புதன், 9 ஜனவரி, 2013

2100 ல் மனித இனம் அழிகிறதா..?








ஒரு வழியாக உலகம் தப்பித்துக்கொண்டது. டிசம்பர் 21 ல் உலகம் அழியவில்லை.ஆனால் மாயன் நாள்காட்டி பொய்யாகிப்போனது என்று சொல்வதை ஏற்க முடியாது, காலண்டர் 21 ஆம் நாளோடு முடிந்து விட்டது என்பதற்காக உலகமே அன்றோடு முடியப் போகிறது என்று நாம்தானே கதை கட்டினோம்.

இயற்கைச் சீற்றங்களாலோ , கொள்ளை நோய்களாலோ அல்லது வறட்சியாலோ தாக்கப்பட்டு மாயன் நாகரிகம் வீழ்ச்சியுறத் துவங்கியபோது அவர்கள் தங்களின் நகரங்களைக் கைவிட்டு உடனடியாக எங்கோ இடம் பெயர நேர்ந்தது என்பது வரலாறு.அப்படி அவர்கள் அவசரமாக இடம் பெயர வேண்டிய அந்த நெருக்கடியில் தாங்கள் மேற்கொண்டிருந்த வேலைகளை அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பியிருக்கலாம். நாள்காட்டி வேலையும் இப்படி இடையில் நின்றுபோன வேலைகளில் ஒன்றாக இருக்கலாம்.

அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் மீண்டும் மாயர்கள் எழவே முடியாதபடி செய்தன. நாள்காட்டி டிசம்பர் 21 உடன் நின்றுபோனது இப்படித்தான்.

உலகம் எதற்காக அழிய வேண்டும்..? சூரியன் வாழும் வரை இந்த பூமியும் வாழும். இன்னும் சில லட்சம் ஆண்டுகள் கழிந்த பின்னரே சூரியன் சாக ஆரம்பிக்கும்.

இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய இந்து மதக் கணிப்பின்படி இன்னும் சில லட்சம் ஆண்டுகளுக்கு இந்த உலகம் வாழவேண்டியுள்ளது.ஆனால் நாம்தான் உலகத்தின் அழிவு.. உலகத்தின் அழிவு என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக் கிறோம்.  இந்தக் கூக்குரலின் பின்னே அப்பட்டமான மோசடி ஒன்று இருக்கிறது.

அது என்ன மோசடி  ..?

கீழை நாடுகள் தவிர்த்த மற்ற உலக மாந்தருக்கு இந்த உலகம் தமக்காகவே படைக்கப்பட்டது என்ற அகந்தைக்குணம் உண்டு .ஆன்மீக ரீதியாக மற்ற உயிரின்ங்களை அவர்கள் எள்ளளவும் மதிப்பதில்லை.அப்படியிருக்கும்போது இந்த உலகமும் அதில் இருக்கின்ற எல்லா உயிர்களும் நீடூழி வாழ்ந்து கொண்டிருக்க தாம் மட்டும் அழியப் போகிறோம் என்பதை எப்படி அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும்..?

அதனால்தான் தம்மோடு இந்த உலகத்தையும் அழித்துவிட ஆசைப் படுகிறார் கள்.

ஆமாம். உலகம் இப்போது அழியப்போவதில்லை, மனித இனம்தான் வெகுவிரைவில் அழியப்போகிறது.

மனித இனத்தை அழியச் செய்வதற்காக நான்கு  முக்கிய காரணிகள் காத்திருக் கின்றன.அதில் மூன்றை மனிதனே உருவாக்கி வைத்திருக்கிறான்..அதில் முதலாவது அணு ஆயுதம்.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் என்றாவது ஒருநாள் தீவிரவாதிகளின் கைகளுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.அப்படிக் கிடைத்தால் என்னவாகும் என்பதை நாம் நன்கு அறிவோம்.அவர்களின் முதல் குறி இந்தியாவாக இருக்காது. அது அமெரிக்காவாகத்தான் இருக்கும்.. அமெரிக்கா தாக்கப்பட்டால் அடுத்து என்ன..?

பாகிஸ்தானிடமிருந்து திருட்டுத்தனமாக அணு ஆயுதத் தொழில்நுட்பம் பெற்றிருக்கின்ற ஈரானும் வட கொரியாவும் அறிவைக்கெடுக்கும் ஒரு ஆத்திர நேரத்தில் தனது பாரம்பரிய எதிரிகளான இஸ்ரேல் மீதும் தென்கொரியா மீதும் அந்த ஆயுதங்களை ஏவி விட்டால் அடுத்து என்ன..?

உலகப்போர்தான்.அணு ஆயுத உலகப்போர்.



போரின் முடிவில் உலகம் இருக்கும். மனித இனம் இருக்காது.

மனித இனத்தை அழியச் செய்ய மனிதனே உருவாக்கி வைத்திருக்கின்ற அடுத்த காரணி..Biological weapon சுருக்கமாக Bio weapon,அல்லது BW என்று சொல்லப்படுகின்ற உயிரி ஆயுதம்.

செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்ட புதிய உலகத்தின் பூர்வ குடிகளை அழித்தொழிக்க ஐரோப்பிய குடியேறிகள் பயன்படுத்தியதாகச் சொல்லப் படுகின்ற இந்த உயிரி ஆயுதம் என்பது வேறொன்று மில்லை. உயிர்க்கொல்லி நோய்க்கிருமிகள்தான், பண்டைக் காலத்தில் அசிரியர்களும் [Assiriya ] மங்கோலியர் களும் கூட தங்களின் எதிரிகளை அழிக்க இந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன.

அமெரிக்க ராணுவம் இதற்கெனத் தனித் துறையே வைத்திருக்கிறது.உணவுப் பயிர்களை அழிப்பவை மற்றும் கால்நடைகள், மனிதர்கள்  என்று ஒவ்வொன்றுக்குமான வித விதமான பயங்கர நுண்ணுயிரி அழிவுக்  கிருமிகள் அங்கே உருவாக்கப்பட்டுள்ளன.

உபயோகிப்பதற்காகத்தானே ஒரு பொருள் உருவாக்கப்படுகிறது..?

தனக்கு அடங்காத அல்லது வேண்டாத நாடுகளின் மீது  இந்தக் கிருமிகளைக் கொண்ட ஆயுதங்கள் ஒருநாள் பிரயோகிக்கப்பட்டால் அங்குள்ள மக்கள் பூண்டோடு அழிவதோடு அருகில் இருக்கின்ற மற்ற நாடுகளுக்கும் ஏன் அடுத்தடுத்து உலகம் முழுவதுமே பரவி மனித இனமே மாண்டு போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன.

அடுத்த , மிக முக்கியமான அழிவுக் காரணி Artificial Intelligence என்று சொல்லப்படுகின்ற செயற்கை அறிவு. ஹாலிவுட்டின் ' Terminator ' ரிலிருந்து தமிழ் ' எந்திரன் ' வரை ஏராளமான திரைப்படங்களில் செயற்கை  மூளையின் எதிர்விளைவுகளை நாம் பார்த்திருக்கிறோம்.இதெல்லாம் கற்பனைக் கதைகள்தான்.

ஆனால் எல்லாக் கற்பனைகளுமே நிலவில் மனிதன் நடந்ததுபோல, நியுயார்க் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்டதுபோல ஒருநாள் உண்மையாகி இருக்கின்றன.

சுயமாகச் சிந்திக்கக் கூடிய திறன் ஒரு இயந்திரத்துக்கு [ Robot ] வரும்போது அது நல்லதை மட்டுமே சிந்திக்கும் என்பது என்ன நிச்சயம்..? மனிதனுக்கு மூளைக் கோளாறு வருவதுபோல் அந்த இயந்திரத்தின் மூளையில் சிக்கல் ஏற்பட்டால் அதன் செயல்பாடு எப்படி இருக்கும்..?



அந்தக் கோளாறு வலைப்பின்னல் [ Network ] மூலமாக உலகம் முழுவதும் உள்ள இயந்திரங்களுக்குப் பரவும்போது அவை எல்லாம் ஒன்றிணைந்து மனிதர்கள் தங்களுக்குக் கொடுத்திருக்கின்ற அதிநவீன சாத்தியக்கூறுகளை அதே மனிதர்களுக்கு எதிராகப்  பயன்படுத்தும்  வாய்ப்பும்  இருக்கவே செய்கிறது.

இப்போது நாம் பார்த்த மூன்று அழிவுக் காரணிகளும் மனிதன் தன இனத்தை அழிக்க தானே படைத்துக்கொண்டவை என்றால் இயற்கை எதனாலும் கட்டுப்படுத்த முடியாத அழிவுச் சக்தியைத தன கையில்  வைத்திருக்கிறது.

கொதிக்கின்ற நீரை குறிப்பிட்ட மிகச் சரியான கால இடைவெளியில் பீய்ச்சி அடிக்கின்ற அமெரிக்க எல்லோ ஸ்டோன் மலையின் அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் குமுறிக்கொண்டு கிடக்கின்ற நெருப்புக்குழம்பின் அழுத்தம் தாங்காமல் நாளையே கூட அந்த மலை வெடித்துச் சிதறலாம் .அது நிகழ்ந்தால்
வெடிப்பிலிருந்து வெளியாகும் தூசுப்புயல் பூமியை மூடிக்கொள்ளும்.பல நாட்களுக்குப் பிறகு தூசுப்படலம் கரைந்து மறையும் போது அதோடு சேர்ந்து பல கோடி ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு தூசுப் புயலில் சிக்கி மறைந்து போன டினோசார் போல மனித இனமும் மறைந்து போயிருக்கும்.

உலகம் முழுவதும் இதே போன்ற பல எரிமலைகள் வெடிப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.


இங்கிலாந்து நாட்டின் புகழ் பெற்ற வானவியல் ஆராய்ச்சியாளரான சர் மார்டின் ரீஸ் [ Sir Martin Rees ] 2003 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ' நமது இறுதி நேரம்  '  [ our final hour ] என்ற தனது புத்தகத்தில் மனிதன் உருவாக்கி வைத்திருக்கின்ற அழிவை ஏற்படுத்தும் மிக முன்னேறிய தொழில் நுட்பங்களால் 2100 ஆம் ஆண்டோடு மனித இனம் அழிந்து போவதற்கான 50 சதவிகித வாய்ப்புகள் இப்போதே கண்கூடாகத் தெரிவதாக எழுதியிருக்கிறார்.

இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிமுறைகளையும் இந்தப் புத்தகத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.ஆனால் அதையெல்லாம் நாம் எங்கே கேட்கப்போகிறோம் ?






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக