புதன், 4 ஜூலை, 2012

மணிமாறன் மாமா சொன்ன கதை--2


கிராமத்தில் ஒரு கிடா விருந்து விழா அன்று ஒரு குவார்ட்டரும் ஒரு கட்டிங்கும் உள்ளே போன நிலையில் மணிமாறன் மாமா சொன்ன கதை இது..






இப்பத்தானே  உங்களுக்கு கவர்மெண்டே ஊருக்கு ஊரு கடையும் உக்காந்து குடிக்க பாரும் கட்டிக்குடுத்து வசதி பண்ணிக் குடுத்துருக்கு..அப்பல்லாம் ஒரு செம்பு கள்ளுக்கு நாங்க பட்ட பாடு இருக்கே..சொல்லி மாளாதுடா மாப்புள..இந்தா தெக்கே தெரியுது பாரு வேலிகாத்தான் காடு அதுக்கு அங்கிட்டு இருக்கு அந்த ஊரு.. பேரச் சொன்னாலும் ஊரச்சொல்லக்கூடாதும்பாங்க.......அத எல்லாரும் சின்னப் பாண்டிச்சேரின்னுதான் சொல்லுவாய்ங்க..ஊரச்சுத்தி பனைமரக் காடு. ஒரு வண்டி வாசி வரப்போக நாதியில்ல...உள்ள நுழைஞ்சு வெளிய வர்றது உம்பாடு எம்பாடுதான்..அதான் வசதியாப் போச்சு ஊர்க்காரய்ங்களுக்கு..

ஒரு பனை விடாம கள்ளுமுட்டி தொங்கும்..விடியக்காலம் நாலு மணிக்கி எறக்கிருவாய்ங்க. ராத்திரி ஏழு மணி வரைக்கும் இருக்கும்..கள்ளு மட்டும்னு இல்ல..ஊருக்கு கடைசியா இருக்கிற ஒத்தை வீட்டுல சாராயமும் இருக்கும்..அந்தி சாய ஆரம்பிச்சதும் நம்ம பயலுக கெளம்பிருவாய்ங்க... ஆசைத்தம்பிதான் மொத ஆளா நிப்பான்..ஒருநாளு சும்மா இவைங்க கூட வேடிக்கை பாக்கத்தான் போனேன்..என்னையும் புடிச்சுக்கிச்சி சனியன்..இப்ப மாதிரியா, என்கிட்டயே  வந்து குவாட்டருக்கு பத்து ரூபா கொறையுது குடுங்க மாமான்னு கேக்குறானே நாம்பாக்கப் பொறந்த இந்த சொக்கம்பய... அப்பல்லாம் ஊர்ப் பெரிய ஆளுகளுக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சி ஒளிஞ்சி போவமப்பு..

ஆங் ...அங்க எங்க செட்டுக்கின்னே கள்ளுப் பானைய மூடிவச்சிக் காத்துக் கிட்டு இருக்கும்ங்க ஆம்பிளையும் பொம்பிளையும்...போயி உக்காந்துட் டோம்னா பொம்பிளைக நாட்டுக் கோழிமுட்டை பொரிச்சுக் கொண்டு வந்து வைக்கும்ங்க..உக்காந்து உக்காந்து குடிச்சுப்புட்டு பத்து மணிக்கு மேலதான் எந்திருச்சி ஊருக்கு வருவோம்.

அந்த ஊர்ல பாண்டின்னு எம் மச்சினன் ஒருத்தன் இருக்கான்..அவம் பண்ற அட்டகாசம் இருக்கே நீங்கல்லாம்  தாங்கமாட்டியப்பு.. பாண்டியும் அவன் கூட்டாளி ராஜேந்திரனும் சேந்து குடிச்சுப் புட்டாய்ங்கன்னா ஊர அதகளம் பண்ணிருவாய்ங்க .நடு ராத்திரில மரத்தில ஏறி கள்ளை எறக்கி குடிப்பாய்ங்க. . ஓடைக் கரைப் புதருக்குள்ள ஒத்த வீட்டுக்காரன் புதைச்சு வச்சிருக்கிற சாராய ஊறலை அள்ளிட்டு வந்து வீட்டுக்குள்ளேயே வச்சிக் காயச்சி வடிச்சுருவாய் ங்க..ஊருக்கு வெளிய வயக்காட்டுல கிடையில கிடக்கிற ஆட்டக் களவாண்டு தின்னுருவாய்ங்க... அப்படியாளு  பாண்டி..

அவனும் வந்து எங்க கூடச் சேந்துக்குவான்..வயிறு முட்டக் கள்ளக் குடிச்சுப்புட்டு வரும்போது அந்த ஒத்த வீட்டுக்கிட்ட பாண்டிக்கு கால் தானா நின்னுரும் .ஒத்த வீட்டுக்காரரு கொல்லைக்குப் போயி வைக்கோல் போருக்குள்ள கைய விட்டு போத்தல எடுத்துக்கிட்டு வருவாரு,,சாராயம் ஒரு கிளாஸ ஊத்திக்கிட்டுத்தான் மேல நடப்பான் பாண்டி .. அதுக்கு அவன் ஒரு வெளக்கம் சொல்லுவான் பாரு'அதான் பெரிய காமெடி அது வந்து மறிச்சுக்கட்டுறதாம். .வெளங்குதா ஒனக்கு...? குடிச்ச கள்ளு வெளிய வந்துராம சாராயம் மறிச்சுக் கட்டிருமாம்..

திரும்பி கண்மாய்க்குள்ள வரும்போது ஊரு கண்ணுல பட்டதும் இங்க அப்பிராணி மாதிரி இருக்கிற இந்த கோளாறுபயல்  'இந்தா தெரியுது பார் தென்னிலங்கை. எப்படித்தான் தாண்டுவேனோ பெருங்கடலை''ன்னு ராகம் போட்டு அனுமார் மாதிரிக் குதிக்கிறதப் பாக்கணுமே. இவ்வளவுக்கும் இந்தக் கோளாறு சொந்தக்காசுல குடிக்கறதே இல்லன்னு ஒரு பாலிசி வச்சிருந்தாரு.. எவ்வளவு சுருக்கா முடியுமோ அவ்வளவு சுருக்கா முடிச்சுப்புட்டு படக்குன்னு வெளிய வந்து தூரமாப் போயி நின்னுக்குவாரு. காசு கொரஞ்சிச்சின்னா நாங்கதான் கடன் சொல்லிட்டு வரணும்..

இங்க நாங்க பொறம்போக்குப் பயலுக எல்லாம் ஒண்ணா எங்கயாவது பொட்டல்ல ,மந்தைலதான தூங்குறது ;அதுனால வீட்டுக்கு எங்க அலும்பு எதுவும் தெரியாது.. 

இந்த சீனியர்,,ஜுனியர்னு சொல்றீங்களே அது மாதிரி இந்த விசயத்தில எங்க ஊர்ல சின்னசெட்டு,,பெரிய செட்டுன்னு வேற இருந்துச்சு.பெரிய செட்டில சத்தி [ சக்திவேல் ] மச்சான் முக்கியமான ஆளு..என்னடா எல்லாம் மச்சான் முறையாவே இருக்கேன்னு பாக்கிறியா?...ஊரு நாட்டுல அப்படித்தாம்ப்பு...அண்ணன் தம்பில்லாம் ஒரு மரியாதைக்கு .ஒதிங்கிருவாய்ங்கல்ல ...மச்சினய்ங்கமாருதான் செட்டு சேத்துக்கிட்டு திரிவாய்ங்க...

சரி கதயக்கேளு..சத்தி மச்சான் என்ன பண்ணுவாருன்னா ஊருல வீட்டுக்கு வீடு கோழிக்கூடு  இருக்கும்ல...அதுல  அசந்தவன் வீட்டுக் கூட்டுல ஈரத் துணியப்போட்டுக் கோழியை அமுக்கி கையோட கொண்டுபோயிருவாரு. அன்னிக்கி கோழிக்கறியோட கள்ளு விருந்து நடக்கும்..சமையல் சாமான் ஒண்ணும் கிடைக்கலன்னா மயித்தப் பிச்சிக் கொடல எடுத்துட்டு உப்பையும் மொளகாயையும் உள்ள வச்சு  அமுக்கிச் சுட்டுத் தின்னுருவாய்ங்க

சத்தி மச்சான் அடிக்கடி சொல்ற ஒரு ஜோக்கு ஒண்ணு இப்ப ஜாபகத்துக்கு வருது..காலையில  'ச்சே...இனிமேல  குடிக்கவே மாட்டேன்' ம்பாரு... தெகச்சுப்போயி நாம பாக்கறதுக்குள்ள 'இனி ராத்திரிதான்''ன்னு முடிப்பாரு..கொல்லுனு சிரிப்போம்..சத்தி மச்சான் இப்ப குடிக்கிறத அறவே விட்டுட்டாரு.. அந்தக் கதைய அப்புறம் சொல்றேன்..ஆனா அவரு மகன் மொடாக் குடியன் ஆயிட்டான்..அதையும்  ஒரு காமெடியாச் சொல்லுவாரு..' நாம் படிச்ச புத்தகத்தை  மூடி வச்சுட்டேன்..இப்ப எம் மகன் அத எடுத்துப் படிச்சுக் கிட்டிருக்கான்..'



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக