ஞாயிறு, 15 ஜூலை, 2012

அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்






சமீபத்தில் நண்பர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் ஒன்று வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது..இதோ அவரே சொல்கிறார் கேளுங்கள்..


அன்றைக்கு காலை ஒரு புது நம்பரில் இருந்து மிஸ்டு கால் ஒண்ணு  வந்தது..நான் திரும்பக் கூப்பிடவில்லை..அடுத்து மதியம் ஒன்றும் சாயந்திரம் ஒன்றும் வந்தது..அதையும் நான் கேர் பண்ணவில்லை..அடுத்த நாள் காலை மறுபடியும் அதே நம்பரில் இருந்து மறுபடியும் மிஸ்டு கால்..யாரோ தெரிந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்து போனை எடுத்தேன்..போனில் இருந்தது ஒரு பொண்ணு..

'யாருங்க...?  ' -நான்

' ம் ..அது...வந்து..அங்கே வசந்தி இருக்காங்களா..?'

எதோ ராங்க் நம்பர் என்று முடிவு செய்து கட் பண்ணப் போகும்போது போன் குரல்

' நான் சேலத்திலே இருந்து பேசறேன்..'

என்றது..சட்டென்று எனக்குள்ள ஒரு ஜெர்க் அடித்தது..கொஞ்சம் யோசனையோடு கேட்டேன் .

'நீங்க யாரு பேசறீங்க ..? '  .

' நான் வசந்திக்குத் தெரிஞ்சவங்கதான் '....

இது ஏதோ வில்லங்கமாயிருக்குமோ என்று மனதில் பட்டது..உடனே

' அப்படில்லாம் இங்கே யாரும் இல்லீங்க போனை வைங் ,,'

'ஏன் ? பக்கத்துல யாரும் இருக்காங்களா..?'

என்று இடை மறித்த குரல் அதிர வைத்தது..இதுல  ஏதோ ஒண்ணு இருக்கற மாதிரி இருக்கு..ஆனா இல்லாத மாதிரியும் இருக்கே என்று S.J,சூரியா மாதிரி லேசாகக் குழம்பிய நேரத்தில் காதில் போன் குரல்

'பயப்படாதீங்க..நான் வசந்தியோட பிரண்டுதான்..எப்போ நீங்க தனியா இருப்பீங்க சொல்லுங்க..அப்போ பேசறேன்..'

எனக்கு லேசா உதறல் எடுத்தது..யோசிக்கணும்..டைம் வேணும்..

' சரி,,அஞ்சு மணிக்கு மேல பண்ணுங்க '...என்று போனை வைத்து விட்டேன்..

நான் ஏன் பதட்டப்பட வேண்டும்?...எனக்கு ஏன் உதறல் எடுக்க வேண்டும்....?  காரணம் இருக்கிறது..வசந்தி யாரோ தெரியாதவள் இல்லை.அவள் என்னுடைய பழைய கேர்ல் பிரண்டுதான்.ஊருல இருக்கும்போது ரெண்டு பேருக்கும் ஒருமாதிரி பழக்கம் உண்டு.இப்ப அவள் சேலத்திலதான் இருக்கிறாள்.எனக்கு உதறல் எடுத்ததுக்கு காரணம் இப்ப உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்.

சரியாக 5.30 மணிக்கு அந்த மிஸ்டு கால் வந்தது.கொஞ்சம் யோசித்து விட்டுத்தான் திரும்ப அழைத்தேன்.

'ஹலோ ' என்று ஹஸ்கியாக வந்த குரலைக் கேட்டு ஒரு மாதிரியாக இருந்தது.

' ஹலோ,என்ன விஷயம் சொல்லுங்க .எதுக்காக போன் பண்ணீங்க ...? 'என்றேன்.

' என்னோட பெஸ்ட் பிரண்டோட பிரண்டுக்கு நான் போன் பண்ணக் கூடாதா..? '

சரிதான் .எல்லா விஷயமும் தெரியும் போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

' என்னோட போன் நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது ? '

' வசந்தி சொல்லியிருக்கா ,அதோட நோட்புக்ல வேற எழுதி வச்சிருக்காளே '

' ஓ ...சரி, இப்ப உங்க பிரண்டு எங்கே ?'

' திருப்பூர்ல வேலை கிடைச்சுப் போயிட்டா '

மறுபடியும் மண்டைக்குள் ஏதேதோ எண்ணங்கள் குறுகுறுவென ஓடின.

' ம் ..அப்போ உங்க பிரண்டுக்குத் தெரியாமத்தான் போன் பண்றீங்களா? '

' ஆமா.ஏன் பண்ணக்கூடாதா....?'

' பண்ணலாம்,பண்ணலாம் .அது ஒண்ணும் தப்பில்ல ...'

என்று தட்டுத் தடுமாறிவிட்டு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் திணறி எப்படியோ பேச்சை முடித்துக்கொண்டேன்.ஆனால் இந்த மிஸ்டுகால் விவகாரம் முடிவதாயில்லை.தினம் இரண்டுமுறை என்று தொடர்ந்தது. வேறுவழி இல்லாமல் நானும் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.  என்ன பேசுவது என்று தெரியாமல் பெயர் விசாரித்து ...எதை எதையோ உளறி -உளறி வழிந்தது எல்லாம் நான்தான், அந்தப்பக்கத்தில் எல்லாமே தெளிவாக இருந்தது- எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருந்த பேச்சு ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு வழியாக தடத்துக்கு வந்து சேர்ந்தது.

' மூஞ்சியே தெரியாமல் பேசிக்கிட்டுருக்கிறோம்,கருப்பா சிவப்பான்னு கூடத் தெரியல.'

'ஒரு நாள் நேர்ல பாத்துட்டாப் போச்சு ..'

' எப்பப் பாக்கலாம். ?.'

' பார்க்கலாம்.ஆனா யாரு யாரப் பார்த்துட்டு ஓடப் போறாங்கன்னுதான் தெரியல. '

' நான் கருப்பு. பாத்துட்டு உங்களுக்கு பிடிக்காமப் போயிருச்சின்னா....? '- நான்.

' கருப்பா..? ஐயைய ..சரி, என்ன பண்றது....இவ்வளவு தூரம் வந்துட்டமே...அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.' - மிஸ்டுகால் பார்ட்டி .

சரி,சுருக்கமாக கதையை முடித்துக் கொள்கிறேன். ஒரு மாதத்துக்குப் பிறகு ஒருநாள். சற்று முன்னதாகவே சென்றுவிட்ட நான் விழுப்புரம் பஸ் ஸ்டாண்டில் சேலத்திலிருந்து வரும் பஸ்சுக்காகக் காத்திருந்தேன்.கொஞ்ச நேரத்தில் மிஸ்டுகால் வந்தது.அதாவது செல்போனில் மிஸ்டு கால் வந்தது.

' எங்கே இருக்கீங்க..?'

' பஸ் ஸ்டாண்டில் தான் நிக்கிறேன்..'

' என்ன கலர் சட்டை போட்டிருக்கீங்க..? '

' வெள்ளை, நீங்க  ? '

' மஞ்சள் கலர் சேலை கட்டியிருக்கேன் பாருங்க....'

நான் கண்டுபிடித்து விட்டேன்.ஆனால் சேலையை வைத்து அல்ல. நான் போன் பண்ணியபோதெல்லாம் ஒரு பெண் தன்னுடைய போனை எடுத்துப் பார்த்ததிலிருந்து. உண்மையில் மிஸ்டுகால் பார்ட்டி அணிந்திருந்தது சிவப்புக் கலர் சேலை. அதே போல நான் போட்டிருந்ததும் வெள்ளை சட்டை இல்லை. நீலக்கலர் கோடுபோட்ட டி சர்ட் . பார்க்க ஆள் பரவாயில்லைதான்.அருகில் போய் நான் நின்றதும் நிமிர்ந்து பார்த்த முகத்தில் திடுக்கென்று ஒரு அதிர்ச்சி தெரிந்தது.சில நொடிகளில் அது சரியாகி லேசான புன்னகை மலர்ந்தது.

'ஏன் புடவை கலரை மாத்திச் சொன்னீங்க ?'

'நீங்க என்னைக் கண்டுபிடிக்கறதுக்கு முன்னாடி நான் உங்களை கண்டு பிடிச்சுடனும்னுதான்.'

' கண்டுபிடிச்சிட்டா.....? '

' ஆள் அப்பிடி இப்பிடி இருந்தா அப்படியே எஸ்கேப் ஆயிரலாம்ல ....,நீங்களும் அப்படித்தானே நெனைச்சிருக்கீங்க...?'

நண்பர் முழுக்கதையும் சொல்லிவிட்டுத்தான் முடித்தார்.. ஆனால் நான் இதற்கு மேல் சொல்வதாக இல்லை.இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ஆனால் கண்டிப்பாக சொல்லியாக வேண்டிய ஒரு விஷ்யத்தைச் சொல்லிவிட்டு நிறுத்திக்கொள்கிறேன். நண்பர் அந்த மிஸ்டு காலிடம்  கேட்டாராம் ,

' முன் பின் தெரியாத என் கூடப் பேசணும்னு தோணுனதுக்கு என்ன காரணம் ' னு .

அதுக்கு அவங்க சொன்னாங்களாம்.,

' வசந்தி அடிக்கடி உங்களைப் பத்தி பேசுவா.கொஞ்சம் ஓவராவே பேசுவா.அவ பேசப்பேச எனக்கு கடுப்பா வரும். அவளுக்கு முடிஞ்சது நம்மால முடியாதான்னு தோணும்  .சந்தர்ப்பம் வந்தது , போன் போட்டேன். ஒரு விஷயம் தெரியுமா ? எனக்கு ஒரு கெட்ட குணம். எதாயிருந்தாலும் அது எனக்குன்னு இருக்கணும்.பெஸ்ட் பிரண்டாவே இருந்தாலும் பங்கு போட்டுக்க முடியாது. சரியா..? '

எப்படி இருக்கு நாட்டு நடப்பு பாத்தீங்களா ..? எல்லாம் காலம் செய்யும் கோலம்.

'



 

' இளைய ராஜாவிடம் கதை சொன்னேன் ......'படிக்க சொடுக்குக

http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_1294.html








' தேவ செய்தி -ஒரு அனுபவம்' படிக்க சொடுக்குக

http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post_13.html












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக