வியாழன், 19 ஜூலை, 2012

உலக சினிமா அறிமுகம்- ' Not one less '

சீன நாட்டில் ஒரு தொலை தூரக் கிராமத்தில் ஒரு சாதாரண ஆரம்பப் பள்ளிக்கூடம். தாய்க்கு உடல்நலம் சரியில்லாததால் அதன் ஆசிரியர் ஒரு மாத விடுமுறையில் ஊருக்குக் கிளம்ப ,கிராமத்தின் தலைவர் மாற்று ஆசிரியர் கிடைக்காமல் பக்கத்து ஊரிலிருந்து 'வேய் ' என்ற ஒரு 13 வயதுப் பெண்ணை 50 'யுவான்' சம்பளம் பேசி அழைத்து வருகிறார். அவள் மேல் நம்பிக்கையில்லாத ஆசிரியர் வேறு வழியின்றி 'எப்படியாகிலும் ஒருவர் கூட பள்ளியிலிருந்து நின்று விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் .அப்படி யானால்தான் 50 யுவானை ஊர்த் தலைவரிடமிருந்து தன்னால் வாங்கித் தர முடியும் ' என்ற நிபந்தனையோடு கிளம்பிப் போகிறார்.



'ஷாங் ' என்ற சிறுவன் வேய்யை டீச்சராக ஏற்க  மறுத்து வகுப்பில் சேட்டை செய்கிறான். இதற்கிடையில் வேகமாக ஓடும் திறமை கொண்ட ஒரு மாணவியை ' வேய் ' யின் கடும் எதிர்ப்பையும் மீறி நகரத்து விளையாட்டு மேம்பாட்டுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார் தலைவர்.மேலும் ஒரு அடியாக ஷாங் திடீரென பள்ளியில் இருந்து நின்று விடுகிறான்.குடும்பக் கடனை அடைப்பதற்காக சாங்கின் பெற்றோர் அவனை நகரத்துக்கு வேலைக்கு அனுப்பி விடுகின்றார்கள்.

வேய் சோர்ந்து போகிறாள். எப்படியும் ஷாங்கை மட்டுமாவது நகரத்திலிருந்து திரும்ப பள்ளிக்கு அழைத்து வர முடிவு செய்கிறாள்.நகரத்துக்குச் சென்று ஷாங்குடன் திரும்ப 9 யுவான் பணம் வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் கணக்குப் போட்டுச் சொல்கிறார்கள்.அந்தப் பணத்தை தலைவர் உள்பட யாரும் வேயக்கு கொடுப்பதாக இல்லை.மாணவர்கள் எல்லோரும் தங்களிடம் இருக்கும் பணத்தை வேயிடம் கொடுத்தாலும் அது போதுமானதாக இல்லை. ஒரு மாணவி சொன்ன யோசனையின்படி எல்லோரும் ஒரு செங்கல் சூளைக்குச் சென்று கல் சுமக்கிறார்கள். மேலாளரோடு ஒரு சண்டைக்குப் பிறகு 15 யுவான் கிடைக்கிறது.தேவைக்கு அதிகமாக உள்ள 6 யுவானுக்கு இரண்டு கோககோலா கேன் வாங்கி முதன்முறையாக சுவைத்துப் பார்க்கிறார்கள்.

ஆனால் பேருந்து நிலையம் சென்ற பிறகுதான் நகரத்துக்குச் சென்றுவர 56 யுவான் வேண்டும் என்பது தெரிகிறது.இந்தப் பணத்தை சம்பாதிக்க எவ்வளவு செங்கல் சுமக்க வேண்டும் என்று மறுபடி கணக்குப் போட்டுப் பார்த்து அது முடியாத காரியம் என்பதை உணர்கிறார்கள்.பயணச் சீட்டு இல்லாமல் பஸ் ஏறும் வேய் இறக்கி விடப்படுகிறாள். வேய் ஒரே முடிவோடு நடந்தே நகரத்தை அடைகிறாள்.அதன்பிறகு வருகின்ற உச்சக்கட்ட காட்சிகள் எல்லாம் நெஞ்சை நெகிழச் செய்கின்ற கவிதைகள்.

அந்தக் குழந்தைகளை மிக எதார்த்தமாக கதாபாத்திரங்களாக வாழச் செய்திருக்கின்ற விதம் அற்புதம்.நகரத்துக்குச் சென்று வரத் தேவையான பணத்தைச் சம்பாதிக்க ஒவ்வொரு முறையும் குழந்தைகள் கூடி கணக்குப் போடுவது சுவாரஸ்யம்.இதை மறைந்திருந்து பார்க்கின்ற கிராமத் தலைவர் டீச்சர் வேய் மாணவர்களுக்கு நன்றாகக் கணக்குப் பாடம் சொல்லித்தருவதாக மெச்சிக்கொள்கிற காட்சி புன்னகையை வரவழைக்கிறது.

பல சர்வதேச விருதுகளை வென்ற இப்படம் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக