சனி, 21 ஜூலை, 2012

இளையராஜாவிடம் கதை சொன்னேன், வாலியிடம் கரெக்சன் சொன்னேன்.


சமீபத்தில் தொலைக்காட்சியில் சேனல்களுக்கிடையே அலைந்து கொண்டிருந்தபோது ஒரு சேனலில் ' கல்லுக்குள் ஈரம் ' படத்தின் துவக்கக் காட்சி கண்ணில் பட்டது.அதைச் சிறிது கவனித்தேன்.ஏதோ ஒன்று என்னை அங்கேயே நிறுத்தி வைத்தது. அனேகமாக அது பாரதிராஜாவின் இளமைத் தோற்றமாக இருக்கலாம். அவர் மட்டுமல்லாமல் அடுத்தடுத்து மனோபாலா, ஜனகராஜ், சந்திரசேகர் போன்றவர்களின் இளமைக்கால உருவங்கள் மனதுக்கு பரவசம் தந்தன.

படத்தைப் பார்க்கப்பார்க்க கொஞ்சம் கொஞ்சமாக நெஞ்சுக்குள் ஒரு வியப்பு பிரம்மாண்டமாகத் திரண்டெழுந்தது.பல ஆண்டுகளுக்கு முன்பு பல தடவை பார்த்த படம்தான் என்றாலும் அப்போது நாம் கொண்டிருந்த கண்ணோட்டம் வேறு. ஏராளமான உலகத் திரைப்படங்களையும் உள்ளூர்த் திரைப் படங்களையும் கண்ணுற்ற பிறகு கிடைத்திருக்கின்ற இன்னொரு  பரிமாணத்தோடும் இன்னும் தெளிவான கண்ணோட்டத்தோடும் இந்தப் படத்தை இப்போது பார்க்கையில் வியப்பு அதிகமானதே தவிர குறையவில்லை. 

அன்னியப் படங்களைத் தமிழாக்கம் செய்தும் இங்கே கெட்டுப் புளித்துப் போயிருந்த  கலாச்சாரக்  கசடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியும்   தமிழ் இயக்குனர்கள் பெயர் வாங்கிக் கொண்டிருந்த காலத்தில் நீண்ட அடை மழைக்குப்பின் பசுமை சூழப் பிறந்த புதிய விடியல்போல் தமிழ்த் திரைக்குள் வந்து சேர்ந்த பாரதிராஜா என்ற கலைஞ்ன் தமிழ்க் கலாசாரத்தின் உன்னதங்களை மட்டும் அல்லவா உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறான்.

மாராப்பு விலகவில்லை; தாவணி சரியவில்லை. உள்ளங்கைகளுக்குள் புதைந்த முகத்தை ஒரு கை விரல்கள் மட்டும் சற்றே விலக்கிக் காட்ட  அங்கே  தெரியும்  ஒற்றைக் கண்ணுக்குள்ளிருந்து ஓராயிரம்  கதைகளல்லவா தெறித்துக் கிளம்புகின்றன..பெண்களின் கண்களல்லவா பாரதிராஜாவுக்கு கதை சொல்லும் கருவியாக இருந்திருக்கிறது..

கதாநாயகி அருணாவின் பெரிய கண்களும் வட்ட முகமும் வெளிப்படுத்திய காதல் உணர்வுகள் புல்லரிக்க வைத்தன. ஒரு 16 வயதுப் பெண்ணிடமிருந்து எந்த அளவுக்கு மிகத்  துல்லியமாக இதை வெளிக்கொணர்ந்திருக்கிறார்  இயக்குனர்..? கதாபாத்திரங்களின் ஒவ்வொரு சிறு அசைவும் கூட உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது..ஒவ்வொரு பிரேமும் உணர்ந்து செதுக்கப்பட்டு காட்சிகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன.

இசைஞானியைப் பற்றி சொல்லவே தேவையில்லை.இயக்குனரால் செதுக்கப்பட்ட அந்த ஒவ்வொரு பிரேமுக்கும் இசையால் இவர் உயிர் கொடுத்திருக்கிறார்.

முடிவேயில்லாது நீண்ட விளம்பரத் தொல்லைகளையும் பொறுத்துக் கொண்டு படத்தைப் பார்த்துவிட்டுத்தான் எழுந்தேன்.

படத்தில் நாயகியின் மாமனாக நடித்த, பின்னாட்களில் ' கல்லுக்குள் ஈரம் ராமநாதன்' ஆக மாறிய எங்களின் சீனியர் அண்ணன் ராமநாதனைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இந்தப் படத்தில் மீண்டும் அவருடைய  நடிப்பைப் பார்த்தபோது ஏன் இவர் வெளிச்சத்துக்கு வராமல் போனார்  என்று நெஞ்சில் ஒரு நெருடல் தோன்றியது.அடிப்படையில் துணை இயக்குனரான அவர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து ' ஜங்சன் ' என்ற படத்தையும் இயக்கி கடைசியில் காணாமலேயே போய்விட்டார். அன்று ஒருநாள் போரூர் சிக்னல் அருகில் கண்ணாடி அணிந்து ஒரு பெரியவர் தோற்றத்தில் அவரைக் காண நேர்ந்தபோது மனது வலித்தது.

நல்ல படமாக இருந்தாலும் ' கல்லுக்குள் ஈரம் ' ஏன் சரியாக ஓடாமல் போனது என்ற கேள்விக்கு என்னிடம் ஒரு விளக்கம் இருக்கிறது.அதாவது......திரைப்பட உருவாக்கத்தைப் பின்னணியாகக் கொண்ட எந்தத் தமிழ்ப் படமுமே ஓடியதாக இங்கே வரலாறில்லை.இந்தப் படத்தின் ஹீரோ திரைப்பட இயக்குனராக இல்லாமல்  பாரதிராஜாவின் வழக்கமான கதை நாயகர்களான வாத்தியாராகவோ அல்லது மாட்டு டாக்டராகவோ  கூட இருந்திருக்கலாம். பாதகமில்லாமல் இருந்திருக்கும்.

இந்த சாபக்கேட்டிலிருந்து கடைசி நேரத்தில் தப்பித்த ஒரு படத்தின் நினைவு இப்போது வருகிறது.மறைந்த இயக்குனர் நண்பர் கணேஷ்ராஜ் ' சின்னத்தாயி ' கதையை தயாரிப்பாளர் வேதா சாரிடம் சொல்வதற்கு முன்னாள் என்னிடம் சொன்னார். கதையின் இறுதியில் கதாநாயகியைக் காப்பாற்றவரும் சினிமா உதவி இயக்குனர் கேரக்டர் ஒன்று இருந்தது. ஒருவேளை தன்னை feel பண்ணி கணேஷ் அந்த கேரக்டரை உருவாக்கியிருக்கலாம். கதையை முழுவதும் சொல்லிமுடித்த பிறகு அபிப்பிராயம் கேட்டார் கணேஷ்.  அந்த உதவி இயக்குனரைத் தவிர மற்றதெல்லாம் ஓ கே என்று நான் சொன்னேன். ரொம்ப யோசித்தபிறகு அது ஏற்றுக் கொள்ளப்பட்டு போலீஸ் அதிகாரியாக அந்த கேரக்டர் மாற்றப்பட்டது. அந்தக் கேரக்டரில் ராதாரவி நடிக்க படம் ஹிட்டானது.

' சின்னத்தாயி ' படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த எனக்குக் கிடைத்த வாய்ப்பு ஒன்றை எப்போதும் என்னால் மறக்க முடியாது. திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்க சென்னையில் பாடல் பதிவுக்கு நேரம் கொடுத்துவிட்டார் இசை ஞானி இளையராஜா. பாடலுக்கு சிச்சுவேசன் சொல்ல என்னை அனுப்பினார் கணேஷ்ராஜ். இயக்குனர்களே ராஜாவை அண்ட முடியாத காலக்கட்டம் அது. ஆனால் எதனாலோ எனக்கு அனுமதி கிடைத்தது.

இசை ஞானியின் அறையில் நாங்கள் இரண்டே பேர் மட்டுமே  இருக்க 'சொல்லு' என்று ஒரு வார்த்தை மட்டுமே பேசினார்  எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் சிட்சுவேசனை விளக்கி திட்டு எதுவும் வாங்காமல் தப்பித்து விட்டேன்.அந்த தைரியத்தில் ராஜா சாரின் ட்யூனுக்கு பாடல் எழுதிக் காண்பித்த வாலி சாரிடம் பாடலில் இரண்டு வரிகளை மாற்றும்படி  சொல்லிவிட்டேன். எழுதிய பாட்டை அவர் என்னிடம் காண்பித்ததே பெரிய விஷயம்.

வாலி சார் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.' ராஜாவுக்கு தெறிஞ்சா கோபப்படுவான்.இப்படியெல்லாம் செய்யாதே ' என்றதோடு நிறுத்திக் கொண்டார். ஆனால் வரிகளை மாற்றிக் கொடுத்தார். அதனால்தான் எல்லோருக்கும் பிடித்தவராக இன்றும் இளமையோடு வலம் வருகிறார் அவர்.

அந்தப் பாட்டு எதுவென்று சொல்லவில்லையே.....' ஏரிககரை மேலிருந்து எட்டுத்திசை பார்த்திருந்து ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணல...'





' பயணங்கள் ' சிறுகதை படிக்கச் சொடுக்குக 
http://mpmathivanan.blogspot.in/2012_11_01_archive.html



' மஞ்சள் சுரிதார் ' சிறுகதை படிக்க சொடுக்குக 

http://mpmathivanan.blogspot.in/2012/11/blog-post_14.html







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக