வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

எது மகிழ்ச்சி ...?...இதோ இது








ரண்டு நாட்களாக  எடை பார்க்கும் கருவி  ஒன்று வாங்குவதற்காக அலைய வேண்டியதாகிவிட்டது.அதாவது Personnel weigh machine என்று சொல்லப்படுகிற வட்டக் கடிகாரம் போல இருக்கிற ஏறி நின்று நாமே எடை பார்த்துக் கொள்ளக்கூடிய கையடக்கமான இயந்திரம் அது.

அது எங்கே விற்கப்படுகிறது என்று தெரியாமல் ரிச்சி ஸ்ட்ரீட் வரையிலும் போய்ப் பார்த்து விட்டேன்,கிடைக்கவில்லை. 


அந்த எடை மெஷின் எனக்கில்லை.உடல் எடையைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் எனக்கு இதுவரையில் வரவில்லை.

என்னுடைய சிறுவயது நண்பர் ஒருவர்.அமானுல்லா என்று பெயர்.சின்ன வயதில் அசாத்திய படைப்புத் திறனுடன் இருப்பார்.புதிதாக எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதை அப்படியே சொந்த முயற்சியில் உருவாக்க முயலுவார். செயல்பாட்டுத் திறன் இல்லையென்றாலும் அனேகமாக அந்த புதிய பொருளின் வடிவத்தை உருவாக்கிவிடுவார்.

அப்படியான திறமைசாலியாக இருந்தும் குடும்பத்தின் வறுமைச் சூழலால் அவரால் மேற்படிப்புக்குப் போக இயலவில்லை.நாங்கள் எல்லாம் படித்து வேலையில் சேர்ந்து அப்படி இப்படியென்று ஒருமாதிரி செட்டிலாகி விட்டோம்.

ஆனால் அமானுல்லாவின் வாழ்க்கைச் சக்கரம் மட்டும் ஏழ்மைச் சகதியில் மாட்டிக் கொண்டு மேலே ஏற வழியில்லாமல் அப்படியே நின்ற இடத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது.

நான் ஊருக்குப் போகும்போதெல்லாம்  எதேச்சையாக அவரைச் சந்திப்பது உண்டு. அப்போதெல்லாம் மிகுந்த அன்போடு நலம் விசாரிப்பார் அமானுல்லா. மறக்காமல் பக்கத்தில் இருப்பவர்களிடம் இளமைக் காலத்தில் நான் செய்த சேட்டைகளையும் அவர் செய்த சேட்டைகளையும் நாங்கள் இருவரும் சேர்ந்து செய்த சேட்டைகளையும் காமெடியாகச் சொல்லிக் கலகலக்க வைப்பார்.

எப்போதுமே அமானுல்லாவிடம் தனது  வறுமை குறித்த வருத்தமோ எங்களைப் பற்றிய பொறாமையோ இருந்ததேயில்லை.சென்ற முறை நான் ஊருக்குப் போயிருந்தபோது அமானுல்லா என்னைத் தேடி வந்தார்.நேருக்கு நேராக என் முகத்தைப் பார்த்து எந்த விதத் தயக்கமும் இல்லாமல் என்னிடம் கேட்டார்.

' தம்பி,எனக்கு ஒரு உதவி செய்யணும் நீங்க..'

ம்ஹும் .சரிதான்.என்றாவது ஒருநாள் இது நடக்கும் என்று எதிர்பார்த்தது தான். கடைசியில் அந்த நேரம் வந்தேவிட்டது.அவர் கேட்கும்போது 'இல்லை' என்று சொல்லமுடியாது.பணத்தைக் கொடுத்து விடலாம். ஆனால் அடுத்த முறை ஊருக்கு வரும்போது மறுபடி பணம் கேட்பாரோ என்று நான் அமானுல்லாவைக்  கண்டு ஒளிந்து கொள்ள நேரிடும். வாங்கிய  பணத்தைக் திருப்பிக் கொடுக்க முடியாமல் சங்கடப்பட்டு என்னைக் கண்டு அமானுல்லா ஒளிந்து கொள்ள நேரிடும்.நீண்ட கால நல்ல நட்புக்கு முடிவு காலம் வந்துவிட்டது என்று நான் முடிவு செய்து விட்டேன்.

'என்ன சொல்லுங்க ' ..என்றேன்.

அமானுல்லா நான் பயந்ததுபோல பணம் கேட்கவில்லை.அவர் கேட்டார்.

' எனக்கு ஒரு எடை மெசினு வாங்கிக் குடுங்க.பழசானாலும் பரவா யில்லை. கடைத் தெருவுல,சந்தைப்பேட்டையில போட்டு உக்காந் தேன்னா ஒவ்வொரு ரூபா வசூல் பண்ணிப் பொழைச்சுக்குவேன் ,,'

அந்தக் கணத்தில் எனக்கு மேடையெங்கிலும்  பேசித் திரிகின்ற மேதைகளின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

" பசித்தவனுக்கு மீனை  வாங்கிக் கொடுக்காதே, மீனைப்  பிடிக்கக் கற்றுக் கொடு..."

அமானுல்லா விருப்பப்பட்டிருந்தால் ஆயிரமோ இரண்டாயிரமோ கேட்டிருக்கலாம்.வாழ்க்கையின் அனுபவங்கள்தான் அமானுல்லாவுக்கு இப்படிச சிந்திக்கக் கற்றுக் கொடுத்திருக்கவேண்டும். 


ந்த அமானுல்லாவுக்காகத்தான் எடைக் கருவியைத் தேடியலைந்தேன். நல்லவேளை. கடைசியாக இங்கே வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த ஒரு சூப்பர் மார்க்கட்டில் கிடைத்தது. இருப்பதிலேயே விலை குறைந்தது 495 ரூபாய் என்றார்கள். பரவாயில்லை. குறைவுதான்.யோசிக்கவேயில்லை.உடனே பணத்தைக் கொடுத்து வாங்கிவிட்டேன்.

ஏனென்றால் 500 ரூபாய் செலவில் ஒரு பசித்த மனிதனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கின்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நழுவ விட்டு விடக் கூடாது.அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அமானுல்லாவுக்கு நன்றிகள்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக