வெள்ளி, 13 ஜூலை, 2012

தேவ செய்தி-ஒரு அனுபவம்





                                       


மிக அவசியமான சில நேரங்களில் தேவ செய்திகள் நமக்குக் கொடுக்கப்
பட த்தான் செய்கின்றன.நாம்தான் அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று .படித்துப் பாருங்கள்.

எங்கள் கிராமத்தில் இருக்கின்ற மிகப்பழமையான பாழடைந்த சிவன் கோவில் ஒன்றைப் புதுப்பிக்கும் பணி  நடைபெற்று வருகிறது.ஏறக்குறைய முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே சிதிலமடைந்து போயிருந்த தட்சிணாமூர்த்தி [ குரு பகவான் ] சிலைக்குப் பதிலாக புதிய சிலை ஒன்று செய்திருந்தோம். எங்களுக்குத் தோன்றிய யோசனைப்படி கோவிலின் தெற்குச் சுவரில்  சிதிலமடைந்த சிலை இருந்த அதே இடத்தில் மரம்  ஒன்று குடை விரித்தது போன்ற கான்க்ரீட் அமைப்பை உருவாக்கி அதன் கீழ் சிலையை நிறுவும் திட்டத்தோடு இருந்தோம். நாங்கள் யாரும் எப்போதும் கோவிலில் இருப்பதில்லை.ஸ்தபதியின் மேற் பார்வையில்  வேலைகள் நடந்து வந்தன.




நான் கிராமத்துக்குப் போகும் சமயங்களில் காலையும் மாலையும் கோவிலுக்குச் சென்று பார்ப்பது உண்டு. வெயிலுக்குப் பயந்து மாலை 5.30 மணிக்கு மேல்தான் கோவிலுக்குச் செல்வது வழக்கம்.அன்று ஏதோ ஒரு மன உந்துதலில் 4.00 மணிக்கே  எழுந்து கோவிலுக்குச் சென்றேன். நான் போன நேரத்தில் அந்த மரககுடை அமைப்புக்காக நான்கடி ஆழப் பள்ளம் தோண்டப் பட்டு அதில் கொட்டுவதற்காக கான்க்ரீட்டும் கலக்கப்பட்டுத் தயாராக இருந்தது. பள்ளத்தை நிரப்புவதற்காக முதல் சட்டி கலவையை பணியாள் எடுத்துவந்தபோது பள்ளத்துக்குள் கோவிலின் அடிப்பாகமாக அமைந்திருந்த ஒரு கல்லில் ஏதோ எழுத்துப் பொறிப்புகள் இருப்பது என் கண்ணில் பட்டது.

அப்படியே வேலையை நிறுத்திவிட்டு கவனித்துப் பார்த்ததில்  மண்ணுக்குள்
4 x 2 அடி அளவுள்ள முழு பழங்காலக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டது. அது யாரோ கோவிலுக்கு அளித்த நில மானியம் பற்றிய குறிப்பு களைக் கொண்டிருந்தது. அந்தக் கல்வெட்டைப் பார்த்ததும் அதைக் கான்க்ரீட்டால் மூடிப்பூசி மரக்குடை அமைக்க மனம் ஒப்பாமல் அந்த  எண்ணத்தைக் கை விட்டுவிட்டோம்.அதற்குப் பதிலாக கல்வெட்டு வெளியே தெரியும் வகையில்  மேடை அமைப்புடன் கூடிய ஒரு புதிய சந்நிதி வடிவத்தை  ஸ்தபதி வரைந்து தந்தார்.இந்தப் புதிய சந்நிதியின் வடிவம் எல்லோருக்கும் பிடித்துப் போனது.இப்போது புதிய வரைபடத்தின் அடிப்படையில் பணிகள் நடக்கின்றன.

 அன்று எப்போதும் போல் நான் 5.30 மணிக்கு கோவிலுக்கு வந்திருந்தால் அந்த நேரத்துக்குள் கான்க்ரீட் கலவை முழுவதும் கல்வெட்டு இருந்த பள்ளத்தில் கொட்டப்பட்டு அதில் கான்க்ரீட் தூண் நடப்பட்டு மரக்குடை அமைப்புப் பணி நிறைவடைந்திருக்கும். கல்வெட்டு நிரந்தரமாக மூடப்பட்டிருக்கும். குருபகவானுக்கும் மரக்குடை சன்னதியே அமைந்திருக்கும்.

இங்கே நான் சொல்ல வருவது என்ன வென்றால் இந்தச் செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும்  வண்ணம் வழக்கத்துக்கு மாறாக 4 மணிக்கே எழுந்து கோவிலுக்குப் போக வேண்டும் என்று எனக்கு உந்துதல் தந்தது எது..?

இது தற்செயலா.., அல்லது தெய்வச் செயலா..?

நடந்து முடிந்த நிகழ்வுகளின் காரண காரியங்களை ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்த பிறகு நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்.

கோவிலின்  பூஜை,புனஷ்காரப் பணிகளுக்கு நிலங்களைத் தானம் அளித்து பெரும் புண்ணியம் தேடிக்கொண்ட  அந்தக் கொடையாளனின் பெயர் மண்ணுக்குள் புதைந்து விடாமல்  காலமெல்லாம் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்பது தெய்வத்தின் அனுக்ரகமாகயிருக்க வேண்டும் அல்லது தனது சன்னதி எப்படி அமைய வேண்டும் என்பதை தெய்வமே இந்த மனிதருக்கு உணர்த்தத் தலைப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்த இரண்டு செயல்களுமே செம்மையாய் நிறைவேற இறைவன் கருணை கூர்ந்திருக்க வேண்டும்.

இவை எல்லாம் இனிதே நிறைவேற வந்த தேவசெய்தியே வழக்கத்துக்கு மாறாக 4.00 மணிக்கே எழுந்து கோவிலுக்குப் போகவேண்டும் என்ற அந்த உந்துதல் .சரிதானா...?








' மணிமாறன் மாமா சொன்ன கதைகள் -3 ' படிக்க இங்கே சொடுக்கவும் 
http://thenpothikai.blogspot.in/2012/09/3.html





' மீனவர் பிரச்னை -ஒரு கசப்பான உண்மை ' படிக்க சொடுக்குக
http://thenpothikai.blogspot.in/2012/10/blog-post_6.html









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக