திங்கள், 2 ஜூலை, 2012

மணிமாறன் மாமா சொன்ன கதை -1


                                                             


எங்கள் ஊர்ப் பெரிசு மணிமாறன் மாமா தனது பட்டணத்து நண்பர்  ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்த  உண்மைக்கதை ஒன்றைக் கேட்க நேர்ந்தது.இதோ அந்தக் கதை மாமாவின் குரலில் ......


எங்க கிராமம் ராமநாதபுரம் மாவட்டத்துல கடற்கரை ஓரத்துல இருக்கு.இப்ப அத இ சி ஆர் னு சொல்றாய்ங்க. ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி பாத்தா சிலோனுக்கும் மலேயாவுக்கும் போக்குவரத்து உள்ளவுங்க இங்க அதிகம். அதே மாதிரி இங்கேயிருந்து சிலோனுக்கும் சிலோன்லேயிருந்து இங்கைக்கும் கடத்தலும் அதிகம். பலநாள் ராத்திரி வேளையிலே கடற்கரையிலேயிருந்து வர்ற ரோட்டுல கடத்தல் வண்டி சர் சர்ருன்னு போறதையும் பின்னாலேயே கஸ்டம்ஸ்காரங்க துரத்திக் கிட்டு போறதையும் பாத்திருக்கேன்.

உள்ளூர்ல ஆடம்பரம் உள்ள சில ஆளுக தொனையோட இது நடந்துக் கிட்டு இருந்துச்சு.இலங்கையிலேயிருந்து போராளிப் புள்ளைங்களும் இங்க சர்வ சாதாரணமா வந்துபோவாய்ங்க.

ஒருநாள் விடியக்காலையிலே டீக்கடைக்கு பால் விக்கப்போன ஆளுக ரோட்டோரமா நெறைய பிளாஸ்டிக் விரிப்புக மடிச்ச நிலையில கிடக்கிறதைப்  பார்த்து வீ ட்டுக்கு எடுத்துக்கிட்டு வந்தாக.அதுக்கு அப்புறம் யாராரோ வந்து அதைபத்தி விசாரிச்சதாகவும் கடத்தல் காரைய்ங்க அதை எடுத்த ஒருத்தனை அடிச்சுபோட்டதாகவும் பேசிக்கிட்டாங்க.

இன்னொருநா ஆடு மேய்க்கிற பய ஒருத்தன் காட்டுல புதருக்குப் புதரு பெரிய பெரிய பிளாஸ்டிக் பண்டல்களப் பார்த்துட்டு  ஊருக்குள்ள ஓடிவந்து சொல்ல முந்துனவன் வீட்டுலயெல்லாம் கலர் டிவியும் விசிஆரும் சீப்பட்டுச்சி. இவ்வளவுக்கும் அப்பல்லாம் ஒருபய வீட்டுலயும் கரண்டு இல்லாதது ஒருபக்கம் இருக்க இந்த டிவிபொட்டியத் தவிர மத்ததெல்லாம் என்னன்னு கூட இந்தப்பய புள்ளகளுக்குத் தெரியல.

இன்னொரு பெரிய வேடிக்கையக் கேளுங்க,ஒருநா கடக்கறயிலயிருந்து மாட்டு வண்டியில கடத்தல் சரக்கு எங்க ஊரு வழியா வர்றதா எவனோ ஒரு காவாலிப்பய  கொளுத்திப்போட்டுட்டுப் போயிட்டான்.நானும் எம்மச்சான் ஒருத்தனும் சேந்து ஒரு திட்டம் போட்டோம்.அங்கெங்கெ தேடியலஞ்சி  ரெண்டு செட்டு பேண்டு சட்டை தயார் பண்ணுனோம். மச்சான் பயலுக்கு பேண்டு இடுப்புல கூட நிக்கல.மப்டி போலீஸ் மாதிரி மாட்டு வண்டிய மறிச்சு சாமானக் கைப்பத்தறதுதான் எங்க திட்டம். ராத்திரி முழுக்க கொட்ட கொட்ட முழிச்சுக்கிட்டு வண்டிச்சாலயிலேயே நின்னு பாத்தோம்.ம்ஹூம் ....எந்த வண்டியும் வரல.ஊர்ப்பயளுககிட்ட எங்க சாகசக் கதயச் சொல்லிச்சொல்லி ரொம்ப நாளைக்கிச் சிரிச்சுக் கிட்டிருந்தான் மச்சான்.

கத இப்படி இருக்க ,இதே கடற்கரை ஓரமா ஒரு ஏழெட்டு மைல் வடக்கே எங்க அம்மாவோட பொறந்த ஊர்லயிருந்து எங்க குடியானவன் ஒருத்தன் ஒருநா விடியக்காலை மூணு மணிக்கி எங்க வீட்டுக்கு ஓடியாந்தான். எங்க அம்மா என்ன எழுப்பி கூட்டிக்கிட்டுப் போனபோது நான் பாத்தது இது. வந்தவன் கைகாலெல்லாம் நடுங்கிக்கிட்டு இருந்துச்சு. மூஞ்சியில ரத்தமேயில்ல. திக்கித்திணறி மூச்சு வாங்கி வாங்கி அவன் சொன்னது என்னன்னா....

மேய்ச்சலுக்குப் போன மாடு வீட்டுக்கு வரத் தாமதமானதால அதத்தேடிப் போன குடியானவன் ஆத்தங்கரையிலே ஒரு புதருக்குள்ளிருந்த பண்டலப் பாத்துட்டு நைசா வீ ட்டுக்குத் தூக்கிட்டு வந்துட்டான். பண்டலுக்குள்ளயிருந்தது அத்தனையும் நயமான சங்கு மார்க் லுங்கி. மொத்தம் நூத்தம்பது உருப்படி. சிலோனுக்குக் கொண்டுபோக யாரோ ஒளிச்சு வச்சிருந்தது இவன்கிட்ட மாட்டிருச்சி.எப்படியும் ரூபா நாலாயிரத்துக்கும் மேல தேறும்.அந்தக்காலத்தில நாலாயிரம்னா என்ன மதிப்புன்னு பாத்துக்குங்க 

ஆனா அன்னிக்கி ராத்திரிதான் பயலுக்குத் தெரிஞ்சது தனக்கு வந்திருக் கிறது அதிர்ஷ்டம் இல்ல அனத்தம்னு.இந்த ஊர்க்காரனுகதான் தூக்கி வந்திருக்கணும்னு அனுமானம் பண்ணி கடத்தல் கும்பல் ஊருக்குள்ள நுழைஞ்சு தேட ஆரம்பிச்சுருச்சி.பயந்து போன நம்மாளு படார்னு நெல்லுக்கொட்டி வைக்கிற பெரிய குதிரத் தெறந்து எல்லாத்தையும் அதுக்குள்ளே கொட்டி மூடி மண் பூசி வச்சிட்டான்.அப்பிடியே 
கெளம்பினவந்தான் இப்ப எங்கம்மா கால்லே விழுந்து 'என்ன காப்பாத்துங்கக்கா'ன்னு கதர்றான்.

எங்கம்மா 'ஏதாச்சும் பண்ணுடா'ன்னுட்டுப் போய்ட்டாங்க,உக்காந்து யோசிச்சேன்.எப்பவுமே நம்மகூடத் திரியிற ஆசைத்தம்பியையும் கோளாறு மச்சானையும் கூட்டிக்கிட்டேன்.கோளாறுனகிறது பேரில்ல. பட்டப்பேரு. அவருக்கு அவுக அப்பா வச்ச பேரு சுப்பிரமணி.நாங்க வச்ச பேரு கோளாறு .இந்தாளு எதைச் செஞ்சாலும் அது கடைசியில கோளாறுலதான் முடியும். அதுனால இந்தப் பேரு.

அப்பல்லாம் இந்தா ஈசப் படை மாதிரித் திரியுதே மோட்டார் சைக்கிளும் காரும் அதெல்லாம் கெடையாது.ட்ராக்டரும் கூட அபூர்வம்தான்.அதிக பச்ச சொகுசு வாகனம் கூண்டு வண்டிதான்.அது எங்க வீட்டிலேயே இருந்துச்சு.மலேயா போக்குவரத்துக்காரரு ஒருத்தர் வீட்டுல பெரிய சைஸு சூட்கேசு ஒண்ணு ரெடி பண்ணுனோம்.எங்களோட திட்டத்துக்குத் தோதா அன்னைக்கின்னு அம்மா ஊருக்குப் பக்கத்துல ஒரு ஐய்யனார் கோவில்ல ராத்திரிக்கி கூத்து.ஒரு ஆறு மணிக்கெல்லாம் மூணுபேரும் வண்டியப் பூட்டிக்கிட்டுக் கிளம்பிட்டோம்.

எட்டரை மணி போல அம்மா வீட்டுக்குப் போயிட்டோம்.போற வழியிலேயே வண்டியகூட நிறுத்தாம நைசா சூட்கேச மாரிமுத்தன் வீட்டுக்குள்ள தூக்கி வீசீட்டு  போய்ட்டோம்.கூத்துப் பாக்க வந்திருக்கோம்னு நெனைச்சு தாத்தாவுக்கு ரொம்ப சந்தோசம்.சாப்பிட்டு முடிச்சுட்டு நான் மட்டும் மாரிமுத்தன் வீட்டுக்கு போயிப்பாத்தா புருசனும் பொண்டாட்டியும் குதிரப்பிரிச்சு எல்லாத்தையும் அள்ளி சூட்கேசுக்குள்ள திணிச்சுக்கிட்டிருக்காக.பொட்டி பிதுங்குது.மள மளன்னு எல்லாத்தையும் சரிபண்ணிகிட்டிருக்கோம்,வெளிய எங்கயோ சத்தம் கேக்குது.கள்ளக் கடத்தல் காரைங்க சத்தம்தான் அது. ரெண்டுபேரு ஒடம்பும் ஒதறுது பாரு. எனக்கே மயிரெல்லாம் சிலிர்த்திரிச்சி. விறுவிறுன்னு போயி தாத்தாக்கிட்ட சொல்லிட்டு வண்டியப் பூட்டிட்டோம்.

சரசரன்னு தெருவுல  வண்டிச்சக்கரத்தோட சத்தம்  மட்டுந்தான் கேக்குது.
மாரிமுத்தன் வீ ட்டு வாசல்ல வண்டிய நிறுத்தாம நானும் கோளாறும் மட்டும் இறங்கி ஒரே தம்முல  பொட்டியத் தூக்கிக்கிட்டு ஓடிவந்து வண்டியில ஏறிட்டோம்.ஆசைத்தம்பி பந்தய வண்டியே ஓட்டறவன்.எங்க ஊருச் சாலையைப் புடிச்சு வண்டியும் நாங்களும் நிதானத்துக்கு வந்த போது தூரத்துல கூத்துக்கொட்டகை லைட்டு ஜெகஜோதியாத் தெரியுது. ஆர்மோனியக்காரன் கத்துன கத்தல வச்சு நாரதருக்குத் திரை தூக்கப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டோம்.

பதினோரு மணியப்போல வீ ட்டுக்கு வந்திட்டோம். சூட்கேசப் பிரிச்சி 
லுங்கியை எல்லாம் எங்க வீட்டு மச்சு மேல அடுக்கி வச்சோம் ராவோட ராவா பொட்டிக்காரக கிட்ட பொட்டிய ஒப்படைச்சோம்.ஒண்ணுமே நடக்காத மாதிரி எங்க ஊர்ல மறுநா பொழுது விடிஞ்சுச்சு..

ஒரு பத்து நாள் பொறுத்துப் பார்த்தோம. எந்தப் பிரச்னையும் இல்ல. கடத்தல் கும்பல் அடுத்த சவாரியக் கவனிக்கப் போயிருச்சு போல. ஒரு சத்தத்தையும் காணாம்.. சத்தியமா சொல்றேன் இன்னைக்கு வரைக்கும் நான், எங்கம்மா, மாரிமுத்தன்,அவன் பொண்டாட்டி, ஆசைத்தம்பி, கோளாறு   இந்த ஆறு பேரத் தவுர இந்த விஷயம் ஒரு ஈ காக்காயக்குத் தெரியாது.

கதை இன்னம் முடியல இரு .கிளைமாக்ஸு இனிமேத்தான் வருது. இந்தக் கதையில ஜெயிச்சது யாருன்னு நினைக்கிறே ?.... ஹீரோவா... இல்ல...வில்லன்தான் ஜெயிச்சான். எப்புடின்னு கேளு.. என்னன்னா பொருளெல்லாம் வீணா மச்சுல கிடக்கே அத எடுத்து வித்துப் பணமாக்கலாமேன்னு யோசனை செஞ்சோம்.பத்து பத்தா எடுத்துக் கிட்டுப் போயி பக்கத்து டவுனுல கடைகள்ல வந்த விலைக்கு வித்துரலாம்னு முடிவு பண்ணுனோம்.யோசனை,முடிவு எல்லாமே நம்ம கோளாறோடதுதான் .சரின்னு பொறுப்பை கோளாறுகிட்டயே ஒப்படைச்சோம்.

முதல் பத்து கடைக்குப் போச்சு.பணம் கேட்டபோது அடுத்த பத்த கொடுக்கும்போது பணம் கொடுப்பாங்கன்னாரு கோளாறு. அடுத்த பத்தும் கடைக்குப் போச்சு.இதுக்கும் அதே பதில்தான் கோளாறுக்கிட்டயிருந்து. இப்படி சரக்கு எல்லாமே கடைக்குப் போயிருச்சு.பணம்தான் ஒருபைசா கைக்கு வரலே. யாருக்கிட்டப் போயி இதுக்குப் பஞ்சாயத்து வைக்கிறது? இந்தக் கோளாறுப் பையன்கிட்ட நான் தோத்துப்போனதுதான் எனக்கு ரொம்ப வருத்தம்.

இந்த விஷயத்தில நான் பிளான் போட்டுக் கிழிச்சனோ இல்லையோ, ஆரம்பத்திலிருந்தே தெளிவாப் பிளான்  போட்டது கோளாறுதான்னு அப்புறமாத்தான் எங்களுக்குப் புரிஞ்சது..என்ன செய்யிறது ..? கோளாறு வாழ்றதுக்காக எவனோ ஒருத்தன் பணம் போட்டு சங்கு மார்க்கு லுங்கி வாங்கியிருக்கான்..எங்கயோ இருக்கற மாரிமுத்தன் அதத் தூக்கிட்டு வந்திருக்கான்..தூக்கிட்டு வந்தவனைக் காப்பாத்தறதுக்கு நாங்க 
கெளம்பியிருக்கோம்..என்னமோ சொல்றாங்களே ,என்னப்பா அது...?...கேயாஸ் தியரியா ..?...ஆமா....அந்த எபக்டுதான் போல இது....






' மணிமாறன் மாமா சொன்ன கதை-2' படிக்க சொடுக்குக 

http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_04.html





'அனுபவம் புதுமை ,அவளிடம் கண்டேன் 'படிக்க சொடுக்குக  http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_15.html








































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக