத்திய அரசுக்குக் கடிதம் போகிறது.மத்திய அரசிடமிருந்து இலங்கை அரசுக்குக் கடிதம் போகிறது.உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

சொன்ன மறுநாளே இலங்கை மீனவர்கள் இந்திய மீனவர்கள் மீது ........இல்லை,..இங்கே கொஞ்சம் யோசித்துதான் எழுத வேண்டும்...தமிழ் மீனவர்கள் என்றுதான் சொல்லவேண்டும் என்ற பெரும்பான்மைக் கருத்து ஒன்று இங்கே உள்ளது.அதனால் அப்படியே சொல்லிவிடுவோம்.ஆனால் இலங்கைத் தமிழ் மீனவர்கள் கூட இந்திய மீனவர்கள் என்றுதான் சொல்கிறார்கள்.


சரி..விஷயத்துக்கு வருவோம். ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பதாகச் சொன்ன மறுநாளே தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் தாக்கப் படுகிறார்கள்.இலங்கை மீனவர்கள் என்று இங்கே நாம் சொல்வது சிங்களவர் களையல்ல. தமிழர்களை .

இப்போது அடுக்கடுக்காக பல கேள்விகள் நம் முன்னே எழுந்து நிற்கின்றன.

இலங்கை கடற்படையினர் எதற்காக தமிழக மீனவர்களைத் தாக்குகின்றார்கள்...?

இலங்கை மீனவர்கள் அதாவது தமிழ் மீனவர்களும் எதற்காக தமிழக மீனவர்களைத் தாக்குகின்றார்கள்..?

தமிழ் நாடு அரசு ஏன் கண்டனம் தெரிவிப்பதோடும் கடிதம் எழுதுவதோடும் தனது செயல்பாட்டினை நிறுத்திக் கொள்கிறது..?

ஊரே கூக்குரலிட்டும் இந்திய ஆட்சியாளர்கள் ஏன் இந்த உணர்வுபூர்வமான விஷயத்தில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள்...?

இலங்கையில் ஆட்சியிலும் அதிகாரத்திலும்  இருப்பவர்கள் இந்த விஷயத்தில்  தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை சர்வ அலட்சியம் செய்வது எதனால்...?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தால் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு முடிவு கண்டுவிடலாம்.ஆனால் இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்கே இருக்கின்றன..? குறிப்பாக யாரிடம் இருக்கின்றன..?

அதுதான் பெரிய மர்மமாக இருக்கிறது..

உண்மையில் இந்தப் பிரச்னையில் சம்பநதப்பட்ட அனைவரிடமுமே இந்த விடைகள் இருக்கின்றன .ஆனால் அவர்கள் யாரும் அவைகளை யாரிடமும் சொல்வதில்லை . ஏன் ..? இந்த மர்ம முடிச்சைப் பற்றித்தான் இங்கே நாம் பேச  வருகிறோம்.

மீன் பிடிப் படகுகளில் Trawler boats என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற இழுவைப் படகுகள் என்று ஒரு வகை உள்ளது.அதே போல மீன்பிடிக்கப் பயன்படுத்துகின்ற வலைகளில் மடிவலை என்று ஒரு வகை உள்ளது.இந்த இழுவைப் படகுகளிலிருந்து மடிவலையை வீசி இழுக்கும்போது அந்த வலை கடலின் தரைப் பகுதி வரையில் சென்று படிந்து இறால் போன்ற ஆழத்தில் வாழ்கின்ற மீன் வகைகளை இழுத்துக் கொண்டுவருகிறது.

இதில் இருக்கின்ற எதிர் மறை அம்சம் என்னவென்றால் மடிவலை வளர்ந்த மீன்களை மட்டும் இழுத்து வருவதில்லை.குஞ்சுகளையும் குளுவான் களையும் ஏன் முட்டைகளையும் கூட இழுத்துக்கொண்டு வருகின்றது. வலையில் சிக்கியிருக்கின்ற இறால்கள் நல்ல விலையைப் பெற்றுத் தருகின்றன.மற்றவை எல்லாம் கழிவுகளாகிப் போகின்றன.குஞ்சுகளும் முட்டைகளும் கழிவுகளாகிப் போனால் அடுத்த மீன்வளம் எங்கிருந்து வரும்..?


இப்படி இந்த மடிவலைகள் கடல் வளத்தை அழித்துப் பாழாக்குவதால் உலகம் முழுவதும் எதிர்கால நலன் கருதி மீனவர்கள் அவைகளைப் பயன் படுத்துவதைத் தடை செய்வது அவசியமாகிறது.இந்தத் தடை இலங்கையில் அமல்படுத்தப் பட்டிருக்கிறது.இலங்கை மீனவர்கள் இழுவைப் படகுகளையும் மடிவலை களையும் பயன்படுத்துவதில்லை.

இந்தியாவில் ..?

எந்தத் தடையும் இல்லை.இழுவைப் படகுகளும் மடிவலைகளும் தாராளமாகப் பயன்படுத்தப் படுகின்றன.மன்னார் வளைகுடாவின் கடல் வளத்தினை இவை நாள்தோறும் பெரிய அளவில் அழித்து வருகின்றன.பெருமளவு மீன்வளம் ஏற்கனவே அழிந்து விட்டது.எஞ்சியிருப்பதும் வெகுவேகமாக அழிந்து வருகிறது.ஆனால் இந்த அழிவைத் தடுக்க ஆண்டுக்கு ஒரு முறை 45 நாட்கள் மீன் பிடிக்கத் தடை விதிப்பதைத் தவிர இந்தியா வேறு எதுவும் செய்ய வில்லை.

இந்த நிலையில் தங்கள் பகுதியில் அதிக வருமானம் தருகின்ற இறால்மீன் வளம் குறைந்து விட்டதால் வேறு வழியின்றி அவை அதிகமாக உள்ள இலங்கையின் கடல் பகுதி வரை சென்று தமிழக மீனவர்கள் மடிவலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதுகின்ற இலங்கை மீனவர்கள் அங்கே வந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

இந்திய அரசு இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மீண்டும் மீண்டும் எச்சரித்தும் இந்திய மீனவர்கள் பொருட்படுத்தாததால் எரிச்சலடையும் இலங்கை கடற்படையினர் ஆத்திரத்தில் ஆயுத பலத்தைப் பிரயோகிக்கின்றனர்.

இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே கூட  இந்த விஷயத்தில் இந்திய அரசின் அலட்சியம் குறித்து ஐ .நா சபையில் முறையிடப் போவதாக எச்சரிக்கிறார்.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படுகின்ற இந்தத் தாக்குதலைக் கண்டிக்கின்ற அரசியல்வாதிகளும் செய்தி வெளியிடுகின்ற ஊடகங்களும் இந்த மடிவலை இழுவைப் படகுகள் பற்றி எதுவுமே சொல்வதில்லை...ஏன்..?

இழுவைப் படகுளாலும் மடிவலைகளாலும் வளம் பெறுவது ஏழை மீனவர்கள் அல்ல.அவைகளின் உரிமையாளர்களாக இருக்கின்ற பெருமுதலைகள்தான் அதன் பயனாளிகள். மீனவர்கள் அந்தப் படகுகளில் கூலிக்குத்தான் வேலை செய்கிறார்கள்.கூலிக்கு வேலை செய்யப்போயத்தான் குண்டடிபட்டுச் சாகிறார்கள்.

அந்நியச் செலாவணிக்காக இந்தியாவின் உள்நாட்டு இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைப் பற்றிக் கவலைப்படுகின்ற நாம் உலகத்தின் மிகச் சிறந்த உயிர்க் கோளப்பகுதியான மன்னார் வளைகுடாவின் கடல் வளம் சுரண்டப் படுவதைப் பற்றியும் கவலைப்படவேண்டும்.

இந்திய அரசு மடிவலையையும் இழுவைப் படகுகளையும் தடை செய்து அதன் மூலமாகப் பெரு முதலைகளின் சுரண்டலைத் தடுத்து  மீனவர்கள் தங்களிடையே ஏற்றத் தாழ்வின்றி தங்களின் பாரம்பரியமான முறையிலேயே மீன்பிடித் தொழில் செய்து தாங்களும் வளமாக வாழ்ந்து தங்களுடைய வருங்காலச் சந்ததிகளும் நலமாய் வாழ் வழி செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்களின் உயிருக்கு எமனாக இருக்கின்ற இந்தப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க வேண்டும்.












செவ்வாய், 2 அக்டோபர், 2012

' வேதம் புதிது ' -ஒரு நினைவு கூர்வு










சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் 'ஜெயா மூவீஸ் 'சேனலில் 'வேதம் புதிது' திரைப்படம் ஒளிபரப்பானது.இந்தப் படத்தின் மிக அழுத்தமான கதைக் கருவுக்காக படத்தைத் தொடர்ந்து பார்த்தேன்.தனது இனத்தாராலேயே கைவிடப்பட்ட ஒரு அந்தணச் சிறுவன் அருவாளே கைப்பொருளாகவும் ஆடு கோழிகளே சாப்பாடாகவும் கொண்டு வாழ்கின்ற ஒரு தேவர் ஜாதிக் குடும்பத்தில் வளர நேர்கின்ற கருத்தைக் கொண்டது இந்தப் படம்.

' வேதம் புதிது ' ஒரு கற்பனைக் கதை என்று என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் இது எங்கள் வீட்டிலேயே நடந்தது. படத்தைப் பார்த்தபோது எனது இளமைக் கால கிராமத்து நினைவுகள் நெஞ்சில் அலையடித்தன.

சமாளிக்க இயலாத வறுமைச் சூழலில் பிழைப்புக்காக ஊரைவிட்டுப் போக வேண்டிய நிலையில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தனது 14 வயது மகனைக் கூட்டிவந்து எங்கள் வீட்டில் விட்டு விட்டுப் போனார் ஒரு பிராமணப் பெரியவர்.அந்தப் பையன் சீனிவாச ராகவன் எங்களோடு விளையாடி எங்களோடு சாப்பிட்டு எங்களுடனேயே படித்து எங்களுடனேயே வளர்ந்தான்.

அவனுக்காக எங்கள் வீட்டில் தனிச் சமையல் செய்யப்பட்டது.ஆனாலும் ஒன்றாகவே உட்கார்ந்து சாப்பிடுவோம்.நாங்கள் நண்டும் மீனும் கோழியும் முழுங்கும் பொது சீனிவாசன் பக்கத்தில் அமர்ந்து இந்த வாசனையை யெல்லாம் சட்டை செய்யாமல் சாம்பாரும் ரசமும் அப்பளமும் பொரியலும் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.

பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும் யாரோ அவனுடைய உறவுக்காரர்கள் வந்து அவனைக் கூட்டிப் போனார்கள்.அது வரையிலும் அவன் எங்கள் வீட்டில் சுத்த பிராமணப் பையனாகவே வளர்க்கப்பட்டான்.

இது நடந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது.இப்போது சீனிவாச ராகவன் நன்றாகப் படித்து மறைமலை நகர்ப் பக்கத்தில் நல்ல வேளையில் இருக்கிறான். குடும்பமும் ஆகிவிட்டது.வெளியில் சாப்பிடச் சென்றால் இப்போதெல்லாம் சீனிவாசனுக்கு மிகவும் பிடித்தது சிக்கன்தானாம்.

எல்லாமே நாம் வைத்துக் கொள்வதுதானே...இல்லையா..?








'மண்பானைச் சமையல், மாவிலைத் தோரணம் 'படிக்க சொடுக்குக

http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_06.html#more








' பிளாஸ்டிக் உலகம் ' படிக்க சொடுக்குக
http://thenpothikai.blogspot.in/2012/05/blog-post_3568.html

















திங்கள், 1 அக்டோபர், 2012

கோட்டாவின் சேட்டைகள்





கோட்டா சீனிவாச ராவ் .

முகத்தின்  தசைகள் துடிக்க ஆக்ரோஷமாக வசனம் பேசி இவர் வில்லத்தனம் செய்வதைப் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆவேஷ  நடிப்புக்குப் பின்னால் ஒரு உண்மையான வில்லத்தனம் இருப்பது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சொல்கிறேன் கேளுங்கள்.

தெலுங்கு மொழிக்காரரான கோட்டாவுக்குத் தமிழ் தெரியாது.ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தாலும் தமிழைக் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள கொஞ்சமாவது முயற்சியும்  செய்ததில்லை.படப்பிடிப்பில் தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிக்கொண்டு அசிஸ்டென்ட் டைரக்டரிடம் வசனத்தின் அர்த்தத்தையும் உச்சரிப்பையும் காட்சியின் தன்மையையும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

அமைதியாக உட்கார்ந்து எழுதிக்கொண்ட வசனத்தை படித்துக் கொண்டிருப்பார். ' சரி,பிரச்னை இல்லை .டேக்குக்குப் போகலாம் ' என்று முடிவு செய்து  கடைசியாக ஒரு மானிட்டர் பார்ப்போம். மானிட்டரில் பொசிசனில் இருப்பாரே தவிர வசனம் எதையும் பேசமாட்டார்.' ஒ கே ..ஒ கே ..டேக் ,,டேக்' என்பார்.

கேமரா ஓட ஆரம்பித்ததும் அவர் பேசவேண்டிய நேரம் வரும்போது அவர் வாயிலிருந்து வசனங்கள் தெரித்து வந்து விழும்.ஆனால் வந்து விழுபவை தமிழ் வசனங்களாக இருக்காது.தெலுங்கு வசனங்களாகத்தான் இருக்கும். அசிஸ்டன்ட் டைரக்டரின் உழைப்புக்கும்  முயற்சிக்கும் மதிப்பே இல்லாமல் போய்விடும். இது பழகிப் போனதால் இயக்குனர்களும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

அதற்க்குக் காரணம் கோட்டாவுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் ராஜேந்திரனின் மேல் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை.தமிழ் பேச வராத தன தவறை மறைப்பதற்காக லிப் மூன்மென்ட் தெளிவாகத் தெரியாதபடி முகத்தை அஷ்டகோணலாக்கி அங்கும் இங்குமாகத் திருப்பி கோட்டா தெலுங்கில் பேசியிருப்பதை தமிழில் சின்க் செய்வதற்காக டப்பிங்கில் ராஜேந்திரன் படுகிற பாடு  பார்ப்பவர்களுக்குத்தான்  தெரியும்.

இவ்வளவு சிரமத்திலும் கோட்டா தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் இந்தச் சிரமங்களை நம்மவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அது நமது பிறவிக்குணம் இல்லையா..?

இன்னொரு உண்மை தெரியுமா உங்களுக்கு..? வெகு சிலரைத் தவிர தமிழ்த் திரையின் வெற்றிகரமான பின்னணிப் பாடகர்கள் எல்லோருமே தமிழ்ப் பாடல்களை வேற்று மொழியில் எழுதிக்கொண்டு பாடுகிறவர்கள் தான். இத்தோடும் இல்லை. தமிழை மென்று துப்புவதற்ககென்று மும்பையிலிருந்து வேறு பாடகர்கள் இங்கே விமானக் கட்டணம் கொடுத்து அழைக்கப் படுகிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அல்லவா இது.