திங்கள், 11 பிப்ரவரி, 2013

இவர்கள் மாமனிதர்கள்







துரையைச் சேர்ந்தவர் நாராயணன் கிருஷ்ணன்.இந்தியாவின் மிகப் பெரிய ஹோட்டல்களில் ஒன்றான 'தாஜ் 'ஜில் சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் பணி  ஒப்பந்தம் ஒன்று காத்திருந் தது. இந்த நேரத்தில் நான்கு நாட்கள் பயணமாக மதுரை வந்தார் நாராயணன்.

இதற்கு மேல் நடந்ததை அவரே சொல்லக் கேட்போம்.


"அன்று நான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது மன நலம் பாதிக்கப்பட்ட வயதான பெரியவர் ஒருவர் பசி தாங்காமல் தனது மலத்தையே சாப்பிடுவதைப் பார்த்தேன் அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பக்கத்து ஹோட்டலிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன்.பர பரவென்று சில நிமிடங்களில் அதைச் சாப்பிட்டு முடித்த அந்த மனிதர் பசி அடங்கியதும் என்னை நிமிர்ந்து பார்த்தார்.அவர் கண்களில் பொங்கி நின்ற  நன்றியுணர்வினை நான் கண்ட அந்தக் கணம்தான் நான் என்ன செய்யவேண்டும் என்பதை எனக்குத் தெரியப்படுத்தியது."

21 வயதில் நாராயணன் கிருஷ்ணன் டாலர் சம்பாத்தியம் தரும் வேலையை உதறிவிட்டு மதுரையின் தெருக்களில் சுற்றித் திரிகின்ற மன நோயாளிகளை யும் உறவுகளால் கைவிடப்பட்ட உடல் நலிந்த முதியவர்களையும்  தேடிச் செல்லலானார்.கோடீஸ்வரக் கனவான் களுக்கு உணவு சமைத்த கை அதே நயத்தோடும் தரத்தோடும் தெரு வாசிகளுக்காக சமைக்க ஆரம்பித்தது.தினம் மூன்று வேளை தேடியலைந்து உணவு கொடுத்தது மட்டுமல்லாமல் மன நோயாளி களுக்கு முகச் சவரம் செய்தார் முடிதிருத்தமும் செய்தார். சாத்தியப்பட்ட சமயங்களில்  அவர்களைக் குளிக்க வைத்து ஆடை அணிவித்து இயல்பு நிலைக்குத் திருப்பவும் முயற்சித்தார்.

ஆச்சாரமான பிராமணக் குடும்பத்து மகனின்  நடவடிக்கைகளைப் பார்த்து அதிர்ந்து போன பெற்றோர்கள் பிள்ளைக்கு மனம் பிசகி விட்டதோ என்று  சந்தேகித்து மன நல மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள்.தெய்வக் குற்றமோ என்று பயந்து கோவில்களுக்குக் கூட்டிச் சென்றார்கள்.

ஆனால் தான் என்ன செய்கிறோம் என்பதை மிக நன்றாக உணர்ந்திருந்த நாராயணனோ  தொடர்ந்து தனது பணியிலே கவனம் செலுத்தினார். இன்று நாராயணின் 'அட்சயா ட்ரஸ்ட்'  நாள்தோறும் 450 நலிந்த மனிதர் களுக்கு மூன்று வேளை உணவு அளித்து வருகிறது. இதுவரையில் 20 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதே மதுரையில் இருக்கின்ற கோவில்களில் ஏழைகளுக்கு உணவு அளிக்கின்ற அன்னதானத் திட்டம் நடைபெற்றுக் கொண்டுதான்  வருகின்றது.ஆனால் அங்கே  கொடுக்கப்படுகின்ற உணவுச் சீட்டுகளில் 80 சதவிகிதம் கோவில் பணியாளர்களுக்கே போய்ச் சேருகின்றது.10 சதவிகிதம் பணியாளர்களுக்குத் நெருக்கமானவர்களின் கடைகளுக்குப் போகின்றது.மீதமிருக்கின்ற  10 சதவிகித டோக்கன்கள் மட்டுமே வெளியாட்களுக்குக் கிடைக்கின்றன .ஆனால் அவையும் பசித்துக் கிடப்பவர்களுக்குப் பயன் அளிப்பதில்லை.

இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது  நாராயணன் கிருஷ்ணனின் பணி மிக மகத்தான ஒன்றாகும்.

2010 ஆம் ஆண்டில் நாராயணன் கிருஷ்ணனின் தன்னலமற்ற சேவை களுக்காக சி.என்.என் நிறுவனம் உலகின் 10 மிக உயர்ந்த மனிதர்களில் 
[ Top 10 C.N.N Heroes ] ஒருவராக அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

நாராயணன் கிருஷ்ணன் சொல்கிறார்.

" நீ ஹிந்துவா ?...,நீ பிராமினா ?...,நீ இந்தியனா?...இப்படியெல்லாம் கேட்டால் நான் எனக்குத் தெரியாது என்றுதான் சொல்வேன்.ஆனால் நீ ஒரு மனிதனா ?என்று கேட்டால் நிச்சயமாக உறுதியாக ஆம் என்று சொல்வேன். "


சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இரண்டாம் தளத்தில் இருக்கிறது அந்த புகைப்படக்கருவி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை. கடையின் உரிமையாளரான சேகர்  காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் வாடிக்கையாளர்கள் யாரையும் கவனிப் பதில்லை.ஏனென்றால் அந்த நேரங்களில் அவர் நூற்றுக் கணக்கான வேறு வகையான வாடிக்கையாளர்களைக் கவனிக்க வேண்டியதிருக்கிறது.



அந்த வேறு வகையான வாடிக்கையாளர்கள் கிளிகள்.

சில வருடங்களுக்கு முன் சேகர் தற்செயலாக தனது கடைக்கு வெளியே சில புறாக்களுக்கு உணவளித் தார். அதுமுதலாக அந்தப் புறாக்கள் தொடர்ந்து அங்கே  வர ஆரம்பித்தன. சில நாட்களுக்குப் பிறகு சில கிளிகள் அங்கே  வந்தன.இப்போது தினமும் சராசரியாக 200 கிளிகள் உணவுக்காக சேகரைத் தேடி வருகின்றன.

தானிய மணிகளையும் உடைத்த கடலையையும் அவை விரும்பிச் சாப்பிட்டு விட்டுப் பறந்து போகின்றன.அவை வந்து செல்லும் வரை அவைகளுக்குத் தொந்தரவு இல்லாத வகையில் வாடிக்கையாளர்களைத் தவிர்ப்பதற்காக கீழே இருக்கின்ற ஒரு கடையில் ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார் சேகர்.


கோயம்பத்தூர் அருகிலுள்ள கல்பட்டி கிராமத்தில் வசிப்பவர் 42 வயதான ராமகிருஷ்ணன். அங்கே அவருடைய நட்பு வட்டம் மிகப் பெரியது.மிக வித்தியாசமானதும் கூட.14 ஆண்டுகளாக தினமும் ஏறத்தாழ 150 நண்பர்கள் அவர் அளிக்கின்ற உணவுக்காக அவர் மீது அன்புகொண்டு அவரைச் சுற்றி வருகிறார்கள்.


அந்த நண்பர்கள் காக்கைகள்.

பிஸ்கட், தோசை,அரிசி, தேங்காய்ச்  சில்லுகள், மிக்சர் போன்றவற்றை ராம கிருஷ்ணன் காக்கைகளுக்கு உணவாகத் தருகிறார்.தினமும் காலையில் அவர் உணவுப் பொட்டலத்தோடு வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவருக்காகக் காத்திருக்கின்ற காக்கைகள் உற்சாகக் குரல் எழுப்பி அவரை வரவேற்கின்றன. தலை, தோள் என்று அவர் மீது அவை பயமின்றி அமர்ந்து கொள்கின்றன. வியப்பைத் தரும் வகையில் சில காக்கைகள் அவர் தன உள்ளங்கைகளில் தரும் உணவை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன.

தனது தந்தையின் திதிக்காக ஒருநாள் காக்கைக்கு உணவு வைத்தபோது எங்கிருந்தோ திடீரென்று நிறைய காக்கைகள் உணவைச் சாப்பிட வந்ததாகவும் அன்றிலிருந்து தினமும் அவைகளுக்கு உணவளிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டதாகவும் ராமகிருஷ்ணன் கூறுகிறார்.

ராமகிருஷ்ணன் வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் கிளம்பும்போது காக்கைகள் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலும் அவரைத் தொடர்ந்து பறந்து செல்வதாகக் கூறுகிறார் ஊர்க்காரர் ஒருவர்.

இப்படியான இன்னும் பல மனிதர்கள் புனிதர்களாக நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எப்படி இந்த மனிதர்கள் நம்மிலிருந்து தனித்து நிற்கிறார்கள்..? எப்படி இந்த ஈகைச் சிந்தனை இவர்களுக்கு வந்தது..?

அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.....

எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இறைவன் இருக்க முடியாது என்பதால்தான் அவன் தாய் என்பவளைப் படைத்தான் என்கிற சொல்லாடல் நம்மிடையே உண்டு.அந்தத் தாய் என்பவளும் இல்லாத நாதியற்ற மனிதர்களுக்கு யார் உதவ வருவார்கள்..?

அதற்குத்தான் இறைவன் நாராயணன் கிருஷ்ணன் போன்ற நல்லாத்மாக் களைப் படைத்திருக்கிறான் போலும்.

 இவர்கள் இறைவனின் பிரதிநிதிகளாக தேவனின் தூதர்களாக இங்கே வந்திருக்கிறார்கள்.இவர்கள் செய்வதுதான் உண்மையான தெய்வத் திருப்பணி.இவர்கள் செய்வதுதான் தேவ ஊழியம்.

ஆனால் இந்த இறைத் தொண்டினை இவர்கள் எந்தத் தெய்வத்தின் பெயராலும் செய்யவில்லை.மனிதனின் பெயராலேயே செய்கிறார்கள்.

இவர்கள் மகத்தானவர்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக