வியாழன், 26 ஜூலை, 2012

பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு பாரீன் பயணம்

பாஸ்போர்ட், விசா எதுவுமில்லாமல் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சென்று வரமுடியுமா ? முடியாது என்று நீங்கள் சொல்லவந்தால் கீழே இருப்பதைக் கொஞ்சம் படியுங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னாள் மலேசியாவுக்குப் போயிருந்தேன். நண்பர் ஒருவரோடு பினாங்கு அருகேயுள்ள பட்டர்வோர்த்தில் இன்னொரு  நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தோம். சந்திப்பு முடிந்து கிளம்பலாம் என்றிருந்தபோது நண்பர் திடீரென்று ' தாய்லாந்து போய் வரலாமே' என்றார்.அதைக் கேட்டதும் மற்றவரும் உற்சாகமாக ' ஓகே ,ஓகே,போகலாம்' என்றார். நான் ' ஆனா நான் வரமுடியாதே' என்றேன். இருவரும் உடனே ' ஏன் ' என்றார்கள். ' நான் தாய்லாந்து விசா வாங்கவில்லை ' என்றேன். ' அது எதுக்கு.வாங்க போகலாம்' என்று காரைக் கிளப்பினார்கள்.

சரி,சும்மாதானே இருக்கிறோம்.நண்பர்கள் இருவரும் தாய்லாந்துக்குள் சென்று வரும் வரை பார்டரில் ட்யூட்டி ப்ரீ ஷாப்பில் பொழுது போக்கலாம் என்று நினைத்துக் கொண்டு போனேன்.இரண்டு அல்லது மூன்று மணி நேர சாலைப் பயணத்தில் ஹட்ஜாய் [' Hatyai ' ] என்ற தாய்லாந்து எல்லைப்புற சிறு நகரம் சென்று சேர்ந்தோம்.இமிக்ரேசன் அலுவலகத்துக்கு சற்று வெளியே இருந்த வாடகைக்கார் நிறுத்தத்துக்குச் சென்ற நண்பர்கள் ஒரு ஓட்டுனரிடம் பேசி ஏற்பாடு செய்துகொண்டு  நான் மறுத்தும் கேட்காமல் காருக்குள் என்னையும் ஏறச் செய்தார்கள்.

உள்ளே இருப்பவர்கள் தெரியாதபடி காருக்கு கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது, இமிக்ரேசன் வாசலில் நின்ற காரிலிருந்து நண்பர்களின் மலேசியப் பாஸ்போர்ட்டுகளை மட்டும் வாங்கிக் கொண்டு ஓட்டுனர் இறங்கிச் சென்றார். பாஸ்போர்ட் உள்ளேயிருந்த பணத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சில நிமிடங்களில் எல்லாம் முடிந்து திரும்பி வந்த ஓட்டுனர் காரைக் கிளப்பி தாய்லாந்து நாட்டுக்குள் நுழைந்தார், எல்லையைத் தாண்டி ஒரு இடத்தில் எங்களை இறக்கிவிட்டுத் திரும்பிப் போன ஓட்டுனர் பல மணி நேரங்கள் கழித்து நாங்கள் திரும்பி வந்தபோது அதே இடத்தில் எங்களுக்காகக் காத்திருந்தார்.

ஆனால் இந்தமுறை எல்லோரையும் போல வரிசையில் நின்றுதான் இமிக்ரேசனை முடிக்க வேண்டியிருந்தது.என்றாலும் என்னை வரிசையிலிருந்து விலகி இமிக்ரேசன் கவுண்டரைச் சுற்றிச் செல்லும்படி ஓட்டுனர் சைகை காட்ட நெஞ்சில் 'திக்,திக், என்ற பயத்தோடு அப்படியே செய்தேன்.எவரும் குறுக்கே வரவுமில்லை.எதுவும் கேட்கவுமில்லை.

திரும்ப மலேசியாவுக்குள் நுழைந்தபோது ஏதோ ஒரு அட்வெஞ்சர் செய்துவிட்டதுபோல ஒரு பெருமிதம் இருந்தாலும் எந்த வித அடையாளமும் இல்லாமல் தாய்லாந்துக்குள் இருந்தபோது ஒரு விபத்தோ சண்டையோ ஏற்பட்டிருந்தால் என் கதி என்னவாகியிருக்கும் என்று எண்ணிப் பார்த்தபோது எப்படியொரு முட்டாள்தனம் செய்திருக்கிறோம் என்ற பீதி அதைவிட கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக