செவ்வாய், 3 ஜூலை, 2012

எழில் மிகு எல்லோரா

புகழ் பெற்ற எல்லோரா குகைக் கோயில்கள் பற்றிக் கேள்விப் பட்டிருப் பீர்கள்.அண்மையில் அங்கே சென்று வருவதற்கான அருமையான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அந்த எளிமையான அனுபவங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..தொடரலாமா  ?


ஷிர்டி சாய் பாபாவைத் தரிசனம் செய்வதுதான் எமது மகாராஷ்டிரா பயணத்தின் முதல் நோக்கம்..பயணத்துக்கு முன்பே எல்லோரா ஷீரடிக்கு அருகிலேயே இருப்பதை அறிந்திருந்ததால் அந்தக் கனவும் நினைவில் வந்துபோய்க்கொண் டிருந்தது..




சாய்பாபா தரிசனம் நிறைவேறியதும் பேருந்து நிலையத்துக்கு அருகே அமைந்திருந்த பயண ஏற்பாட்டாளர்களிடம் சென்று விசாரித்தோம்..அடுத்த நாள் காலை எட்டரை மணிக்கு வந்து விடச் சொன்னார்கள்..


அதன்படியே போய் நின்றோம்..250 ரூபாய் [ஒருவருக்கு] வாங்கிக் கொண்டு பயணச் சீட்டு கொடுத்தார்கள்..நல்ல நிலையில் இருந்த சுமோ வண்டி ஒன்றில் எட்டுப்பேர் வரையில் ஏற்றினார்கள்..நல்லவேளை.....தனியாளாக இருந்ததால் எமக்கு முன் இருக்கை கிடைத்தது..9.30 க்கு வண்டி கிளம்பியது.11 மணிக்கு ஏதோவொரு இடத்தில் காலை உணவுக்கு வண்டியை நிறுத்தினார்கள்..சாப்பாட்டுக்கடையில் இருந்தது அத்தனையும் சாட் என்ற வகையிலான  உணவுப்பண்டங்கள்..




நம் ஊர் போண்டா போல எதோ ஒன்றை விழுங்கி தேநீர் குடித்து சுத்திகரிக்கப்பட்ட நீரையும் குடித்து [ இந்த இடத்தில் தண்ணீர் பா ட்டிலை தமிழில் எழுத முயன்றோம்..முடியவில்லை..பாட்டிலுக்கு ஏதாவது தமிழ் வார்த்தை இருக்கிறதா ? ] பசியாறிக்கொண்டோம்.. அடுத்து எங்கும் நிற்காது பயணித்து 12.30 மணியளவில் எல்லோராவை அடைந்தோம்.. முதலில் அங்கேயிருந்த சிவன் கோவிலுக்கு அழைத்துப் போனார்கள்.. அப்போது கடவுள் வழிபாடு நம் கருத்தில் இல்லாததால் கோவிலின் சிறப்புகள் எதுவும் கவனத்தில்  இல்லை..


அங்கிருந்து கிளம்பிய அடுத்த பத்து நிமிடத்தில்  அதிக உயரமில்லாத  மலைத்தொடர் ஒன்று நம் கண்ணெதிரே விரிந்தது..அருகில் சென்று முதன்மைக் குகைக்கோவில் எதிரே நிறுத்தினார் வண்டியோட்டி..நிமிர்ந்து பார்த்த நமக்குள்  சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ராவில் தாஜ்மஹாலைப் பார்த்தபோது ஏற்பட்ட பிரம்மாண்ட உணர்வுதான் கிளர்ந்தெழுந்தது.. 




ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் விரிவில் இங்கே உள்ள 32 குகைகளையும் நிச்சயமாக ஒருநாளில் பார்த்துவிட முடியாது..அப்படிப் பார்க்கவேண்டு மானால் தனிப்பட்ட பயணமாக வரவேண்டும்..அப்படிப் பார்க்க முடிந்தால் அது பழங்கால மனிதர்களின் மிகக் கடின உழைப்பையும் அர்ப்பண உணர்வையும் விடாமுயற்சியையும் நமக்கு எடுத்துரைக்கின்ற தெய்வீக அனுபவமாகவே இருக்கும்..




இந்த குகைக் கோவில்களின் சிறப்புகளை வெறும் வார்த்தைகளால் விவரிப்பது சரியாக இருக்காது என்பது எமது கருத்து..இங்கே வெளியிடப் பட்டுள்ள புகைப்படங்கள் அதை சிறிதளவு நிறைவு செய்யும் என்று கருதுகிறோம்..என்றாலும் நேரில் பார்ப்பது  மட்டுமே முழுமையானதாக இருக்கும்..














































இரண்டு மணி நேரம் மட்டுமே எம்மால் எல்லோராவில் இருக்க முடிந்தது..அது மிகக் குறைந்த நேரம் என்றாலும் அந்த அனுபவமே எமக்கு போதுமானதாக இருந்தது..


எல்லோராவிலிருந்து அடுத்து நாங்கள் சென்றது அவுரங்காபாத்.. தாஜ்மஹாலைப்  பிரதிபலிக்கின்ற  அவுரங்க சீப்பால் கட்டப்பட்ட ' பிவி கா மக்பாரா' என்ற கட்டிடமே இந்த நகரத்தின் சிறப்பு..எல்லோராவை ஒத்த புகழ் பெற்ற அஜந்தா குகைகள் இங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன..எங்கள் பயணப் பட்டியலில் அஜந்தா இடம்பெறாததால் அதைப் பார்க்க இயலவில்லை என்பது எமக்கு ஒரு மனக்குறை..


வழியெங்கும் மராட்டிய மாவீரன் சிவாஜி புரவிஎறிப் பாய்ந்து சென்ற வறண்ட மலைச் சரிவுகளையும் மொஹலாய சாம்ராஜ்யப் பிரம்மாண்டத்தின் மிச்சங்களையும் பார்த்து வரலாற்றுக் காலத்தை நினைவு கூர வாய்ப்புக் கிடைப்பது இந்தப்பயணத்தின் இன்னொரு சிறப்பம்சமாகும்..


பயணம் முடித்து இரவு 9.00 மணிக்கு ஷிர்டி திரும்பி வந்து சேர்ந்தோம்.. இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக மீண்டும் எல்லோரா  செல்வதாகத்தான் உத்தேசம்..







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக