வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மலேசியத் தமிழ் மக்கள்






                 கன்யாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் நம்மவர்கள் 



மலேசியா நாட்டுக்கு நான் பல முறை சென்று வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மாதக்கணக்கில் அங்கே தங்கியும் இருக்கிறேன்.

தமிழ் நாட்டிலிருந்து மலேசியா சென்று வருகின்ற பெரும்பாலான வர்களைப் போல கோலாலம்பூரோடு திரும்பி விடாமல் பினாங்கு,, அலொச்டார் , ஈப்போ , க்ரோ என்று மலேசியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன் .

பினாங்கு வாட்டர் பாலைச் சேர்ந்த  ராஜாவோடு தாய்லாந்தின் 'ஹட்ஜாய்' க்கும் பட்டர்வொர்த் விஜய்  மற்றும் சுப்பிரமணியம் குடும்பத்தினரோடு  ஜெந்திங் ஹைலேண்ட்ஸ் பக்கத்தில் காட்டுக்குள்  அமைந்திருக்கின்ற ஒருமுனீஸ்வரர் கோவிலுக்கும் கூடப் போயிருக்கிறேன்.

கோலாலம்பூரிலிருந்து ' ஏர்கோன் ' பஸ் ஏறி விடிகாலை 2 மணிக்கு 'குவாந்தான்' நகரில் இறங்கி விட்டு திக்குத் திசை தெரியாமல் திண்டாடியிருக்கிறேன்.

மலேசியாவின் வடக்கு எல்லைச் சிற்றூரான 'க்ரோ' வழியாக தன்னந் தனியாக தாய்லாந்துக்குள் சென்று வந்திருக்கிறேன்.

அது மட்டுமல்லாமல் பினாங்கு நண்பர் 'அயத்தாம் '-[Air itham]  ராஜேந்திரனோடு மலேசியத் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தபோது அவர்களோடு சுற்றுலா முழுவதும் நானும் உடனிருந்திருக்கிறேன்.

இந்தச் சுயப் பிரதாபங்கள் எல்லாம் எதற்கு என்பதை இதோ சொல்லி விடுகிறேன்.இப்படி மலேசியாவின் உள் பகுதி வரையிலும் பல முறை  பயணம் செய்திருப்பதால் எனக்கு மலேசிய நாட்டைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும்  ஓரளவு தெரியும் என்பதையும் அதனால் அவர்களைப் பற்றி இங்கே எழுத எனக்கு அருகதை உள்ளது என்பதையும் முதலிலேயே தெரியப்படுத்திக் கொள்வதற்காகவே இந்தச் சுற்று வளைப்புகள்.

மலேசியத் தமிழ் மக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள்.அவர்களுடைய மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்றை முதலில் சொல்லிவிட வேண்டும்.அது அவர்கள் பேசுகின்ற தமிழ்.மிகச் சுத்தமான  தமிழில் அவர்கள் பேசுகிறார்கள். அவர்களுடைய தமிழ்ப் பேச்சு  நம்மை வியக்க வைக்கிறது.

காலை நேரத்தில் நாம்  பிரேக் பாஸ்ட்டுக்குத் தயாராகும் போது அவர்கள் ' பசியாறி விடலாமா ? ' என்று கேட்கிறார்கள்.' வீட்டுக்குள் நுழைந்து விட்டோம் 'என்று சொல்லாமல் ' வீட்டுக்குள் புகுந்து விட்டோம் ' -பூந்துட்டோம் -என்று சொல்கிறார்கள்.

'பேக் , சூட்கேஸ் ' என்கிற பேச்சே இல்லை .' பை,' 'பெட்டி ' தான்.  செருப்பு-சப்பாத்து . பேன்ட் -சிலுவார் . டாய்லட் -பீலி.

கொடைக்கானலில் ஸ்வெட்டர் அணிந்தபோது மலேசியத் தமிழ்ப் பெண்மணி ஒருவர் சொன்னார்.' நீட்டக்கைச் சட்டை போட்டுட்டீங்க..? '

மிகப் படித்த புதிய தலைமுறை இளைஞ்ர்களும் கூட தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலப்பு இல்லாமலேயே பேசுகிறார்கள்.சுற்றி வளைத்து நிற்கின்ற மலாய் மற்றும் சீன மொழிகளின் ஊடுருவ லிலிருந்து தம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காக யாரோ ஒரு மொழிப் பற்றாளர் தோற்றுவித்து வைத்த  இந்தப் பழக்கத்தை நம் மக்கள் இன்று வரை விடாது  கைக்கொண்டு வருவது உண்மையில் மிகச் சிறப்பு.

ஆனால் இந்தப் பாராட்டுத் தோரணங்களுக்கு இடையிலே கிழிந்து தொங்குகின்ற ஒரு வண்ணப் பதாகையை நம்மால் மறைக்க இயலாது. பெரும்பாலான மலேசியத் தமிழ் மக்களுக்கு தமிழை எழுதப் படிக்கத் தெரியாது.அரசாங்கத்தின் கல்விக் கொள்கைகளுக்காக நம்மவர்களை நாம் குறை சொல்ல முடியாது.தமிழ் படிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.

முகநூலில் [ Facebook ] இருக்கின்ற எமது மலேசியத் தமிழ் நண்பர்கள் ' மலாய் ' மொழியில் இடுகின்ற பதிவுகளும் பின்னூட்டங்களும் எமக்குப் புரிவதில்லை.

பேச்சு மொழியைக் காப்பாற்றி விட்டார்கள்.ஆனால் ஆடைக் கலாசாரத்தைக் கைதவற  விட்டு விட்டார்கள்.பெண்களின் குட்டைப் பாவாடைகளும் கையில்லாத மேல்சட்டைகளும் கருத்த முகத்தில் சிவப்பு உதட்டுச் சாயமும் ஆண்களின் பொம்மைச் சட்டைகளும் தாயகத்  தமிழரிடமிருந்து அவர்களை வெகு தூரத்துக்குப் பிரித்து எடுத்துச் செல்கின்றன.

தற்போது பெண்கள் சுரிதார் அணிய ஆரம்பித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. எழுபது வயது மூதாட்டிகள் கூட முடிச் சாயத்தின் ஆதரவோடு இளமையாக இருக்கிறார்கள்.

தைப்பூசம் போன்று எப்போதாவது பண்டிகைக் காலங்களில் அவர்கள் வேட்டி,சேலை அணிகிறார்கள்.ஆனால் அவைகளின் வண்ணமும் வடிவமைப்பும் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.

 நாம் இங்கே தாயகத்தில் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்ற ' ஹவுஸ் வைப் ' என்கிற ஒரு பதவி மலேசியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு  அவசியமும் இல்லை. ஏனென்றால் அங்கே  யாருமே வீட்டில் இருப்பதில்லை.எல்லோரும் எதாவது ஒரு வேலைக்குப் போகிறார்கள்.

நீங்கள் மலேசியாவுக்குப் போனால் எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும்  கூட அவர்கள்  உங்களை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குப் போய்விடுவார்கள்.குளிர்ப் பெட்டியில் இருப்பதை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு தொலைக் காட்சி பார்த்துக்கொண்டு பொழுதைக்  கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அவர்களை ரொம்பவும் பயப்படுத்துகின்ற ஒரு பிராணி நம் ஊர் சமையலறைகளில் செல்லப்பிராணிகளைப் போலத் திரிகின்ற கரப்பான் பூச்சிகள்.கரப்பான் பூச்சிகளைப் பார்த்தால் அவர்கள் சிங்கத்தைப் பார்த்தவர்கள் போல அலறுகிறார்கள்.ஈயும் கூட அவர்களுக்கு எரிச்சல் மூட்டுகிறது.

அதிகாலையிலேயே ' பசியாறி' விடுகிறார்கள்.அது எல்லோருமே வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால் வந்த பழக்கமாக இருக்கலாம்.

தண்ணீரோ பியரோ மிகக் குளிர்ந்த நிலையில் இருந்தால்தான் அவர்களுக்குப் பிடிக்கிறது.பெரிய கண்ணாடிக் குவளைகளில் கிட்டத்தட்ட கால் கிலோ ஐஸ் போட்டு 'சார்ஸி ' [ பெப்சி போன்ற ஒரு கோலா பானம் ] அருந்துகிறார்கள். இதன் விளைவாக விரைவாகவே அவர்களுக்கு பற்கள் விழுந்து போவதைக் கவனித்திருக்கிறேன்.

காலை நேரத்தில் அரை லிட்டர் அளவுக்கு 'தே ' [ தேநீர் ] குடிக்கிறார்கள்.[ சீனர்களுக்கு 'டி ' உச்சரிப்பு வராது.அதனால் அவர்கள் டீயை 'தே ' என்று சொல்ல நம்மவர்களும் அப்படியே சொல்கிறார்கள்.] இங்கே வரும் போது நம்ம ஊர் உணவகங் களில் அவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு தேநீர்கள் ஆர்டர் செய்வதைக் கண்டு பணியாளர்கள் திகைத்து நின்றதை பலமுறை  ரசித்திருக்கிறேன்.

மலேசியத் தமிழ் மக்களுக்கு ' டிப்ஸ் ' கொடுக்கும் பழக்கம் இல்லை. அதனால் இங்கே அவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவகப் பணியாளர்களிடம் முதுகுக்குப் பின்னால் திட்டு வாங்குவது அவர்களுக்குத் தெரியாது.இந்தத் தர்ம சங்கடத்தைத் தவிர்க்க முதலிலேயே பணியாளர்களிடம் விஷயத்தைச் சொல்லி நானே அவர்களைக் கவனிக்க வேண்டியதாயிருந்தது.

சொல்லச் சங்கடமாகத்தான் இருக்கிறது.ஆனாலும் சொல்லிவிட உந்துதல் உண்டாகின்றது.நம்மவர்களுக்கு ரசனை கொஞ்சம் குறைவுதான். உலகமே ரசிக்கின்ற கேரள ஆலப்புழா [Allepey Backwaters ] நீரிணையில் மூன்று மணி நேர 'ஷிகாரி ' படகுப் பயணத்தின் போது  அவர்கள் தூங்கிக் கழித்ததுதான் அதிக நேரமாயிருந்தது. இங்கே , அங்கே , எங்கேயும் நம்மவர்களுக்கு சினிமாதான் பிரதானம்.

மலேசியப் பெரும்பான்மைத்  தமிழ் இளைஞர்களிடம் வாழ்க்கை பற்றிய லட்சிய உணர்வு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.மிக அலட்சியமாக அவர்கள் இருக்கிறார்கள்.அடுத்த தலைமுறையிலாவது கல்வித் திறன் பெற்ற ,ஆக்கபூர்வ சிந்தனை கொண்ட ஒரு இளைஞர் சமுதாயம்  உருவாகட்டும்.

குறை சொல்வது இங்கே நோக்கமில்லை.குறைப்பட்டியல் அடுக்குவது போலத் தோற்றம் எதுவும் ஏற்பட்டிருந்தால் அதற்கு எமது ஆதங்கத்தின் வெளிப்பாடையே காரணமாக  எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

எல்லாக் குறைகளையும் தாண்டி மிக நிறைவாக இருக்கின்ற ஒரு விஷயத்தை இங்கே முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்துக் கொள்வோம். மலேசியத் தமிழ் மக்களிடையே சாதி இன பேதமில்லை.ஆமாம்,அது இல்லவேயில்லை.

அது மட்டுமல்லாமல் தாயகத்தை விடவும் அங்கே தேசிய ஒருமைப்பாடு  அதிகச் சிறப்பாக நிலவுகிறது.மலையாளிகள் , தெலுங்கர்கள் , சீக்கியர்கள் என எல்லோரும் இந்தியர்கள் என்ற ஒரு இனத்தின் உருவமாக வாழ்கிறார்கள்.

இன்னும் சிறப்பாக , நாம் வியக்கின்ற விதமாக குர்பிரீத் கவுரும் ராஜ்பால் சிங்கும் கோபால் ராவும் நல்ல தமிழ் பேசி பொங்கலும் தைப்பூசமும் கொண்டாடி தமிழர்களாகவே அங்கே  அடையாளம் காணப்படுகிறார்கள்.

சிறுபான்மையினராக வாழ்கின்ற ஒரு சமுதாயத்தில் நாம் நமது வாழ்க்கை முறையை வெகு கவனமாகவும் மிகுந்த உத்வேகத்துடனும் அமைத்துக் கொள்வது அவசியமாகிறது.அறிவுத் திறனையும் உழைப்பையுமே ஆயுதமாக எடுத்துக் கொண்டு நமக்கான சமுதாயத்தை நாம் கட்டி எழுப்பிக் கொள்ள வேண்டும்,  அப்படியில்லையெனில் நாம் சற்று அயர்ந்த நேரத்தில் அது தேன்கூடு போல கலைக்கப்பட்டு விடுமென்பதையும் நாம் நம் அனுபவத்தில் கண்டுவிட்டோம்.

இந்தக் கவலை மற்றும் அக்கறையின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. எத்தனை மலேசியத் தமிழ் மக்கள் இந்த இடுகையை வாசிப்பார்கள்  என்பது எமக்குத் தெரியாது. யாரேனும் வாசித்தால் அவர்கள் மூலமாக நம்மவர்களுக்கு  எமது  வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக